PUBLISHED ON : செப் 20, 2026

* எம்.நாசர், ராமநாதபுரம்: 'மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் பணியில் இனி தவறு ஏற்பட்டால், மேற்பார்வை பொறியாளர்களே பொறுப்பேற்க வேண்டும்...' என, தமிழக மின்வாரியம் எச்சரித்துள்ளது குறித்து...
இப்படி எல்லா துறைகளிலும், 'மைக்ரோ' அளவில், தவறுகளுக்கு பொறுப்பேற்க வைத்தால், பல குற்றங்கள், வேலைக் குறைபாடுகள் நீங்கும்; மக்களுக்கும் விடிவு கிடைக்கும்!
ஜி.பாக்கியலட்சுமி, பாலக்காடு: ம.பி., மாநிலத்தில், மாசுபட்ட அஜ்னார் நதியை சுத்தப்படுத்திய, 20 வயது மாணவன், பிட்டு தபாஹி பற்றி அறிந்த நெதர்லாந்து, 'ஓஷன் கிளீனப்' நிறுவனம், அவரை வேலைக்குச் சேரும்படி அழைத்துள்ளதே...
தனி மனிதராக, ஒரு ஆற்றையே சுத்தம் செய்த, பிட்டு தபாஹி என்ற அந்த இளைஞர், நம் நாட்டின் பொக்கிஷம். அவரை மற்ற நாடுகள் கவர்ந்து செல்லாமல், உரிய மரியாதையும், வேலையும் கொடுத்து பெருமைப்படுத்த வேண்டியது, இந்திய அரசின் கடமை!
கே.பாலு, ராமநாதபுரம்: 'பெட்டிஷன் போடுவதற்கும், கேஸ் போடுவதற்குமே, ஆர்.எஸ்.பாரதியை, தி.மு.க.,வில் வைத்துள்ளனர்...' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர், சண்முகம் கூறுகிறாரே...
கூடவே, 'வாய்க்கு வந்தபடி மற்றவர்களை அவதுாறு பேசுவதற்கும்...' என்றும் சேர்த்துக் கொள்ளலாம்!
கி.பாலமுருகன், ராமநாதபுரம்: 'காவலர்களின் பணிச்சுமையைக் குறைக்க, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பணிபுரியும் சூழல் உருவாக்கப்படும்...' என, முதல்வர் விஜய் கூறுகிறாரே...
மிக நல்ல விஷயம். சாதாரண சாலை, 'சிக்னல்'களில் மக்கள் சிக்கித் தவிப்பது முதல், பல தொல்லைகளிலிருந்து விடுபடலாம். கூடவே, காவலர்களின் மொபைல்போன் பயன்பாட்டைக் குறைக்கும் நடவடிக்கையிலும் முதல்வர், விஜய் ஈடுபட்டால், மக்களுக்கு பேருதவியாக இருக்கும்!
கே.ராம்குமார், கோவை: 'தமிழனுக்கு மூளை இருக்கா... இல்லையா? விஜய் என்ன சாதிச்சாருன்னு தேர்ந்தெடுத்தாங்க?' என்று, அ.தி.மு.க.,வின், செல்லுார் ராஜு பேசி இருக்கிறாரே...
ஓ... வைகை நதி ஆவியாகாமல் இருக்க, 'தெர்மோகோல்' போட்டு மூடி, 'காப்பாற்றி'னாரே... அந்த ராஜுவா... அவருக்குத் தோன்றியதைச் சொல்லி இருக்கிறார்... பாவம் விட்டு விடுங்கள்!
* எல்.மூர்த்தி, கோவை: சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில், தமிழகம் ஏழாவது இடத்திலும், சைபர் மோசடிகளால் அதிக நிதி இழப்பு ஏற்படும் மாநிலங்களில், நான்காவது இடத்திலும் தமிழகம் இருப்பதாக சொல்லப்படுகிறதே...
எப்பேற்பட்ட சாதனை! ஏமாறுவோர் உள்ளவரை ஏமாற்றுவோர் இருக்கத் தான் செய்வர். பொதுமக்கள் தான், உஷாராக இருக்க வேண்டும்!
ஜி.அர்ஜுனன், திருப்பூர்: 'ஒடிசாவில், 3.75 லட்சம் ரூபாயும், தெலுங்கானாவில், 2.50 லட்சம் ரூபாயும், எம்.எல்.ஏ.,களுக்கு சம்பளம் கொடுக்கின்றனர். தமிழக எம்.எல்.ஏ.,களுக்கும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும்...' என, அ.தி.மு.க., வேலுமணி கேட்கிறாரே...
முதலில், கொடுக்கப்படும் சம்பளத்திற்கு, சட்டசபையில் ஆக்கப்பூர்வமான திட்டங்களை முன்மொழியட்டும்; தன் தொகுதி மேம்பாட்டுக்காக உழைக்கட்டும். அதன்பின் ஊதிய உயர்வு கேட்கட்டும், வேலுமணி!
