
ரஜினி-கமலுக்கு கதை ரெடி!
கூலி படத்தை அடுத்து, ரஜினி - கமல் இணையும் படத்தை இயக்குனர், லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று கூறப்பட்ட சூழ்நிலையில், 'அவர்கள் இருவரும் எதிர்பார்த்த யதார்த்தமான கதையை என்னால் தயார் செய்ய முடியவில்லை என்பதால், அந்த படத்தில் இருந்து நானே விலகி விட்டேன்...' என்கிறார் லோகேஷ் கனகராஜ்.
தற்போது, ரஜினி நடிப்பில், ஜெயிலர் -2 படத்தை இயக்கியுள்ள, இயக்குனர், நெல்சன் படப்பிடிப்பு தளத்தில், ரஜினியிடம் ஒரு கதையை சொல்லி, ஓ.கே., வாங்கியதையடுத்து கமலிடத்திலும் சொல்லி, டபுள் ஓ.கே., பெற்று விட்டார். அதனால், நீண்ட இடைவேளைக்கு பிறகு, ரஜினி - -கமல் இணையும் படத்தை, நெல்சன் இயக்குவது தெரிய வந்துள்ளது.
— சினிமா பொன்னையா
ஆண் வேடத்தில் நடிக்க ஆசைப்படும், ருக்மணி வசந்த்!
தமிழில், ஏஸ் மற்றும் மதராஸி படங்களில் நடித்த நடிகை, ருக்மணி வசந்த், 'இன்னொரு ஜென்மம் இருந்தால், நான் ஆணாக பிறக்கவே ஆசைப்படுகிறேன். நான் பெண்ணாக பிறந்து விட்டபோதும், எனக்கு விதவிதமான ஒட்டு மீசைகளை வைத்து எடுத்த புகைப்படங்களை, என் வீட்டில் பல ஆல்பங்களாக தயார் செய்து வைத்திருக்கிறேன். அந்த புகைப்படங்களை பார்த்து என்னை நானே ரசித்துக் கொள்கிறேன். அதோடு, நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் ஆண் வேடத்தில் நடிக்கவும் நான் தயாராக இருக்கிறேன்...' என்கிறார், ருக்மணி வசந்த்.
— எலீசா
துபாயில் வீடு வாங்கிய, தமிழ் சினிமா நட்சத்திரங்கள்!
தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர்கள், அஜித்குமார், மாதவன் மற்றும் நடிகையர் த்ரிஷா, நயன்தாரா உள்ளிட்ட பலரும் துபாயில் வீடு வாங்கி உள்ளனர். படங்களில் நடிக்கும் போது தமிழ்நாட்டில் இருக்கும் இவர்கள் படப்பிடிப்புக்கு, 'பிரேக்' விட்டதுமே நான்கே மணி நேரத்தில் துபாய்க்கு பறந்து விடுகின்றனர். இந்த நிலையில் தற்போது சிம்புவும் துபாயில் 55 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு வில்லா வாங்கி உள்ளார். இவரது வீட்டுக்கும், அஜித்குமார் வீட்டுக்கும் இடையே ஒரு கிலோ மீட்டர் தான் இடைவெளியாம். இப்படி இவர்கள் துபாயில் வீடு வாங்க காரணம், ரசிகர்கள் தொல்லை இல்லாமல் சுதந்திரமாக சுற்றித்திரிய வேண்டும் என்பதற்காகத்தான் துபாய் நாட்டுக்கு படை எடுக்கின்றனர்.
— சினிமா பொன்னையா
இயக்குனர் அட்லி எடுத்த முடிவு!
ஹிந்தியில், பாலிவுட் நடிகர், ஷாருக்கான் நடிப்பில், ஜவான் ஹிந்தி படத்தை இயக்கிய இயக்குனர், அட்லி தற்போது, தெலுங்கு நடிகர், அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு அதிரடி, 'ஆக்ஷன்' படத்தை இயக்கி வருகிறார். இந்நேரத்தில், சில முன்னணி தமிழ், 'ஹீரோ'கள் அவரது இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த போது, 'இனிமேல், பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகர்களை மட்டுமே இயக்கப் போகிறேன். அதனால், தமிழ் நடிகர்களை வைத்து இப்போதைக்கு படம் இயக்க எந்த வாய்ப்பும் இல்லை...' என்று கூறிவிட்டார், அட்லி. மீண்டும், ஷாருக்கான் நடிப்பில் உலக தரத்தில் ஒரு மெகா ஹிந்தி படத்தை இயக்க தயாராகி வருவதாகவும் கூறுகிறார்.
— சினிமா பொன்னையா
கருப்புப் பூனை!
சுள்ளான் நடிகரால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கொல வெறி இசையமைப்பாளர், ஒரு கட்டத்தில் சினிமாவில் தான் பிசியாகி விட்டதால், சுள்ளான் படங்களுக்கு இசையமைக்கவே தனக்கு நேரமில்லை என்று தட்டிக் கழித்து வந்தார். இதனால், இசையமைப்பாளர் மீது, சுள்ளான் நடிகர், இன்னொரு பிரகாசமான இசையமைப்பாளரை தன் படங்களுக்கு ஒப்பந்தம் செய்து, அவரை வளர்த்து விடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும், தற்போது கொலவெறி, பாலிவுட்டில் கால்பதித்துள்ள நிலையில், அடுத்து தான் நடிக்கும் பாலிவுட் படங்களிலும் பிரகாசமானவரை இசையமைக்க வைத்து, கொலவெறிக்கு மிகப்பெரிய, 'ஷாக்' கொடுக்கப்போவதாக கூறுகிறார், சுள்ளான்.
*****
திருமணத்திற்கு பிறகும் நடித்து வரும், பாணா காத்தாடி நடிகை, வம்பு நடிகர் நடிக்கும் நான்கெழுத்து படத்தில் நடிப்பதற்கு தீவிரம் காட்டினார். அதற்காக தயாரிப்பாளரை அணுகி, அட்வான்சும் வாங்கி விட்டார். ஆனால், இந்த விவகாரம் வம்பு நடிகரின் கவனத்திற்கு சென்றதை அடுத்து, Ñ'திருமணமாகாத எனக்கு ஜோடியாக, இரண்டு முறை திருமணம் செய்த நடிகையை ஒப்பந்தம் செய்வதா?' என்று தயாரிப்பாளரிடம் மல்லுக்கு நின்றார். இதையடுத்து, பாணா காத்தாடி நடிகையை அப்படத்தில் இருந்தே ஏறக்கட்டி விட்டனர். இதனால், செம கடுப்பாகிவிட்ட பாணா காத்தாடி நடிகை, வம்பு நடிகரை சினிமா வட்டாரங்களில் வாய்க்கு வந்தபடி வசைபாடிக்கொண்டு திரிகிறார்.
சினி துளிகள்!
* இயக்குனர், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர், சிம்பு நடித்து வரும், அரசன் படத்தில் நடிகர், விஜய் சேதுபதி- மற்றும் நடிகை ஆண்ட்ரியா ஆகிய இருவரும் வில்லத்தனமான ரோலில் நடிக்கின்றனர்.
* 'இசையமைப்பாளர், அனிருத்தை மேல்படிப்புக்காக அவரது அப்பா வெளிநாட்டுக்கு அனுப்ப இருந்தபோது, நான்தான் அவரிடம், 'நல்ல இசைத் திறமை இருக்கிறது...' என்று சொல்லி, நான் நடித்த, 3 என்ற தமிழ் படத்தில் இசையமைக்க வாய்ப்பு கொடுத்தேன். அப்படி இல்லையென்றால், அனிருத் சினிமாவுக்கே வந்திருக்க மாட்டார்...' என்கிறார் நடிகர், தனுஷ்.
* நடிகர், கார்த்தி சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தன் அலுவலகத்தின் வாசலில் ஒரு தள்ளுவண்டி உணவகம் நடத்தி வருகிறார். அதில்,10 ரூபாய்க்கு வெஜிடபிள் பிரியாணி வழங்கப்படுகிறது. இந்த உணவகம் தொடங்கி, 1000 நாட்கள் முடிந்துள்ளது.
அவ்ளோதான்!

