
கைகொடுக்கும், சிவகார்த்திகேயன்!
'மெகா பட்ஜெட்' படங்களில் சிவகார்த்திகேயன் நடித்தாலும், தன் சொந்த நிறுவனத்தின் மூலம் சிறிய, 'பட்ஜெட்'டில், மற்ற நடிகர்களை வைத்து தொடர்ந்து படங்கள் தயாரித்து வருகிறார். குறிப்பாக திறமையான ஒன்பது புதுவரவு இயக்குனர்களை, தன் நிறுவனத்தில் படங்களை இயக்க வைத்து, அறிமுகம் செய்துள்ளார்.
தற்போது சிறிய, 'பட்ஜெட்' படங்களை தயாரித்து வருபவர், எதிர்காலத்தில் பிரம்மாண்ட படங்களை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
— சினிமா பொன்னையா
தென்மாநில சினிமாவில் நடிக்க விரும்பும், ஜோதிகா!
மும்பையில் குடியேறி, சில ஹிந்தி படங்களில் நடித்த, ஜோதிகாவுக்கு அங்கு அவர் எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. அதனால், மீண்டும் தமிழ் சினிமா பக்கம் திரும்பி, 'பெண்களின் திறமையை அழகாக வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரங்கள் தென்மாநில சினிமாவில் தான் எனக்கு நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. குறிப்பாக மனதை வருடும் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் நான் நடித்த கதாபாத்திரங்கள் எனக்குள் இன்றும் வாழ்ந்து கொண்டே இருக்கின்றன. அதனால், அது போன்ற உணர்வுப்பூர்வமான கதைகளில் மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறேன்...' என்று ஒரு செய்தியை வெளியிட்டு, தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கிறார், ஜோதிகா.
—எலீசா
பாலிவுட்டை வியக்க வைத்த, சாய் பல்லவி!
ஹிந்தி நடிகர், அமீர்கானின் மகன், ஜுனைத்கானுடன், ஏக் தின் என்ற ஹிந்தி படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை, சாய் பல்லவி, 'எக்காரணம் கொண்டும் திரைப்படங்களில் கிளாமராக நடிக்கவே மாட்டேன்...' என்று, 'கண்டிஷன்' போட்டு நடிக்கிறார். தற்போது, ராமாயணா ஹிந்தி படத்தின் இரண்டாம் பாகத்தில், சீதை வேடத்தில் நடித்து வருகிறார். அதோடு, மும்பையில் நடைபெறும், நள்ளிரவு, 'பார்ட்டி'களில் ஆஜராகாமல், ஒரு தனித்துவமான நடிகையாக தன்னை வெளிப்படுத்தி வருகிறார். சாய்பல்லவியின் இந்த செயல்பாடுகள், மற்ற ஹிந்தி பட நடிகையரை வியந்து பார்க்க வைத்திருக்கிறது.
எலீசா
கண்டனம் தெரிவிக்கும், ருக்மணி வசந்த்!
பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நடிகையரின் உடல் பாகங்களை ஜூம் செய்து அநாகரீகமான கோணங்களில் படம் எடுத்து, 'சோஷியல் மீடியா'வில் வெளியிடுவது அதிகரித்து விட்டது. இதனால், வீடியோகிராபர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் நடிகை, ருக்மணி வசந்த், 'இது ஒரு அருவருப்பான செயல். ஹிந்தி திரை உலகில் இருந்து வரும் இந்த, 'பாப்பராஸி' கலாசாரத்தை தென்மாநில சினிமாவுக்குள் ஊடுருவ விடக்கூடாது...' என்று சக நடிகையரை கேட்டு வருகிறார்.
— எலீசா
போலீஸ் அதிகாரியாக, ஷாருக்கான்!
ரஜினியின், கூலி படத்தில் ஹிந்தி நடிகர், அமீர்கானை ஒரு சிறிய வேடத்தில் நடிக்க வைத்தனர். இது, அமீர்கானின் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் தற்போது, ரஜினி நடித்து வரும், ஜெயிலர் -2 படத்தில் இன்னொரு, ஹிந்தி நடிகர், ஷாருக்கானை ஒரு, 'கெஸ்ட் ரோலில்' நடிக்க ஒப்பந்தம் செய்தனர். முதலில், அவரை ஓரிரு காட்சிகளில் மட்டுமே நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், ரசிகர்களின் எதிர்ப்புக்கு ஆளாகி விடுவோம். அப்படி செய்தால் இந்த படத்தையே ஹிந்தி ரசிகர்கள் புறக்கணித்து விடுவர், என்று நினைத்த ரஜினி, இப்போது அவரை முக்கிய போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க வைக்குமாறு இயக்குனருக்கு உத்தரவு போட்டுள்ளார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப் பூனை!
கதையின் நாயகியாக உருவெடுத்திருக்கும், ரயில் நடிகை 'தற்போதைய முன்னணி, 'ஹீரோ'கள் தங்களது படங்களின் வசூலை உயர்த்திக் காட்ட வேண்டும் என்பதற்காக, 100 ரூபாய் டிக்கெட்டை, 2000, 3000- ரூபாய்க்கு விற்பனை செய்ய வைக்கின்றனர். ஆனால், இப்படி தங்களது ரசிகர்களை வருத்தி படத்தின் வசூலை உயர்த்திக்காட்டி, அவர்கள் வெற்றி பெற வேண்டிய அவசியம் இல்லை...' என்று நேரடியாகவே சாடியுள்ளார்.
அவரது இந்த விமர்சனம் காரணமாக, மேல் தட்டில் இருக்கும் அத்தனை நடிகர்களுமே அவருக்கு எதிராக திரும்பி உள்ளனர். குறிப்பாக சில நடிகர்கள், தங்களது ரசிகர்களை வைத்து, ரயில் நடிகையை, 'சோஷியல் மீடியா'வில் கடுமையான முறையில் விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.
சினி துளிகள்!
* தாய்க்கிழவி படத்தின் வெற்றியை தொடர்ந்து, மீண்டும் அழுத்தமான கிராமத்து கதாபாத்திரங்களில் நடிக்க தயாராகி வருகிறார் நடிகை, ராதிகா சரத்குமார்.
* ஹாய் என்ற தமிழ் படத்தில், நடிகர், கவினுக்கு ஜோடியாக நடித்து வருகிறார், நயன்தாரா. இப்படம், 'ஹீரோ' தன்னைவிட வயது அதிகமான பெண்ணை காதலிப்பது போன்ற கதைகளத்தில் உருவாகிறது.
* அரசன் படத்தை அடுத்து, கடல் கன்னி என்ற தமிழ் படத்தில், கடல்கன்னி வேடத்திலேயே நடித்து வருகிறார், ஆண்ட்ரியா.
அவ்ளோதான்

