
வாரிசை களமிறக்க தயாராகும், சந்தானம்!
விஜய், விக்ரம், விஜய் சேதுபதி என, பல நடிகர்களும் தங்களது வாரிசுகளை சினிமாவில் இறக்கி விட்டிருக்கும் நிலையில், சந்தானமும் தன் மகன், நிபுனை களமிறக்க நேரம் பார்த்து வருகிறார். அதோடு, தான், 'ஹீரோ' ஆன பிறகும், தன் காமெடி முத்திரை விடாமல் துரத்துவதால், தன் மகனை ஆரம்பத்திலேயே, 'ஆக்ஷன்' கதைகளில் நடிக்க வைத்து புதிய, 'ட்ராக்கில்' பயணிக்க வைக்க திட்டமிட்டு வரும், சந்தானம், தற்போது மகனுக்காக தீவிரமாக கதைகளை கேட்டு வருகிறார்.
— சினிமா பொன்னையா
சமந்தாவை நல்ல நடிகையாக மாற்றிய, கணவர்!
தெலுங்கு, 'வெப் சீரியல்' இயக்குனரான, ராஜ் நிடிமொரு என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள, சமந்தா, 'என்னுடைய கணவர் என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் மாற்றிவிட்டார். என்னை ஒரு நல்ல மனுஷியாக மாற்றியதோடு, ஒரு நல்ல நடிகையாகவும் மாற்றி இருக்கிறார். அதோடு, சினிமாவில் நிறைவேறாத என் கனவுகளை நிறைவேற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், திருமணம் பலரது நடிப்புக்கு தடைக்கல்லாக இருக்கும் நிலையில், என் வாழ்வில் அது ஒரு புதிய மைல்கல்லாக அமைந்திருக்கிறது...' என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார், சமந்தா.
— எலீசா
'ஹீரோ'களுடன் மோத தயாராகும், ரெஜினா!
அஜித் நடித்த, விடாமுயற்சி படத்தில், வில்லியாக நடித்த, ரெஜினா தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில், 'நெகடிவ் ரோலில்' நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக, வெறும் வசன காட்சிகளில் மட்டுமே, 'ஹீரோ'களுடன் மோதாமல், அடிதடி சண்டை காட்சிகளில் மோதுவதற்கும் தான் தயாராகி வருவதாக கூறும் ரெஜினா, இந்திய அளவில் உள்ள, 'ஆக்ஷன்' பட இயக்குனர்களுக்கு துாது விட்டு வருகிறார்.
— எலீசா
சர்ச்சையில் சிக்கிய இயக்குனர், அட்லி!
ஏற்கனவே, தான் இயக்கிய முதல் படமான, ராஜா ராணி படம் இயக்குனர், மணிரத்னம் இயக்கிய, மவுனராகம் படத்தை காப்பி அடித்து இயக்கியதாக சர்ச்சையில் சிக்கிய இயக்குனர், அட்லி, அதன் பிறகு, சத்ரியன் படத்தை, தெறி என்ற பெயரிலும், அபூர்வ சகோதரர்கள் படத்தை, மெர்சல் என்ற பெயரிலும் இயக்கி, கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார்.
இந்நிலையில் தற்போது, தெலுங்கு நடிகர், அல்லு அர்ஜுன் நடிப்பில், ராக்கா என்ற தெலுங்கு படத்தை இயக்கி வரும், அட்லி, இந்த படத்தின் போஸ்டரில் மனித முகமும், ராட்சத விலங்கின் கையும் கொண்ட தோற்றத்தில், அல்லு அர்ஜுனை வெளிப்படுத்தியிருந்தார். இதைப் பார்த்து, இயக்குனர், ஷங்கர் இயக்கிய, ஐ படத்தில், விக்ரம் நடித்த அதே கதாபாத்திரத்தை சுட்டுவிட்டார், அட்லி என்று மீண்டும் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
— சினிமா பொன்னையா
கருப்புப் பூனை!
மீண்டும், வம்பு நடிகரின், 'மார்க்கெட்' சூடுபிடிக்க துவங்கி இருப்பதை அடுத்து, கதாநாயகி விவகாரத்தை கையில் எடுத்து விட்டார். இயக்குனர்கள் கதை செல்லும்போதே, 'இந்த ரோலில் இந்த நடிகை நடித்தால் தான் சிறப்பாக இருக்கும்...' என்று தன் அபிமான நடிகையரை நடிக்க வைக்குமாறு கட்டாயப்படுத்துகிறார். குறிப்பாக தற்போது, கோலிவுட்டில் வளர்ந்து வரும் சில இளவட்ட அம்மணிகளுக்கு நேரடியாகவே சிபாரிசு செய்கிறார். இதனால், மற்ற மொழிகளில் இருந்து தமிழுக்கு வரும் புது வரவு நடிகையர், வம்பு நடிகரின் இந்த தாராள மனசை புரிந்து கொண்டு, அவருக்கு, 'சூப்பர் பார்ட்டி' கொடுத்து, பட வாய்ப்புகளை பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
*****
என்னதான் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், விக்கி இயக்குனர் மீது ஒருவித நம்பகத்தன்மை இல்லாமல் தான் இருக்கிறார், தாரா நடிகை. அதன் காரணமாக தான் சம்பாதித்து வாங்கும் ஒட்டுமொத்த அசையா சொத்துகளையும் தன்னுடைய பெயரிலேயே வைத்திருக்கும் நடிகை, அவற்றை பராமரிக்கும் உரிமையை மட்டுமே காதல் கணவருக்கு கொடுத்திருக்கிறார்.
சினிமா துறையில் பல நட்சத்திர தம்பதியினர் ஒரு கட்டத்தில் கத்தரித்துக் கொண்டு ஓடி விடுவதால், ஒருவேளை தனக்கும் அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே கணவரை தன் எடுபிடியாக மட்டுமே, அம்மணி பயன்படுத்திக் கொண்டு வருவதாக கூறுகின்றனர் சினிமா வட்டாரத்தினர்.
சினி துளிகள்!
* சில முன்னணி, 'ஹீரோ'களுடன் தான் நடித்த படங்களில் தன் கதாபாத்திரம், 'டம்மி' ஆக்கப்பட்டதால், இப்போது மொத்த சீன்களையும் முன்கூட்டியே கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டே நடிக்கிறார், நயன்தாரா.
* தற்போது நடித்து வரும், அரசன் படத்தை அடுத்து, இயக்குனர், அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் நடிக்க போகிறார், சிம்பு.
* தன் மகள், பிரியங்காவை, பிரசாந்த் நடிக்கும், ரஞ்சன் படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகம் செய்கிறார் நடிகை, தேவயானி.
* சென்னையில், 15 ஆண்டுகளுக்கு முன், 10 கோடி ரூபாயில் தான் கட்டிய வீட்டை, சமீபத்தில், 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறார் நடிகை, மீனா.
அவ்ளோதான்!

