
ரஜினிக்கு, 'நோ-என்ட்ரி' போட்ட, ஷாருக்கான்!
ரஜினியின், ஜெயிலர்- 2 படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்க இருந்த, ஹிந்தி நடிகர், ஷாருக்கான், தனக்கான ரோலை கேட்டு திருப்தி ஏற்படாததால், நடிக்க மறுத்து விட்டார். ஆனால், ஏற்கனவே தன்னை வைத்து, ஜவான் என்ற ஹிந்தி படத்தை இயக்கிய, இயக்குனர், அட்லி தற்போது, தெலுங்கு நடிகர், அல்லு அர்ஜுனை நடிக்க வைத்து, இயக்கி வரும், ராக்கா என்ற தெலுங்கு படத்தில், 'கெஸ்ட் ரோலில்' நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார், ஷாருக்கான். இது சிறிய வேடமாக இருந்தாலும், அவருக்கு மிகப்பெரிய அளவில் இந்த படத்தில், 'ஓப்பனிங் சீன்' மற்றும் கதையில் திருப்பத்தை ஏற்படுத்தும், முக்கியமான ரோலை கொடுத்துள்ளாராம், அட்லி.
— சினிமா பொன்னையா
சாரா அர்ஜுனுக்கு, அமோக வரவேற்பு!
தெய்வத்திருமகள், சைவம் மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த, சாரா அர்ஜுன், ஹிந்தி நடிகர், ரன்வீர் சிங் நடித்துள்ள, துரந்தர் ஹிந்தி படத்தின் இரண்டு பாகங்களிலும், கதாநாயகியாக நடித்துள்ளவர், தற்போது தமிழில், தனுஷ் நடிக்கும், 56வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
குறிப்பாக, சாரா அர்ஜுன் நடித்த, துரந்தர் ஹிந்தி படத்தின் இரண்டு பாகங்களும், 'சூப்பர் ஹிட்' அடித்துள்ளன. அந்த, 'மார்க்கெட்'டை பயன்படுத்தி, தாங்கள் எடுக்கும் தமிழ் படங்களில், இவர் நடித்தால், அந்த படத்தை ஹிந்தியிலும் வெளியிடலாம் என்ற எண்ணத்தில், மேலும் சில தமிழ் பட இயக்குனர்கள், அவரை தங்கள் படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய துவங்கியுள்ளனர்.
— எலீசா
வில்லனாக உருவெடுக்கும், கவுதம் கார்த்திக்!
மணிரத்னம் இயக்கிய, கடல் படத்தில் அறிமுகமான, கவுதம் கார்த்திக் சினிமாவில், 'ஹீரோ'வாக கொடி நாட்ட முடியவில்லை. அதனால், சமீபத்தில், ஆர்யாவுடன் நடித்து வெளியான, மிஸ்டர் எக்ஸ் என்ற தமிழ் படத்தில், வில்லனாக நடித்திருந்தார், கவுதம் கார்த்திக், தற்போது, 'சிக்ஸ் பேக்' உடல் கட்டுக்கும் மாறி இருப்பவர், எப்படிப்பட்ட கொடூரமான வில்லன் வேடங்களில் நடிப்பதற்கும் தான் தயாராக இருப்பதாக கூறுகிறார்.
— சி.பொ.,
சிம்பு படத்தில் நடிக்க மறுத்த, தனுஷ்!
தற்போது, இயக்குனர், வெற்றிமாறன் இயக்கும், அரசன் படத்தில், வடசென்னை ரவுடியாக நடித்து வருகிறார், சிம்பு.
இந்த படத்தில், தனுஷுக்கு, ஒரு முக்கிய வேடத்தில் நடிக்குமாறு அழைப்பு விடுத்தார், வெற்றிமாறன். அதற்கு அவரோ, 'ஏற்கனவே, சிம்பு, விஜய் சேதுபதி இந்த படத்தில் உள்ளனர். இப்படி, இரண்டு ஸ்டார் நடிகர்கள் இருக்கும்போது, நான் சிறிய வேடத்தில் நடித்தால், அது எடுபடாது. அதோடு, என்னுடைய ரசிகர்களுக்கும் ஏமாற்றமாகி விடும்...' என்று சொல்லி, அரசன் படத்தில் நடிக்க மறுத்துள்ளார், தனுஷ்.
— சினிமா பொன்னையா
கருப்புப் பூனை!
ச மீபகாலமாக படங்களில் நடித்து வரும், புதுப்பேட்டை இயக்குனர், தன் தம்பியான, சுள்ளான் நடிகருக்கு இரண்டு கதைகள் தயார் செய்தபோதும், அதில் நடிப்பதற்கு, அவர் மறுத்து விட்டார். இதனால், கடும், 'அப்செட்'டில் உள்ள இயக்குனர், 'முதல் படத்திலிருந்து என் தம்பியை நடிக்க வைத்து சினிமாவில் ஆளாக்கினேன். ஆனால், இன்றைக்கு என் இக்கட்டான நேரத்தில் தம்பி கூட, எனக்கு ஆதரவுக்கரம் நீட்டவில்லை. தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பர். ஆனால், என் தம்பியோ, என் படத்தில் நடிக்க, 'கால்ஷீட்' தர மறுக்கிறார்...' என்று சொல்லி, புலம்பி கொண்டிருக்கிறார், மேற்படி இயக்குனர்.
சினி துளிகள்!
* தன் காதலரான, ஷிகர் பஹாரியா என்பவருடன் அடிக்கடி பிரசித்த பெற்ற ஆலயங்களுக்கு, 'விசிட்' அடிக்கிறார், ஸ்ரீதேவியின் மூத்த மகள், ஜான்வி கபூர்.
* ஏற்கனவே, தனுஷ் நடிப்பில் தான் இயக்கிய, புதுப்பேட்டை படத்தின், இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி வைத்திருப்பதாக கூறுகிறார் இயக்குனர், செல்வராகவன்.
காதலித்து திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்த இசையமைப்பாளர், ஜி.வி.பிரகாஷும், பாடகி, சைந்தவியும் தற்போது, தமிழினி என்ற படத்தில் ஒரு காதல் பாடலை இணைந்து பாடியுள்ளனர்.
* நடிகை, வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா, ஆகதா என்ற தெலுங்கு படத்தில், 'ஹீரோயின்' ஆக அறிமுகமாகிறார்.
அவ்ளோதான்!

