
குத்தாட்ட நடிகையான, ஸ்ருதிஹாசன்!
தற்போது ஸ்ருதிஹாசனின், 'மார்க்கெட்' தமிழ், தெலுங்கு என, இரண்டு மொழிகளிலும், 'டவுன்' ஆகி உள்ளது. அதனால், சமந்தா, ராஷ்மிகா போன்ற நடிகையர் பிரபல நடிகர்களுடன் குத்துப்பாட்டுக்கு நடனமாடி, 'மார்க்கெட்'டை பிடித்தது போன்று தற்போது, தெலுங்கு நடிகர், ராம்சரண் நடித்துள்ள, பெத்தி என்ற தெலுங்கு படத்தில் ஒரு பாட்டுக்கு அதிரடி குத்தாட்டம் போட்டுள்ளார், ஸ்ருதிஹாசன். இதேபோல் ஏற்கனவே தான், 'டூயட்' பாடிய மற்ற நடிகர்களுடனும் குத்தாட்டம் போட தயாராக இருப்பதாக ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
— எலீசா
தனி, 'ஹீரோ'வாக நடிக்க தயங்கும், கமல்ஹாசன்?
கமல் நடித்த இந்தியன்- 2 மற்றும் தக்லைப் ஆகிய, இரண்டு தமிழ் படங்களும் படுதோல்வி அடைந்ததால், அடுத்து தான், 'ஹீரோ'வாக நடிக்க இருந்த படத்தை கிடப்பில் போட்டு விட்டார். தற்போது, தெலுங்கு நடிகர், பிரபாஸ் நாயகனாக நடிக்கும், கல்கி 2898 ஏடி என்ற தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் தயாராகும் இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடித்து வரும், கமலஹாசன், அடுத்து, ரஜினியுடன் இணைந்து நடிக்கும் படத்திற்காகவும் தயாராகிக் கொண்டிருக்கிறார். இரண்டு படங்கள் கொடுத்த படுதோல்வி காரணமாக மீண்டும் தனி, 'ஹீரோ'வாக நடிப்பதையே தவிர்த்து வருகிறார், கமல்.
— சினிமா பொன்னையா
சம்பளத்தை உயர்த்திய, மமிதா பைஜூ!
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து முன்னணி, 'ஹீரோ'களின் படங்களில் நடித்து வரும், மலையாள நடிகை, மமிதா பைஜு, தனுஷுடன் நடித்த, கர என்ற தமிழ் படத்தின் மூலம், தான் நடிப்பில் கைதேர்ந்த நடிகையாகி விட்டதாக கூறுகிறார். அதனால், இனிமேல், 'ரொமான்டிக்' அல்லாமல் அழுத்தமான இல்லத்தரசி ரோல்களுக்கும் இயக்குனர்கள் என்னை தைரியமாக ஒப்பந்தம் செய்யலாம் என்று கூறுகிறார். அதோடு, இதுவரை லட்சங்களில் மட்டுமே சம்பளம் வாங்கி வந்த அவர், கர படத்திற்கு பின், தன் படக்கூலியை, இரண்டு கோடி ரூபாயாக உயர்த்தி இருக்கிறார். மேலும் தன் கைவசம் இருக்கும் படங்களும், 'ஹிட்'டாக அமைந்தால், இந்த இரண்டு கோடி ரூபாயை விரைவில், 5 கோடி ரூபாயாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளார், மமிதா பைஜூ.
— எலீசா
சிவகார்த்திகேயனின் அடுத்த திட்டம்!
தமிழில், 'மார்க்கெட்'டை பிடித்து விட்ட, சிவகார்த்திகேயன், தெலுங்கில் அவர் நடித்த முதல் படமான, பிரின்ஸ் , 'பிளாப்' ஆகிவிட்டது. இதனால், நேரடி தெலுங்கு படங்களில் நடிக்க தயங்குபவர், தமிழில் தான் நடிக்கும் படங்களை தெலுங்கு மட்டுமின்றி, மலையாளத்திலும் 'டப்பிங்' செய்து வெளியிட்டு, 'மார்க்கெட்'டை பிடிப்பதில் தீவிரம் காட்டுகிறார்.
அதனால், தன் ஒவ்வொரு படங்களிலுமே, 'தெலுங்கு மற்றும் மலையாளத்தை சார்ந்த பிரபல நடிகர்களை முக்கிய வேடங்களில் நடிக்க வைக்க வேண்டும்...' என்று இயக்குனர்களிடம் புதிய, 'கண்டிஷன்' போட துவங்கி இருக்கிறார், சிவகார்த்திகேயன்.
— சினிமா பொன்னையா
கருப்புப் பூனை!
உச்ச நடிருக்கு 75 வயதானபோதும், அவரது, 'மார்க்கெட்' உச்சத்திலேயே இருப்பதால், ஆரம்ப காலத்தில், அவருக்கு ஜோடியாக நடித்த சில நடிகையர் மீண்டும் அவருடன் இணைந்து நடிப்பதில் ஆர்வம் காட்டத் துவங்கி இருக்கின்றனர். இதன் காரணமாக மரியாதை நிமித்தமாக அவரை சந்திக்கும் அவர்கள், தங்களது நடிப்பு ஆசையை அவரது காதில் போட்டு வருவதோடு, அவர் நடிக்கும் படங்களில் தங்களுக்கு சிபாரிசு செய்யுமாறு அன்பு வேண்டுகோள் வைக்கின்றனர்.
ஆனால், உச்ச நடிகரோ, 'ஒரு நடிகைக்கு சிபாரிசு செய்தால், அடுத்தடுத்து தன்னுடன் ஏற்கனவே நடித்த அத்தனை நடிகையருமே படையெடுக்க தொடங்கிவிடுவர். அதனால்தான், என் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் விஷயத்தில் நான் தலையிடுவதே இல்லை...' என்று சொல்லி, 'எஸ்கேப்' ஆகிவிடுகிறார்.
சினி துளிகள்!
* கராத்தே பாபு படத்தை அடுத்து, ப்ரோ கோடு என்ற தமிழ் படத்தை தயாரித்து, நடித்து வருகிறார், ரவி மோகன்.
* தற்போது, ராக்கா என்ற தெலுங்கு படத்தை இயக்கி வரும், இயக்குனர், அட்லி அடுத்தபடியாக ஏற்கனவே, ஹிந்தி நடிகர், ஷாருக்கான் நடிப்பில் தான் இயக்கிய, ஜவான் என்ற ஹிந்தி படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் அவரை வைத்தே இயக்கப் போகிறார்.
* தற்போது, இசையமைப்பாளரும், நடிகருமான, விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்திற்கு, அப்பா குட்டி என்று, 'டைட்டில்' வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக, ஹிந்தி நடிகை பிரீத்தி அஸ்ரானி நடிக்கிறார்.
* ரஜினி நடித்த, ஜெயிலர் படத்தின் ஓடிடி உரிமை, 100 கோடி ரூபாய்க்கு விற்பனையான நிலையில், தற்போது ஜெயிலர் -2 படத்தின் ஓடிடி உரிமை, 150 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது.
அவ்ளோதான்!

