PUBLISHED ON : மே 31, 2026

பழைய, 'பார்முலா'வை துாக்கி எறிந்த, லோகேஷ் கனகராஜ்!
தான் இயக்கிய தமிழ் படங்களில், தொடர்ந்து கடத்தல், நரபலி போன்ற விஷயங்களை மையமாக வைத்து, படமாக்கி, ரசிகர்களின் கடும் கோபத்துக்கு ஆளானார் இயக்குனர், லோகேஷ் கனகராஜ். இதே, 'பார்முலா'வை, ரஜினியின், கூலி படத்திலும் தொடர்ந்ததால் அந்த படம், ரஜினிக்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்தது.
இந்நிலையில் தற்போது, தெலுங்கு நடிகர், அல்லு அர்ஜுனை வைத்து இயக்கப் போகும் புதிய படத்தில், தன் பழைய கதை பார்முலாவை மொத்தமாக துாக்கி விட்டு, ஒரு புதிய 'பார்முலா'வை கையில் எடுத்திருக்கிறார்.
இந்த படத்தைப் பார்த்தபின், 'ரஜினியே மீண்டும் என் படத்தில் நடிக்க, 'கால்ஷீட்' கொடுப்பார். அப்படியொரு புதிய பாணிக்கு, 'அப்டேட்' ஆகியுள்ளேன்...' என்கிறார்,லோகேஷ் கனகராஜ்.
— சினிமா பொன்னையா
காதலரை பிரிந்த, ரித்விகா!
பரதேசி மற்றும் மெட்ராஸ் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த, ரித்விகா தன் காதலரை திருமணம் செய்து கொள்ள தயாரானார். ஆனால், நிச்சயதார்த்தத்தோடு திருமணம் தடைப்பட்டு விட்டது. இது குறித்து கேட்டால், 'திருமணத்திற்கு பிறகு கருத்து வேறுபாடு ஏற்படுவது சகஜம். ஆனால், திருமணத்திற்கு முன்பே அது ஏற்பட்டு, திருமணத்திற்கு பிறகு என்னவெல்லாம் நடக்குமோ என்ற அச்சம் வந்து விட்டது. அதனால் தான் நிச்சயதார்த்தத் தோடு திருமணத்தை நிறுத்தி விட்டேன்...' என்கிறார், ரித்விகா.
— எலீசா
'சென்டிமென்ட் ஹீரோ'வுடன் இணைந்த, வடிவேலு!
மீண்டும், காமெடியனாக ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார், வடிவேலு. இந்நேரத்தில், பிரபுதேவாவுடன் இணைந்து, பேங் பேங் என்ற தமிழ் படத்தில் தற்போது நடித்திருக்கும், வடிவேலு, 'இந்த படத்தில் எனக்கும், பிரபுதேவாவுக்கும் பெரிய அளவில் 'காமெடி கெமிஸ்ட்ரி ஒர்க்-அவுட்'டாகி உள்ளது. அதனால், இதற்கு முன்பு நாங்கள் இருவரும் இணைந்து நடித்து வெளியான, காதலன், மனதை திருடி விட்டாய், மிஸ்டர் ரோமியோ மற்றும் ராசய்யா போன்ற படங்களைப் போன்று, இந்த படமும் பெரிய அளவில், 'ஒர்க் அவுட்' ஆகி, என் காமெடி, 'கவுன்டவுனை' மீண்டும், 'ஸ்டார்ட்' பண்ணி வைக்கப்போகிறது...' என்கிறார், வடிவேலு.
— சி.பொ.,
அரசியல் வருகை குறித்து, த்ரிஷா!
த்ரிஷாவிடம், 'எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும், 'ஐடியா' உள்ளதா?' என்று கேட்டால், 'இப்போது வரை அரசியலுக்கு வருவது குறித்து என்னிடம் எந்த, 'ஐடியா'வும் இல்லை. அதோடு, 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருக்கிறேன். இந்த சினிமாவிலேயே இன்னும் நான் பெரிதாக சாதிக்கவில்லை. இப்படி முழுமையாக தெரிந்த சினிமா துறையிலேயே சாதிக்க முடியாத நான், எதுவுமே தெரியாத அரசியலுக்கு போய் என்ன சாதிக்க முடியும். அடுத்த கட்டமாக சினிமாவில் பெயர் சொல்லும் அளவுக்கு ஏதாவது பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற இலக்குடன் என் பயணம் தொடர்கிறது...' என்கிறார்.
— எலீசா
புதுமுக இயக்குனர்களின்,'ஹீரோ'வான, சசிகுமார்!
தான் நடித்த, அயோத்தி மற்றும் டூரிஸ்ட் பேமிலி ஆகிய தமிழ் படங்களின் வெற்றி காரணமாக புதுமுக இயக்குனர்கள் பக்கம் முழுமையாக திரும்பி நிற்கிறார், சசிகுமார்.
'சினிமாவுக்குள், 'என்ட்ரி' கொடுக்கும் புதியவர்கள் தனித்திறமையுடன், புதிய சிந்தனைகளுடன் வருகின்றனர். அதனால் தான் தொடர்ந்து புதுமுக இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறேன். இப்படி வித்தியாசமான கதைகளில் நடித்த மகிழ்ச்சி மட்டுமின்றி, புதியவர்களை அறிமுகம் செய்தோம் என்ற மனநிறைவும் கிடைக்கிறது...' என்கிறார், சசிகுமார்.
— சினிமா பொன்னையா
கருப்புப் பூனை!
மனைவியை விவாகரத்து செய்துவிட்ட, சுள்ளான் நடிகர், தற்போது எந்த நடிகையருடனும் வெளியில் தலை காட்டுவதில்லை. மாறாக தன் சில, 'கேர்ள் பிரண்டு'களை அவ்வப்போது மாலத்தீவுக்கு அழைத்துச் சென்று, வாரக்கணக்கில் முகாம் போட்டு, 'மஜா' பண்ணி வருகிறார். அதோடு, தனக்கு ஒரு வாரம் கம்பெனி கொடுக்கும் அம்மணிகளுக்கு தன் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும் சிபாரிசு செய்து வருகிறார். இதனால், சுள்ளானின் மாலத்தீவு, 'மஜா'வில் இடம்பிடிக்க, புதுமுக நடிகையர் பலர் நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.
தாரா நடிகையின், 'பெஸ்ட் பிரண்டு'களில், சார்பட்டா நடிகர் மிக முக்கியமானவர். அதனால், திருமணத்திற்கு பிறகும் கூட அந்த நடிகருடன் அவ்வப்போது 'மீட்டிங்' போடும், தாரா நடிகை மனம் விட்டு பேசுகிறேன் என்ற பேரில் உறவாடுகிறாராம். இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் ஏரியாவுக்குள் அம்மணியின் ஆத்துக்காரர் தப்பி தவறி 'என்ட்ரி' கொடுத்தால் கூட, கொலை வெறி ஆகிவிடுகிறாராம், அம்மணி.
இப்படி தாரா நடிகை பழைய நட்பை புதுப்பிக்க துவங்கி இருப்பதால், தன் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக வீட்டில் இருந்தே சில நாட்களுக்கு வெளிநடப்பு செய்து விடுகிறாராம், ஆத்துக்காரர். என்றாலும் அதை அம்மணி அலட்சியப்படுத்தி விடுவதோடு, 'என், 'பாய் பிரண்டு'கள் விஷயத்தில் தலையிட்டால் செம காண்டாகி விடுவேன்...' என்றும் ஆத்துக்காரரை அடக்கி ஒடுக்கி வைத்துள்ளாராம்.
சினி துளிகள்!
* தேரே இஸ்க் மெய்ன் என்ற ஹிந்தி படத்தில் நடித்த தனுஷ், மீண்டும் ஹிந்தியில் ஒரு, 'ஆக்ஷன்' படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார்.
* 'சீனியர் ஹீரோ'களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்றால், தன் படக் கூலியை 'டபுள்' ஆக்கி விடுகிறார், நயன்தாரா.
அவ்ளோதான்!
