PUBLISHED ON : செப் 13, 2026

தனுஷ் அனுப்பிய சுற்றறிக்கை!
முதல்வர் விஜய் பாணியில், வருகிற 2031-ல், அரசியலில் களமிறங்க தயாராகிவிட்டார், தனுஷ். இதன் காரணமாக, தன் ரசிகர் மன்றத்தை தற்போது வலுப்படுத்தி வருகிறார். இந்நிலையில், அவரது அரசியல் வருகைக்கு எதிராக, 'சோஷியல் மீடியா'வில், ஒரு சாரார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதற்கு, தனுஷ் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வரும் நிலையில், அவர்களுக்கு, தடை உத்தரவு பிறப்பித்து, 'நம் மீது இப்போதே எதிர்வினை ஆற்றுகின்றனர் என்றால், அவர்களுக்கு நம்முடைய அரசியல் வருகை அச்சத்தைக் கொடுத்திருக்கிறது. இதுவே, நமக்குக் கிடைத்த முதல் வெற்றி. இப்போதைக்கு எதிர்வினை என்ற பெயரில் சர்ச்சைகளை ஏற்படுத்த வேண்டாம். சில காலம் அடக்கி வாசியுங்கள்...' என்று ரசிகர்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளார், தனுஷ்.
— சினிமா பொன்னையா
வாய்ப்புகளை திருப்பி அனுப்பிய, சாய் அபயங்கர்!
கருப்பு படத்தின் மூலம் அறிமுகமாகி, தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வரும், சாய் அபயங்கர், அசாமிலிருந்து தமிழுக்கு இறக்குமதியான, கயாடு லோஹருடன் இணைந்து, 'பவழமல்லி' என்ற இசை ஆல்பத்தில் நடித்து பிரபலமடைந்தார். அடுத்து, தெலுங்கு நடிகை, பாக்யஸ்ரீ போர்ஸுடன் இணைந்து, 'ரதிமா' என்ற மற்றொரு, இசை ஆல்பத்தில் நடித்திருக்கிறார்.
அதைப்பார்த்து, அவரை சினிமாவில், 'ஹீரோ'வாக நடிக்க வைக்க சில இயக்குனர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்த, சாய் அபயங்கர், 'சினிமாவில், 'ஹீரோ'வாகும் திட்டம் எதுவும் இல்லை. இசையில் மட்டுமே, 'ஹீரோ'வாக இருப்பேன். அதேசமயம், இசை ஆல்பங்களில் தொடர்ந்து என், 'ஹீரோ'யிசத்தை வெளிப்படுத்துவேன்...' என்று கூறியுள்ளார்.
சி.பொ.,
நயன்தாரா எடுத்த புதிய முடிவு!
ஆரம்பத்தில் தன் நிறுவனமான, 'ரவுடி பிக்சர்ஸ்' மூலம் தயாரித்த, காத்துவாக்குல ரெண்டு காதல், கனெக்ட் மற்றும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி போன்ற பல தமிழ் படங்கள் தோல்வியடைந்ததால், படங்கள் தயாரிப்பதை சிறிது காலம் நிறுத்தியிருந்தார், நயன்தாரா.
சமீபத்தில், இவர் தயாரித்த ஹாய் என்ற தமிழ் படம், வெளியாகி வெற்றி பெற்றதால், இனிமேல் தன்னை, 'இம்ப்ரஸ்' செய்யக்கூடிய கதைகளை எந்த இயக்குனர் சொன்னாலும், அதை தானே தயாரித்து நடிக்கவும் திட்டமிட்டுள்ளார். மேலும், இனி தான் நடிக்கும் படத்தை, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என, மூன்று மொழிகளிலும் வெளியிட்டு பலமொழி நடிகை மற்றும் தயாரிப்பாளராக, 'மார்க்கெட்'டில் நீடித்து நிற்கவும் முடிவு செய்துள்ளார், நயன்தாரா.
— எலீசா
படப்பிடிப்பு தளங்களில், அனிருத்!
தன் வேலை, 'ரெக்கார்டிங்' தியேட்டரில் மட்டும்தான் என்றாலும், தான் இசையமைக்கும் படங்களின் படப்பிடிப்புத் தளங்களுக்கும் அவ்வப்போது, 'விசிட்' அடிக்கிறார், இசையமைப்பாளர், அனிருத். அங்கு, இயக்குனர் மற்றும் 'ஹீரோ'களுடன் கலந்துரையாடி, கதை மற்றும், படத்தின் சிறப்பு பற்றியெல்லாம் பேச்சிலேயே உள்வாங்கி, அதற்கேற்ற பின்னணி இசையைக் கொடுத்து வருவதாக கூறுகிறார்.
அதோடு, 'படப்பிடிப்பு தளங்களில், அவர்கள் கடினமாக உழைப்பதை நேரில் பார்க்கும் போது, இவர்களைவிட நானும் இந்த படத்தின் இசைக்காக கூடுதலாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகம் எனக்குக் கிடைக்கிறது...' என்றும் கூறுகிறார், அனிருத்.
— சினிமா பொன்னையா
கருப்புப் பூனை!
ஆறெழுத்து நடிகையை திருமணம் செய்துகொள்ளத் தயாரான, சண்டக்கோழி நடிகர், சமீபத்தில் தான் இயக்கி, நடித்த கிரீடம் என்ற பொருள் தரும் படம் 'ஹிட்' ஆனால், அந்த வெற்றிக் களிப்போடு திருமணத்தை நடத்தலாம் என்று வருங்கால மனைவியிடம் கூறியிருந்தார். ஆனால், அந்தப் படம், 'பிளாப்' ஆகிவிட்டதால், இப்போது நடிகர் கடும், 'அப்செட்'டில் இருப்பதோடு, அந்த நடிகை திருமணப் பேச்சை எடுத்தாலே, 'இப்போது நான் இருக்கும், 'டென்ஷனில்' இதெல்லாம் தேவையா?' என்று எரிந்து விழுகிறார்.
நடிகரின் வார்த்தைகளை நம்பி, ஒரு ஆண்டுக்கும் மேலாக அவர் தன்னைத் திருமணம் செய்து கொள்வார் என்று காத்திருந்தார் அந்த ஆறெழுத்து நடிகை.
ஆனால், இப்போது இந்தத் திருமணம் நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகத்தில், தன் ஜாதகத்துடன் ஜோதிடர்களை தேடிச் சென்று வருகிறார், நடிகை.
சினி துளிகள்!
* நடிகர், விஷாலுடன் நிச்சயதார்த்தம் நடந்து விட்டதால், யோகிடா என்ற தமிழ் படத்திற்கு பின், எந்த படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருக்கிறார், சாய் தன்ஷிகா.
* அரவிந்த்சாமி, த்ரிஷா நடித்து நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த, சதுரங்க வேட்டை- 2 படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
* இயக்குனர், லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்து வெளியான, டிசி என்ற தமிழ் படம், 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அடுத்தபடியாக தெலுங்கு நடிகர், அல்லு அர்ஜுன் நடிப்பில், பலமொழி படம் ஒன்றை இயக்குவதற்குத் தயாராகி விட்டார், லோகேஷ் கனகராஜ்.
அவ்ளோதான்!
