PUBLISHED ON : செப் 28, 2025

ஒரு ஊருக்கு துறவி ஒருவர் விஜயம் செய்திருந்தார். குகையில் தங்கியிருந்த அந்த துறவியை தரிசிக்க வந்தார், செல்வந்தர் ஒருவர்.
துறவியிடம், 'சுவாமி! இந்த உலகில் நான் எப்படி வாழ வேண்டும்?' எனக் கேட்டார். செல்வந்தர்.
'உனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை, பலனை எதிர்பாராமல் ஆற்றுவாயாக. உலகிலுள்ள உயிரினங்களின் மீதும், பொருள்களின் மீதும் பற்று வைத்தும், பற்றற்றும் இருக்க வேண்டும்...' என்றார், துறவி.
இதை கேட்ட செல்வந்தருக்கு ஒன்றும் விளங்கவில்லை. மீண்டும் துறவியிடம், 'சற்று தெளிவாக கூறுங்கள்...' என்றார்.
ஒரு விளக்கை ஏற்றினார், துறவி. அதை அதிக காற்று வீசும் இடத்தில் வைத்தார். உடனே தீபம் அணைந்து விட்டது.
பின்னர், மறுபடியும் தீபத்தை ஏற்றினார். அதை ஒரு கண்ணாடி ஜாடி வைத்து மூடினார். சில வினாடிகளில் தீபம் அணைந்து விட்டது.
மீண்டும் தீபத்தை ஏற்றினார். அதை காற்று உள்ள இடத்திலும், அதிக காற்று வீசாத இடத்திலும் வைத்தார். தீபம் அணையாது தொடர்ந்து எரிந்தது.
செல்வந்தரிடம், 'நீயும் இந்த தீபம் போல் பிரகாசிக்க விரும்பினால், இந்த உலக விஷயங்களிலிருந்து ஒதுங்கியும் வாழக் கூடாது; நெருங்கியும் வாழக் கூடாது. அப்படி செய்தால், நீ எந்த ஒரு பாவத்திலும் பாதிக்கப்பட மாட்டாய்...' என்றார், துறவி.
இதை கண்டு, இந்த உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை புரிந்து கொண்டார், செல்வந்தர்.
எந்த மனிதன் அனைத்து விருப்பங்களையும் துறந்துவிட்டு, மமதை இல்லாதவனாக, அகங்காரம் அற்றவனாக, சிறிதளவு ஆசையும் இல்லாதவனாக இருக்கிறானோ, அவனே அமைதியை அடைகிறான்.
படிப்படியாகப் பயின்று மனதை உலகியலில் இருந்து ஒதுக்கச் செய்ய வேண்டும். உறுதி பூண்ட புத்தியால், மனதைப் பரமாத்மாவிடம் நிலைபெற செய்து, பரமாத்மாவை தவிர வேறு எதையும் நினையாதிருக்க வேண்டும்!
எவன் அனைத்து கர்மங்களையும் பரமாத்மாவிடம் அர்ப்பணம் செய்து, உலகியல் பற்றுதலைத் துறந்து கர்மங்களை செய்கிறானோ, அவன் தண்ணீரில் தாமரை இலை ஒட்டாமல் இருப்பது போல, பாவத்தால் பாதிக்கப் படுவதில்லை!
அருண் ராமதாசன்