PUBLISHED ON : மார் 01, 2026

ஒரு சமயம், ஹரித்துவாரைச் சுற்றிப் பார்த்து கொண்டிருந்தனர், பரமசிவனும், பார்வதியும். அப்போது, நுாற்றுக்கணக்கானவர்கள், கங்கையில் ஸ்நானம் செய்வதும், வீடு திரும்புவதுமாக இருந்தனர்.
அவர்களை பார்த்ததும், பரமசிவனிடம், 'பிரபு... கங்கையில் ஸ்நானம் செய்தால் எல்லாப் பாவங்களும் போகும். ஆனால், இவர்களுடைய பாவங்களோ, கஷ்டங்களோ மறைந்ததாக தெரியவில்லையே...' என்று கேட்டாள், பார்வதி.
அதற்கு, 'இவர்கள் ஸ்நானம் செய்யவில்லை. கங்கை நீரில் தங்கள் உடம்பை நனைத்துக்கொண்டு வருகின்றனர். அதனால் தான் இவர்களுடைய பாவங்கள் போகவில்லை. நாளைக்கு, நான் என்ன செய்கிறேன், பார். அப்போது நீயே புரிந்து கொள்வாய்...' என்றார், பரமசிவன்.
அன்று இரவு நல்ல மழை பெய்யவே கங்கைக்கு செல்லும் பாதை சேறாகி விட்டது. வழியில் ஒரு பெரிய பள்ளம் வேறு இருந்தது.
அடுத்த நாள் காலை, ஒரு வயோதிக அந்தணர் வேடத்தில், அந்தக் குழியில் விழுந்து மேலே ஏற முடியாதவர் போல தவித்தார், பரமசிவன். ஓர் இளம்பெண் வேடத்தில் குழியின் அருகே உட்கார்ந்து கொண்டாள், பார்வதி. அவள் என்ன செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே, சொல்லிக் கொடுத்திருந்தார், பரமசிவன்.
'ஐயோ! வயதான கிழவர் குழியில் விழுந்து விட்டாரே! யாராவது கைகொடுத்து இவரைத் துாக்கிவிட மாட்டீர்களா?' என்று கதறினாள், இளம்பெண் வேடத்தில் இருந்த, பார்வதி.
கங்கையில் முழுகிவிட்டு பலர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். ஆனால், கிழவரைத் துாக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் வரவில்லை.
கடைசியில் சிலர் கிழவரைத் துாக்கிவிட முன்வந்தனர். ஆனால், அவர்களைப் பார்த்து, 'என் கணவர் ஒரு பாவமும் அறியாதவர். எனவே, பாவமற்றவர் தான் இவரைத் தொடலாம். பாவம் செய்தவர் இவரை தொட்டால் அவர்கள் சாம்பலாகி விடுவர்...' என்றாள், இளம்பெண்.
'அப்படியானால் நான் இவரைத் தொட லாயக்கில்லை. நான் எத்தனையோ பாவங்கள் செய்திருக்கிறேன்...' என்று கூறி, ஒவ்வொருவராய் போய் விட்டனர்.
கடைசியில் ஒரு இளைஞன், கங்கையில் ஸ்நானம் செய்த பின், அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்து, 'ஐயோ! வயதான கிழவர் குழியில் விழுந்து விட்டார். தாங்கள் கொஞ்சம் துாக்கி விடமாட்டீர்களா?' என்றாள், இளம்பெண்.
'அதற்கென்ன, இதோ துாக்கி விடுகிறேன்...' என்று சொல்லி, பக்கத்தில் சென்றான், அந்த இளைஞன்.
'ஐயா! இவரைத் தொடாதீர்கள். நீங்கள் பாவமற்றவராக இருந்தால் தான் இவரைத் தொடலாம். இல்லா விட்டால் பஸ்பமாக போய்விடுவீர்கள்...' என்றாள்.
'நான் பாவமற்றவன் என்பதில் என்ன சந்தேகம்? இப்பொழுதுதானே கங்கையில் ஸ்நானம் செய்து, என் பாவங்களை நீக்கிவிட்டு வருகிறேன்... ஆகவே, நான் பஸ்பமாக மாட்டேன்...' என்று சொல்லி, கிழவரைத் துாக்கி விட்டான், அந்த இளைஞன்.
உடனே, அவனுக்குத் தரிசனம் அளித்து அருள் புரிந்தனர், பரமசிவனும், பார்வதியும்.
'கங்கையில் நம்பிக்கையோடு ஸ்நானம் செய்தால் தான் பாவங்கள் விலகும்; தெரிந்ததா?' என்றார், பார்வதியைப் பார்த்து, பரமசிவன்.
நம்பிக்கையோடு வேண்டினால், வாழ்வில் பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்!
அருண் ராமதாசன்

