PUBLISHED ON : மார் 15, 2026

விறகு வெட்டி ஒருவன், துறவியிடம் சென்று, 'ஐயா! மனிதர்களுக்கு உடலும், மனமும் சுத்தமாக இருக்க வேண்டும் என, ஆன்மிகவாதிகள் சொல்கின்றனரே... இரண்டில் ஒன்று மட்டும் சுத்தமாக இருந்தால் போதாதா?' என்று கேட்டான்.
தன்னுடைய, இரண்டு சீடர்களை அழைத்து, இருவரின் காதில் ஏதோ சொல்லி, விறகு வெட்டி குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து வருமாறு கூறினார், துறவி.
முதலாவது சீடர் எடுத்து வந்த தண்ணீரை வேண்டாம் என, மறுத்து விட்டான், விறகு வெட்டி. பிறகு, இரண்டாவது சீடர் எடுத்து வந்த தண்ணீரையும் மறுத்து விட்டான்.
இருவர் எடுத்து வந்த தண்ணீரையும் குடிக்க மறுத்ததன் காரணத்தை கேட்டார், துறவி.
அதற்கு, 'ஐயா! முதலாவது சீடர் எடுத்து வந்த தண்ணீர் சுத்தமாக இல்லை. இரண்டாவது சீடர் எடுத்து வந்த தண்ணீர் சுத்தமாக இருந்தாலும், அதை எடுத்து வந்த குவளை சுத்தமாக இல்லை...' என்று பதிலளித்தான், விறகு வெட்டி.
சிரித்தபடியே, விறகு வெட்டியிடம், 'பார்த்தாயா! குடிக்கும் தண்ணீரும் சுத்தமாக இருக்க வேண்டும், அதை எடுத்து வரும் குவளையும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாயே! அதுபோலத்தான் மனிதர்களுக்கு உடல், மனம் இரண்டுமே சுத்தமாக இருக்க வேண்டும். நம் மனம் தண்ணீர் போன்றது; உடல் குவளை போன்றது...' என்று விளக்கமளித்தார், துறவி. தெளிவடைந்தான், விறகுவெட்டி.
இவ்விதம் தான் நம் உலக ஆசைகள், உண்மையான பக்தியையும், துாய்மைகளையும் நமக்கு தெரியவிடாமல் தடுத்து விடுகின்றன. மேலும், இவ்வுலகில், மக்கள் அனைவரும் ஆசாபாசங்களுக்கு ஆட்பட்டு அவதிக்கு உள்ளாகின்றனர். அவர்களிடம் நிலையான கோட்பாடு இருப்பதில்லை.
கற்பக மரம் போன்றவன், இறைவன். விரும்பியவற்றை எல்லாம் வழங்க வல்லவன், அவன். மனிதன், இந்த உலகில் அதிகபட்சமாக நுாறு ஆண்டுகள் வாழ்கிறான். வாழும் காலத்தில் அற்ப ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல், ஆன்மிக சிந்தனை, தெய்வபக்தி, மன அடக்கம், ஒழுக்கம், தியாகம் மற்றும் தொண்டு போன்ற தெய்வீகக் குணங்களுடன் வாழ வேண்டும்.
அப்படி வாழ்பவனுக்கு மோட்சம் கிடைக்கும். தியானம், பக்தி, ஜபம், சமய ஆசார ஒழுக்கம் இவற்றால் உள்ளத்தைத் துாய்மையாக்கிக் கொண்டால் ஆசா பாசங்கள் குறையும். நம் உடலையும், உள்ளத்தையும் எப்போதும் துாய்மையாக வைத்துக்கொள்வதே தெய்வீகப் பண்பாடாகும்!
அருண்ராமதாசன்!

