PUBLISHED ON : மே 17, 2026

மகான் ஒருவர், கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். வழியில் வீட்டு முற்றத்தில், உரலில் மாவு அரைத்துக் கொண்டிருந்தார், ஒருவர்.
அரிசி மணிகள் இரண்டு கற்களுக்கு இடையில் சிக்கி நசுங்கிக் கொண்டிருந்தன. 'இந்த அரிசி மணிகள் போலத் தானே நாமும் இருக்கிறோம். உலகியல் வாழ்வில் எண்ணற்ற துயரங்களுக்கு இடையில் கஷ்டப்படுகிறோம்...' என்று, நினைத்து அழத் தொடங்கினார்.
அந்நபரை, இந்த நிலையில் பார்த்ததும், அவர் அருகில் சென்றார், மகான்.
'சகோதரா, ஏன் அழுகிறாய்?' என்று கேட்டார், மகான்.
'அரிசி மணிகள் இரண்டு கற்களுக்கிடையில் நசுங்குவது போலவே, என் நிலையும் இருப்பதாக உணர்கிறேன்...' என்று பதில் சொன்னார், அந்நபர்.
அவரிடம் மேலே இருந்த கல்லைக் கழற்றி எடுக்கச் சொன்னார், மகான். நடுவில் அச்சின் அருகில் இருந்த மணிகள் முழுதாக, நசுங்காமல் இருந்ததையும், அச்சில் இருந்து விலகிச் சென்றவை பொடியாகி இருந்ததையும் காட்டினார்.
'இங்கே பார். நீ கடவுளை நினைத்தபடி, அவர் அருகில் இருக்கும்போது உலகின் மாய வலைகளில் சிக்கிக்கொள்ள மாட்டாய். நீ எப்பொழுதும் இறைவனிடம் பக்தி கொண்டிருக்கும் போது, அச்சிற்கு அருகில் இருக்கும் நசுங்காத அரிசி மணிகளைப் போல இருப்பாய். உன்னால் உலகில் வாழ முடியும்; அதேசமயம், உலகியல் வாழ்வில் ஏற்படும் துரதிர்ஷ்டமான நிகழ்வுகளால் பாதிக்கப்படாமல் இருப்பாய்...' என்று கூறினார், மகான்.
தர்மமான நல்வழியில் வாழ்ந்து, உலக ஆசைகளை குறைத்து, எப்போதும் இறை சிந்தனையுடன் இருப்பவர்கள் அருகிலேயே இருப்பவர், இறைவன். இறைவனை உணர்ந்து, உள்ளன்போடு நினைப்பதே இறை அருகாமையை உணரும் சிறந்த வழியாகும். எத்தகைய சூழ்நிலையிலும், திருநாவுக்கரசு சுவாமிகள் போன்று, இறை நம்பிக்கையுடன் தைரியமாகச் செயல்பட வேண்டும். அன்றாட பணிகளை இறைவனின் சேவையாகக் கருதிச் செய்யும்போது, அதுவே நற்கர்ம வினையாக மாறுகிறது. 'இறைவன் துாணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்!' என்பது போல, அந்த இறைசக்தி எப்போதும் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. அந்த நம்பிக்கை தான் நமக்கான மிகப்பெரிய பலம். எப்பொழுதும் இறை சிந்தனையோடு இருப்பது, மனதை பண்படுத்தி, நம்மை மேலான நிலைக்கு அழைத்துச் செல்லும்.
அருண் ராமதாசன்
