PUBLISHED ON : ஜூன் 21, 2026

கீரிக்கும், பாம்புக்கும் கடும் பகை என்று நீங்கள் அறிவீர்கள். அவை எங்கே சந்தித்தாலும், ஒன்றை ஒன்று கொல்லும் நோக்கத்துடனேயே சண்டையிடும். சில சமயம் இந்தச் சண்டை நீண்ட நேரம் தொடரும்.
சண்டையின் போது, கடும் ஆத்திரத்துடன் கீரியை கடிக்கும் பாம்பு. பாம்பின் விஷம் உள்ளே சென்றதும், மயக்கம் வருவது போல் உணரும், கீரி. அது, தன்னைக் காத்துக்கொள்ள புதர் மண்டிய பகுதியை நோக்கி சென்று ஒரு குறிப்பிட்ட மூலிகையைச் சாப்பிடும். பாம்பு விஷ முறிவு மூலிகையினால் சிறிது நேரத்தில் விஷத்தின் தாக்கத்திலிருந்து விடுபடும், கீரி.
இன்னும் அதிக உற்சாகத்துடனும், வலிமையுடனும் மீண்டும் பாம்புடன் சண்டையை தொடரும், கீரி. ஒவ்வொரு முறை கீரியை, பாம்பு கடிக்கும் போதும், அது, சண்டையை கைவிட்டு, மூலிகையை உண்டு, விஷத்தில் இருந்து விடுபடும். மீண்டும் சண்டையைத் தொடரும். இறுதியாக, பாம்பு முற்றிலும் களைத்து விடும்; அதனால், எதிர்த்துப் போரிட முடியாது. கீரியின் வெறிக்கு அது ஆளாகும். அதன்பின், கீரிக்கு மூலிகையைத் தேடி செல்லும் தேவை இருக்காது.
அவ்வாறே, மனிதனின் மனதையும் கீரியுடன் ஒப்பிடலாம். அவன் உலகியல் பொருட்கள் மேல் கொண்ட ஆழ்ந்த பற்றினால், கடுமையாக கடிக்கப்பட்டு பெரும் வேதனைக்குள்ளாகிறான்.
அந்த நிலையில் ஆறுதலும், அமைதியும் நாடி மகானிடம் செல்கிறான். அவருடைய சத்சங்கத்தினால், பற்றுதல்களில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியும், அமைதியும் பெறுகிறான். உலகியல் வாழ்வின் வலி மிகுந்த விளைவுகளில் இருந்து விடுபடுகிறான். பின், மீண்டும் உலகிற்குச் சென்று அங்கே வாழ்க்கையைத் தொடர்கிறான். காலப்போக்கில் உலகியல் இன்பங்களின் பற்றுதலினால் மீண்டும் பீடிக்கப்பட்டு வேதனை அடைகிறான். மீண்டும் மகானிடம் போகிறான். உலகியல் வாழ்வின் விஷத் தாக்குதலில் இருந்து ஆறுதல் அடைகிறான்.
திரும்பவும் தன் வழக்கமான செயல்பாடுகளுக்குத் திரும்புகிறான். மீண்டும் மீண்டும் மகான்களைத் தொடர்பு கொள்வதன் மூலம், நிலையற்ற பொருட்கள் மேல் கொண்ட பற்றை இறுதியாக விடுகிறான். பூரணமாய் விடுபட்டவனாய், ஆனந்தம் கொண்டவனாய் உலகில் வாழ்கிறான்.
தீவிரமான ஆன்மிகச் சாதகனுக்கு, மகான்களின் சத்சங்கம் மிகவும் அவசியமானது. ஆக, விடுதலை, ஆனந்தம், அமைதி இவற்றை அவன் அறிந்துணர அது பெரிதும் உதவுகிறது.
மகான்களை நினைத்து, அவர்களின் போதனைகளை பின்பற்றுவதன் மூலம், தீய வழிகளில் இருந்து விலகி, நல்வழியில் செல்ல முடியும். மகான்களின் தொடர்பு, சாதாரண மனிதனின் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள், தீவினைகள் மற்றும் பிறவிப் பயனைத் தடுத்துக் காப்பாற்றும் அருமருந்தாகும். மகான்களின் தொடர்பு, துன்பக் கடலில் தவிக்கும் ஆன்மா க்களைக் காப்பாற்றும் பாதுகாப்புக் கவசமாகும்!
அருண் ராமதாசன்
