
பாரதி
உன் எழுத்துக்களிலிருந்து
தமிழ் புல்லாங்குழலும்
தயாரித்தது
துப்பாக்கியும் தயாரித்தது!
காக்கை குருவி
எங்கள் சாதி - இதில்
அன்னியர் புகல்வதென நீதி...
நீ கேட்டபோது சிலிர்த்து
எழுந்தது தேசம்!
உன் சொற்கள் பற்ற வைத்த
சுதந்திரத் தீயில்
வெள்ளையர்கள்
வெந்து போயினர்!
எட்டயபுரத்து கவிஞனின்
பட்டையக் கிளப்பும் கவிதைப் புத்தகங்களை
புரட்டிப் பார்க்காமல்
எந்த கவிஞனும்
எழுத புறப்பட்டதில்லை!
அடுப்பூதும் பெண்களுக்கு
படிப்பெதற்கு என்ற
பிற்போக்குவாதிகளின் கூற்றால்
நீ பொங்கியெழுந்த போது பூகம்பம்...
புரையோடி போயிருந்த சமூகத்திற்கு
உன்னால் துவங்கியது நல் ஆரம்பம்!
பாலியல் குற்றங்களாலும்
வரதட்சணை கொடுமைகளாலும்
விழிப்பிதுங்கி
வழித் தெரியாமல் தத்தளிக்கிறது நாடு!
கண்ணியம் காக்க மறுக்கும்
பெண்ணியத்துக்கு எதிரானவர்களுக்கு
பதிலடி கொடுக்க
மீசையை முறுக்கி
முண்டாசை இறுக்கி பாரதிகள் பலர்
முனைப்புடன் வர வேண்டும்...
மாதர்களுக்கு எதிரான மடமைகளை கொளுத்த!
- பா.அனுமந்த்ரா, சென்னை.