/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை: புகழ்மகுடத்தோடு என்றும் வாழ்கவே!
/
கவிதைச்சோலை: புகழ்மகுடத்தோடு என்றும் வாழ்கவே!
PUBLISHED ON : அக் 12, 2025

அக்., 17 - கண்ணதாசன் நினைவு நாள்
கவிதைக்கு உயிர் கொடுத்த பிரம்மனே
கருத்தினில் எளிமையைக் கலந்தவனே
அனுபவ அறிவால் உயர்ந்தவனே
அழியாத புகழை அடைந்தவன் நீயே!
வாழ்க்கையின் வலிகளை உணர்ந்தவனே
வாக்கினால் சூட்சுமம் பல உரைத்தவனே
பாமரனும் புரியும் பாடல் வடித்தவனே
சாதனைப் பாதையில் பயணித்த மாமேதையே!
சத்தியத்தை சொல்லில் செதுக்கியவனே
நற்கருத்தை இனிமையாய் உணர்த்தியவனே
கற்பனைத் திறனால் உலகை ஆள்பவனே
கவிஞனின் மாண்பை உயர்த்திய பெருமகனே!
மதங்களைக் கடந்து ஏசுவைப் பாடியவனே
மானுடத்தின் ஒற்றுமை உயர்த்தியவனே
கம்பனின் கவிதையில் மனதை ஆழ்த்தியவனே
காலத்தை வென்று நிரந்தரமாக நிற்பவனே!
வார்த்தையை சிக்கனமாய் செலவிட்டவனே
வாழ்வின் உண்மைகளை வடித்தவனே
சிந்தனையின் சாரத்தை பிழிந்து கொடுத்தவனே
செவி நிறையும் பாடல்களுக்கு உரியவனே!
தவறுகளைத் திருத்தி வாழ்ந்தவனே
தத்துவத்தை தமிழில் உரைத்தவனே
மரணமில்லை என்று முழங்கியவனே
மக்கள் உள்ளத்தில் மாண்புடன் வாழ்பவனே!
நினைவுகளில் நீங்காத அறிவாளியே
நெஞ்சங்களில் நிலைத்த கவியரசே
பாடல்களால் தேசத்தை புனரமைத்தவனே
புகழ் மகுடத்தோடு என்றும் வாழ்கவே!
- வெ.பாலமுருகன், திருச்சி.
தொடர்புக்கு: 89735 19952