/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை: கொண்டாடி மகிழ்ந்திடுவோம்!
/
கவிதைச்சோலை: கொண்டாடி மகிழ்ந்திடுவோம்!
PUBLISHED ON : ஜன 25, 2026

ஜன., 26 - குடியரசு தினம்
பாரத மாதாவின்
பெருந்தவத்தால்
அருந்தவப் புதல்வர்களாய்
அவதரித்தோம்...
தாய்த்திருநாட்டின்
அருமை பெருமைகளை
பாருக்கு பறைசாற்ற
குடியரசு திருநாளை
கொண்டாடி மகிழ்ந்திடுவோம்!
ஊருக்கு உழைத்திட்ட
உத்தமர்கள் வழிகாட்ட
உண்மைக்கு தலைவணங்கி
உயர்வுக்கு வித்திட்டு
அனைவரையும் அரவணைத்து
அகிலமெல்லாம் புகழ்பரவ
குடியரசு திருநாளை
கொண்டாடி மகிழ்ந்திடுவோம்!
ஜாதி மத பேதங்களை
சாடுகின்ற நாடாக
ஏழை பணக்காரரென
பாரபட்சம் ஏதுமின்றி
சத்தியத்தின் வழிநின்று
சமத்துவத்தை நிலைநாட்ட
குடியரசு திருநாளை
கொண்டாடி மகிழ்ந்திடுவோம்!
வளமைக்கு வித்திட்டு
வறுமைக்கு விடை கொடுத்து
இல்லாமை இயலாமை
இல்லாமல் எல்லாரும்
எந்நாளும் ஏற்றமுற
குடியரசு திருநாளை
கொண்டாடி மகிழ்ந்திடுவோம்!
-- நா.கிருஷ்ணசாமி, கோவை.

