/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை: வாழ்ந்து, வாழவைப்போம்!
/
கவிதைச்சோலை: வாழ்ந்து, வாழவைப்போம்!
PUBLISHED ON : ஏப் 26, 2026

உழைப்பவன் வியர்வைத் துளிகளே
வளர்ச்சியின் சிறப்பு மணித்துளிகள்
உழைப்பின் வலிமைக் கரங்களே
அந்நாட்டின் எழுச்சியின் சிறகுகள்!
உழைக்கும் பாட்டாளி மனித வர்க்கமே
விடியல் காலம் என்றுமே நமக்கானது
தடம் பதித்து வலிமை காட்டுவோம்
திறன் பதிந்து வளமை பெறுவோம்!
உழைக்கும் பாட்டாளி சொந்தங்களே
சிற்றெரும்புகள் போல் உழைப்போம்
உழைப்பின் உன்னதம் அடைவோம்
வாழையடி வாழையென வளர்வோம்!
உழைக்கும் கரங்கள் இணையட்டும்
உயர்வின் தடங்கள் பதியட்டும்
சமூக ஒற்றுமையில் திளைக்கட்டும்
சாதனையில் சிகரம் தொடட்டும்!
உழைப்பால் வரும் களைப்பு அழகு
அதனால் தரும் உயர்வு மிக அழகு
வேதனைகள் தீரும் அதன் சிறப்பு
சோலைகள் ஆகும் நமக்கான கனவு!
வேர்களின்றி மரங்களும் இல்லை
உழைப்பின்றி இவ்வுலகமும் இல்லை
உழைப்பின் ஒளியில் வளர்வோம்
நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடுவோம்!
உழைப்பில் உன்னதமான அம்சம்
உழைப்பவனுக்கு ஏற்றம் திண்ணம்
உழைப்பே போற்றும் வண்ணம்
உழைப்பாளர் சிலையே வெற்றி சின்னம்!
உழைப்பாளர் தினமே நம் திருநாள்
நம் உழைப்பின் சிகரமே இந்நாள்
உழைக்கும் இனமே தலைநிமிர்வோம்
வாழ்ந்து, வாழவைத்து உயர்வோம்!
- வி.சுவாமிநாதன், சென்னை. தொடர்புக்கு: 93603 83220

