sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தீபாராதனா! (18)

/

தீபாராதனா! (18)

தீபாராதனா! (18)

தீபாராதனா! (18)


PUBLISHED ON : பிப் 01, 2026

Google News

PUBLISHED ON : பிப் 01, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதைச் சுருக்கம்: தீ பா ஷிப்பிங் கம்பெனியில், பொது மேலாளராக பதவியேற்றாள், ஆராதனா. கம்பெனியின் பொறுப்புகளை அவளிடம் ஒப்படைத்தார், மேனேஜிங் டைரக்டரான, முத்துராமன், கம்பெனியின் பொதுவான விஷயங்களை குறித்து சொல்லிவிட்டு, 'உன் அம்மா மீது, 'ஆசிட்' வீசியவன், இந்த கம்பெனியை சேர்ந்தவன் என்று தீபாவிடம் ஏன் பொய் சொன்னாய்...' என்று கேட்டார். அதற்கு மழுப்பலாக பதிலளித்தாள், ஆராதனா. இதற்கிடையில், மும்பையிலிருக்கும் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தான், தீபாவின் காதலன், திலகன். தீபாவின் வீட்டுக்கு வந்து, அவள் அம்மாவிடம் உடல் நலம் குறித்து விசாரித்தாள், ஆராதனா. அப்போது, தன் அம்மாவுக்கு மருந்துகளை வாங்கிக்கொண்டு வந்த, தீபா, அவள் விற்ற கார் வீட்டு வாசலில் நின்றிருப்பதை பார்த்து, 'நம்ம கார் ஏன் இங்கு வந்திருக்கு...' என்ற யோசனையுடன் உள்ளே வந்தவள், வீட்டிற்குள் ஆராதனா இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, அவளிடம், 'நான் விற்ற கார் இங்கே எப்படி வந்தது...' என்று கேட்க, அந்த காரை தான் வாங்கி விட்டதாக கூறினாள், ஆராதனா.

அதிர்ந்தாள், தீபா.

''என்ன சொல்றே நீ?'' என்றாள்.

''அந்தக் காரை நீங்க யாருக்கு வித்தீங்களோ, அவங்ககிட்டேர்ந்து நான் வாங்கிட்டேன்,'' என்று சொல்லி வழக்கம் போல புன்னகைத்தாள், ஆராதனா.

''உன் பணத் திமிரைக் காட்டறதுக்காக நான் வித்த காரை நீயே வாங்கி என்னை அசிங்கப்படுத்த பாக்கறியா?''

''தீபா...'' என, குழறலாக அதட்டினாள், மஞ்சுளா.

''அவ எதுக்கு வந்திருக்கான்னு கேளு,'' என்றாள், தீபா.

''தீபா, உங்ககிட்ட இருந்த ரெண்டு கார்ல ஒண்ணு கம்பெனி பேர்ல இருந்தது. 'கம்பெனி மேனேஜ்மென்ட்' மாறினதும், அந்தக் காரை அவங்க எடுத்திட்டு போயிட்டாங்கன்னு எனக்கு தெரிய வந்துச்சு. இன்னொரு காரை பணத் தேவைக்காகத்தான் வித்துட்டீங்கனு தெரியும். அதை உங்க பணத்தை வெச்சே நான் திரும்ப வாங்கிட்டேன். அதை உங்களுக்கே திருப்பிக் கொடுத்துட்டு போகத்தான் வந்தேன்,'' என்றாள், ஆராதனா.

''என் பணமா, என்ன உளறறே?''

''தீபா, உங்க நகையை வித்து வாங்கின, ஆறு லட்சம் ரூபாய் என்கிட்ட இருந்துச்சு. பணமாக கொடுத்தா, வாங்க மாட்டீங்கன்னு தெரியும். அம்மாவை மருத்துவமனைக்கு கூட்டிப்போக அவசரத்துக்கு ஒரு கார் இருந்தா நல்லது,'' என்றாள், ஆராதனா.

''பாத்தியாம்மா, இவ திமிரை? நம்ம கையை விட்டு நழுவிப்போறதையெல்லாம் இவ சொந்தமாக்கிப்பாளாம். அதைச் சொல்லி வெறுப்பேத்த இங்க வந்திருக்கா.''

''இல்ல, தீபா. நீங்க அவசரப்படறீங்க. எனக்கு கம்பெனி கார் கொடுத்திருக்கு. இது, உங்களுக்கு உதவியா இருக்கும்,'' என்றாள், ஆராதனா.

''இருக்கட்டும், தீபா,'' என்று முனங்கினாள், மஞ்சுளா.

''உன் பிச்சை ஒருநாளும் எனக்கு வேண்டாம், 'கெட் அவுட்' ஆராதனா,'' என்றாள், தீபா.

''தீபா!'' என்று பதறினாள், மஞ்சுளா.

புன்னகையுடன் எழுந்து குனிந்து, மஞ்சுளாவின் கால்களை தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டு, கார் சாவியை அங்கேயே வைத்துவிட்டு, வெளியேறினாள், ஆராதனா.

''எத்தனை கர்வம் பார்த்தியாம்மா?'' என்றபடி, அந்தக் கார் சாவியை எடுத்து வெளியே வீசி எறியப்போன தீபா, ஒரு கணம் தயங்கினாள்.

''அவ சொன்னது ஒருவிதத்தில உண்மைதாம்மா. அது நம்ம பணத்துல வாங்குனது தான். எல்லாமே அப்பாகிட்டேயிருந்து உருவினது தானே?'' என்றாள், தீபா.

மு ம்பையில் உள்ள அந்த, 30 மாடிக் கட்டடத்தில் ஏழாவது, எட்டாவது தளங்கள், 'விட்டல்ராஜ் டயர்ஸ்' நிறுவனத்திற்கு சொந்தமாயிருந்தன.

'லிப்ட்'டிலிருந்து வெளிப்பட்டு, சற்றுத் தயக்கத்துடன் பெரிய கண்ணாடி கதவுகளை திறந்தான், திலகன். வரவேற்பு கவுன்ட்டரில் இருந்த இளம் பெண் புன்னகைத்து, அவன் காகிதங்களை சரிபார்த்து, ஓர் அறைக்குள் அவனை அனுப்பி வைத்தாள்.

அது ஒரு, 'கான்பரன்ஸ் ரூம்!' முட்டை வடிவ மேஜையை சுற்றி, 18 நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஒரே ஒரு பெண் அமர்ந்திருந்தாள். நிமிர்ந்து பார்த்தாள்.

வட்டக்கண்ணாடிகள் அணிந்து, கன்னங்களில் பருக்களின் சிகப்பு துாக்கலாகத்தெரிய, சாயம் பூசிய உதடுகளை விரித்து, ''ஹாய்'' என்றாள்.

''மேலாளர் பயிற்சிக்கு தேர்வானவரா?'' என்று, ஆங்கிலத்தில் கேட்டாள்.

ஆமென்று தலையசைத்தான், திலகன்.

''நானும். என் பெயர், சாதனா. மும்பை பல்கலைக்கழகம்.''

''நான், திலகன். சென்னைப் பல்கலைக்கழகம்.''

''சந்திப்பதில் மகிழ்ச்சி,'' என்றாள்.

அவளுக்கெதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான், திலகன்.

கதவு திறந்து பிரவேசித்தார், எம்.   டி., விட்டல்ராஜ். அறுபதை நெருங்கும் வயது. அவருடைய கருகரு தலைமுடி இயற்கையானதா, நாற்று நடப்பட்டதா என்று, திலகனுக்கு புரியவில்லை. மிகக் கச்சிதமாக உடுத்தி, மிடுக்காக மைய நாற்காலியில் அமர்ந்தார். அவர்கள் இருவரையும் பார்த்தார்.

''எங்கள் குடும்பத்துக்கு வரவேற்கிறேன்,'' என்றார், ஆங்கிலத்தில். ''வந்திருந்த, 87 விண்ணப்பங்களில் நீங்கள் இருவர் தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள். அதற்காக சிறப்பு வாழ்த்துகள்.''

கைகுலுக்கல்கள். அறிமுகங்கள். அடுத்த அரை மணி நேரம் நிறுவனம் பற்றிய பல தகவல்கள் பகிரப்பட்டன. நிறுவனத்தின் ஏற்றுமதி உயர்வதற்கு எப்படியெல்லாம் அவர்கள் உதவ முடியும் என்று எடுத்து சொல்லப்பட்டது.

அப்போது, கதவைத் தட்டிவிட்டு, இன்னொரு நபர் உள்ளே வந்தார்.

''இவர் எங்கள் பொது மேலாளர், ராஜீவ். உங்கள் பயிற்சியை இவர்தான் மேற்பார்வையிட்டு, எனக்கு அறிக்கை கொடுப்பார்,'' என்றார், விட்டல் ராஜ்.

சுருக்கமாகப் பேசினார், பொது மேலாளர்... ''முதல் ஒரு வாரம் நீங்கள் புனேவுக்கு அனுப்பப்படுவீர்கள். அங்கேதான் நம் தொழிற்சாலை இருக்கிறது. முக்கியமான பகுதிகளைப் பார்வையிட்டு, மும்பை திரும்புவீர்கள். இங்கே உங்களுக்கு மேலாளர் பயிற்சி தொடரப்படும். 'ஆல் தி பெஸ்ட்!' திலகன், சாதனா,'' என்று தனித்தனியே கை குலுக்கி...

''ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். பயிற்சி முடிவில் உங்களில் ஒருவர் தான் அடுத்தக் கட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்,'' என்றார்.

உடனடியாக, சாதனா அவனை வன்மத்தோடு பார்ப்பதாக தோன்றியது, திலகனுக்கு.

'பெண்ணே, எனக்கும் இந்தப் பதவி மிகமிக முக்கியம். என்னை நிராகரித்து, ஆராதனாவை தேர்ந்தெடுத்த நிறுவனத்துக்கு ஒரு சவாலாக நான் உருவாக வேண்டும்...' என, எண்ணினான், திலகன்.

ஞா யிற்றுக்கிழமை.

மும்பையில் அந்த ஹோட்டல் அறையின் பால்கனியில், ஆராதனாவும், யுவராஜும் கீழே விரையும் போக்குவரத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.

''அந்த அஷ்வத்தோட பின்னணியை இன்னும் ஆராயணும், யுவா. நாசிக்ல, 'யூத் கிளப்' வெச்சிருக்கான், கோவால, 'கேசினோ' வெச்சிருக்கான், 'காலேஜ் ஹாஸ்டல்ல மெஸ்' வெச்சிருக்கான்னு சொல்றியே! சம்பந்தமே இல்லாம, கோதுமை, பருப்பைலாம் வாங்கி ஏற்றுமதி பண்ற வேலையும் ஏன் செஞ்சான்? எதை வெச்சு, ஞானா அங்கிளை தனக்கேத்த மாதிரி அவன் வளைச்சான்னு நாம கண்டுபிடிச்சாகணும்.''

உலர்ந்த புன்னகையை உதடுகளில் தவழவிட்டான், யுவராஜ்.

''ஆரூ, நாம, 'லவ்' பண்றோம்ன்னு சொன்னா எவனுமே நம்ப மாட்டான். ஒரு விஷயம் கவனிச்சியா? கொஞ்ச நாளா, ஞானசேகரன், தீபா, அஷ்வத்னு மத்தவங்களை பத்திப் பேசியே நம் பொழுதுபோகுது!''

''சாரிடா. இப்ப நெலமை அப்படி,'' என்று, யுவராஜின் தோளில் தலை சாய்த்து, அவன் இடுப்பை சுற்றி கைபோட்டு அவனை நெருக்கிக்கொண்டாள், ஆராதனா. வானத்து நிலவையும் நட்சத்திரங்களையும் வேடிக்கை பார்த்தாள்.

ஆராதனாவின் கன்னத்தை ஒற்றை விரலால் வருடினான், யுவராஜ்.

அதிகாலையில் வந்து இறங்கியதிலிருந்து, கீர்த்திலால் கம்பெனிக்காக கடுமையாக உழைத்திருந்தாலும், அவள் களைப்படைந்ததாகவே தெரியவில்லை.

''இப்படி, 'சண்டே சண்டே' தான் பார்க்கப்போறோமா, ஆரூ?''

''அடுத்த வாரம் புதன்கிழமை பண்டிகைக்காக விடுமுறை விட்டிருக்காங்களே, அன்னிக்கும் வரட்டுமா?'' என்றாள், ஆராதனா.

''நெஜம்மா?'' என்று கேட்டு அவள் முகத்தை ஏந்தி கண்களுக்குள் பார்த்தான், யுவராஜ்.

''ம்ம்... ஆனா...''

''என்ன, ஆனா?''

''மும்பை வேணாம். கோவாவுல, 'மீட்' பண்ணலாம்,'' என்றாள், ஆராதனா.

''சரியான வேலைப் பிசாசு நீ. அஷ்வத்தோட, 'கேசினோ' பத்தி தெரிஞ்சுக்கணும். அதுக்காகத்தான கோவா?'' என்றான், யுவராஜ்.

''காலையிலேர்ந்து உன்கூட 'ஜாலி!' சாயந்திரம், 'கேசினோ விசிட்' ஓ.கே.,?'' என்று மீண்டும் அவனை நெருக்கி, அவன் தோளில் தலை சாய்த்தாள், ஆராதனா.

தீ பா தனக்கு வந்திருந்த அந்த மின்னஞ்சலை மீண்டும் படித்தாள். அவள் முகத்தில் மெல்ல மகிழ்ச்சி மலர்ந்தது.

உடனடியாக, திலகனுக்கு போன் செய்தாள். அவன் எடுக்கவில்லை.

அலுவலகத்தில் இருக்கும்போது, அவனால், பதில் பேச முடியாததாக இருக்கும் என்று நினைத்து...

'திலக். ஒரு நல்ல சேதி. சும்மா வீட்ல உக்காந்திருக்க வேண்டாமேன்னு வேலைக்கு, ஒரு பத்திரிகைல 'அப்ளை' பண்ணேன் இல்ல. அங்கே, 'ஜூனியர் ரிப்போர்ட்டரா செலக்ட்' ஆகியிருக்கேன். வேலை சுவாரசியமாக இருக்கும்ன்னு நெனைக்கறேன்...' என்று தன் குரலைப் பதிவு செய்து, திலகன் மொபைலுக்கு, 'வாய்ஸ்-மெசேஜ்' அனுப்பினாள், தீபா.

புனேவில் டயர்கள் உருவாகும் தொழிற்சாலையில் ஒரு வாரம் பயிற்சி எடுத்து, மும்பைக்கு திரும்பியிருந்தான், திலகன்.

சாதனா நட்பாக பழக முற்பட்டபோதும், அவள் தன் வாய்ப்பை தட்டிப்பறிக்க வந்தவள் என்ற கண்ணோட்டத்திலேயே பழகினான், திலகன்.

தீபாவுடன் தொலைபேசியில் பேசியபோதும், சாதனாவைப் பற்றி எதிர்மறையாகவே கருத்துகள் சொல்லிக் கொண்டிருந்தான்.

மீண்டும், 'வி ட்டல்ராஜ் டயர்ஸ்' நிறுவனத்தின் நிர்வாக அலுவலகம். அதே கான்பரன்ஸ் அறை.

சாதனாவும், திலகனும் வெற்றுப் புன்னகைகளோடு காத்திருந்தனர். கதவு திறந்து நுழைந்தார், எம்.டி., விட்டல்ராஜ்.

''எங்கே இன்னொரு, 'கேண்டிடேட்.' இன்னும் வரலையா?'' என்று வாட்சை பார்த்தார்.

கதவு தட்டப்பட்டது. திறந்தது, இன்னொரு பெண்.

''சாரி. போக்குவரத்தில் சிக்கிக் கொண்டேன்,'' என்றாள், மன்னிப்பு கோரும் குரலில்.

''முதல் நாள் என்பதால், உனக்கு மன்னிப்பு,'' என்று புன்னகைத்தார், விட்டல்ராஜ்.

''சரி, உன்னை அறிமுகம் செய்துகொள்.''

''ஹாய், திலகன், ஹாய் சாதனா, ஐயம் நிமிஷா,'' என்று அவர்களுடன் கைகுலுக்கினாள்.

நீளமான ஆரோக்கியமான விரல்கள். அவளுடைய சருமத்தின் மிருது, பூவின் இதழ்களை நினைவூட்டியது. ஐந்தரை அடி உயரம் இருப்பாள். அவளுடைய ஷிபான் புடைவை உடலோடு ஒட்டியிருந்தது. சிக்கென்று, 'ஸ்லீவ்லெஸ்' ரவிக்கை. கூந்தல் அவிழ்ந்து ஒயிலாகப் பறந்தது. அதிக ஒப்பனை இல்லாமலேயே மிக வசீகரமான முகம். கண்கள், நாசி, உதடுகள், கன்னமேடுகள், பல்வரிசை எல்லாமே கச்சிதமாக இருந்தன.

''நிமிஷா, ஏற்கனவே நம் தொழிற்சாலையில் தான் மூன்று மாதம், 'இன்டர்ன்ஷிப்' செய்தாள். அதனால், அவள் நேரடியாக மேலாளர் பயிற்சியில் உங்களுடன் சேர்கிறாள்,'' என்றார், விட்டல்ராஜ்.

இவளும் போட்டியில் கலந்து விட்டாளா? திலகனுக்கு சற்று கவலை வந்தது.

பொது மேலாளர் உள்ளே வந்து அவர்களுக்கு சில குறிப்புகள் கொடுத்தார்.

மூவாயிரம் சதுர அடிகொண்ட அலுவலகத்தில், அவர்களுக்கான இருக்கைகள் எங்கே என்று காட்டி, வாழ்த்துகள் சொல்லி வி லகினார்.

திலகனுக்கு ஒருபுறம், சாதனா. மறுபுறம், நிமிஷா. அவனைப் பார்த்து வசீகரமாகப் புன்னகைத்தாள், நிமிஷா.

''நீங்க தமிழா?'' என்றாள்.

அந்தக் கேள்வியால் திகைத்தான், திலகன்.

''ஆமா. சென்னைலேர்ந்து வரேன். நீங்களும் தமிழா?'' என்று கேட்பதற்குள் அவன் நாக்கு உலர்ந்து விட்டது. தன் ரத்தம் வேகம் பிடிப்பதை, திலகனால் உணர முடிந்தது.

''அப்பா, எப்பப் பார்த்தாலும் ஹிந்திலயும், இங்கிலீஷ்லயுமே பேசணுமோன்னு பயந்தேன். தாய்மொழில பேசறப்ப கெடைக்கற சந்தோஷம் தனி இல்ல?''

அவள் அணிந்திருந்த மெலிதான, 'பர்பியூம்' விரும்பக்கூடியதாக இருந்தது.

நிமிஷாவின் அண்மையா, அவள் குரலில் இருந்த குழைவா, அவளுடைய அசாத்திய அழகின் மயக்கமா எது தன்னைத் தடுமாறச் செய்கிறது என்று ஒரு கணம் யோசித்தான், திலகன். எதுவாக இருந்தாலும், ஒருவருக்கு தான் வேலை என்றனரே, இவளிடமும் கவனமாக இருக்க வேண்டும் என்று, அவன் உள்மனம் எச்சரித்தது.

''எனக்கும் சந்தோஷம் தான். ஆனா, மூணு பேரா இருக்கும்போது, நாம மட்டும் தமிழ்ல பேசினா, சாதனாவை அந்நியமா நடத்தற மாதிரி இருக்கும்,'' என்றான், திலகன்.

''ஒரு மாசத்துக்குள்ள, சாதனாவுக்கும் தமிழ் கத்துக்கொடுத்துட்டா போச்சு,'' என்று தங்கள் உரையாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, சாதனாவிடம் சொல்லி சிரித்தாள், நிமிஷா.

''நான் தமிழ்ப்படங்களை விரும்பிப் பார்ப்பேன். கொஞ்சம் கொஞ்சம் புரியும்,'' என்று சாதனாவிடமிருந்து கூச்சத்துடன் பதில் வந்தது.

உ ணவு இடைவேளையில், போனைப் பார்த்தாள், ஆராதனா.

யுவராஜிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.

'உன்னிடம் நேரில் சொல்வதற்கு மிக முக்கிய செய்தி இருக்கிறது. அது உனக்குப் பெரும் அதிர்ச்சி தரப்போவது என்னவோ நிச்சயம். கோவாவில் சொல்கிறேன்!'



- தொடரும்.சுபா






      Dinamalar
      Follow us