
தமிழ் புத்தகாலயம் அதிபர், கண முத்தையா எழுதிய, 'முடிவுகளே தொடக்கமாம்!' என்ற நுாலிலிருந்து:
திருச்சி எழுத்தாளர் சங்கத்தின் நிரந்தர தலைவராக இருந்தார், அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார். அகிலன் செயலாளர். சங்கம் சிறப்பாக இயங்கிய காலத்தில், ஒரு மாநாடு நடத்தியது.
அந்த மாநாட்டை திறந்து வைத்து பேசினார், ஈ.வெ.ரா.,
அவர் தமிழைப் பற்றிப் பேசி எழுத்தாளர்களுக்கு யோசனை சொல்லும் போது, வட மொழி இலக்கியங்களையும், வேத புராணங்களையும், பார்ப்பனியத்தையும் கடுமையாக தாக்கி பேசினார்.
அடுத்து பேச வந்தார், எழுத்தாளர், ஜெயகாந்தன்.
ஜெயகாந்தன் என்ன பேசப் போகிறாரோ என, கிருஷ்ணசாமி ரெட்டியாருக்கு பயம் இருந்தது. அதனால், ஜெயகாந்தனிடம் மெதுவாக, 'ஈ.வெ.ரா.,வை எதிர்த்து பேச வேண்டாம்...' என்றார்.
அதை பொருட்படுத்தாமல், ஈ.வெ.ரா.,வின் வாதங்கள் அத்தனையையும் வரிசைப்படுத்தி ஒவ்வொன்றுக்கும் தகுந்த ஆதாரங்களோடு பதிலளித்தார், ஜெயகாந்தன்.
அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே, ஈ.வெ.ரா.,வின் ஆதரவாளர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஈ.வெ.ரா., அவர்களை கையமர்த்தி தடுத்திருக்காவிட்டால் நிலைமை மோசமாகி இருக்கும்.
ஈ.வெ.ரா., எழுந்து, 'நான் பேசுவதை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்றால், மற்றவர்கள் பேசுவதையும் நாம் கேட்க வேண்டும். அமைதியாக இருங்கள்...' என்று சொல்லி, ஜெயகாந்தனை தொடர்ந்து பேசச் சொன்னார்.
ஜெயகாந்தன் பேசி முடித்ததும், மீண்டும் சிறிது நேரம் பேசினார், ஈ.வெ.ரா.,
அதில், 'தம்பி சொல்வதை நீங்கள் கவனமாக கேட்க வேண்டும். யாருடைய புதுக்கருத்துக்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும். அவர் சொல்வதில் உண்மையிருக்கலாம்...' என்று கூறி முடித்தார், ஈ.வெ.ரா.,
******
ஒரு சமயம், நாடக ஆசிரியர், பெர்னாட்ஷாவிடம், 'ரொம்ப கஷ்டப்பட்டு தாடி வளர்க்கிறீர்களே?' என கேட்டார், நிருபர் ஒருவர்.
அதற்கு, 'நான் ஒன்றும் வளர்க்கவில்லை. அது தானாக வளர்கிறது...' என்றார்.
'தாடி வளர்ப்பதில் என்ன லாபம் உங்களுக்கு?' என, கேட்டார் நிருபர்.
'லாபம் உண்டே! ஷேவ் செய்வதற்கு செலவிடும் நேரத்தில் ஒரு நாடகம் எழுதி முடித்து விடுவேன்...' என்றார், பெர்னாட்ஷா.
*****
எம்.ஞானசேகர் எழுதிய, 'சாதனை சிகரங்கள்!' என்ற நுாலிலிருந்து:
தனக்கு ஏற்படும் வேலை பளுவை கையாள, நுாதன வழியை கையாண்டார், ஆங்கில படத் தயாரிப்பாளர், ஜெ.ஆர்தர் ரேங்க்.
ஒவ்வொரு வாரமும், புதன்கிழமையை கவனத்துக்குரிய நாள் என்று ஒதுக்கி விடுவார். இதர வார நாட்களில் எப்போது அவருக்கு அதிக வேலை காரணமாக அன்றன்றைக்கான வேலையை முடிக்க முடியாமல் போனால், அதை குறித்து ஒரு தாளில் குறிப்பு எடுத்து, 'புதன்கிழமை கவனிக்கப்படும்!' என்று எழுதி, ஒரு பெட்டியில் போட்டு, விடுவார்.
அதன்படி, புதன்கிழமை அந்த பெட்டியை திறப்பார்.
அவர் எழுதியதில் பல வேலைகள் இடையிலேயே முடிந்திருக்கும். மேலும் சிலவற்றை களைவதற்கான வழிகளும் கிடைத்திருக்கும். அதையும் மீறி வேலைகள் இருக்குமானால், 'அடுத்த புதன்கிழமை கவனிக்கப்படும்!' என, எழுதி போட்டு, தன் பணியை தொடர்ந்து கவனிக்க ஆரம்பித்து விடுவார்.
நடுத்தெரு நாராயணன்

