
எழுத்தாளர், நாகை தருமன் எழுதிய, 'மறக்க முடியாத திரையுலக மாமணிகள்!' என்ற நுாலிலிருந்து:
வேதாரண்யத்தில் உப்பு சத்யாகிரகம் நடந்த போது, அதில் ஈடுபட்ட தொண்டர்களை, புளிய மர விளாரினால் அடிக்க சொல்லி உத்தரவிட்டார், அன்றைய கலெக்டர்.
இதனால், தொண்டர்களின் உடல் ரத்தக்கோடுகளால் நிரம்பியிருந்தது. கடற்கரையில் ஏராளமாக ரத்தம் சிந்திக் கிடந்தது. அடிபட்ட பலர் ரத்தம் சிந்த சிந்த துடித்தனர். இந்த செய்தி, மன்னார்குடியில், 'சத்தியவான் சாவித்திரி' நாடகம் நடத்தி கொண்டிருந்த, நடிகர் சாரங்கபாணிக்கு தெரிய வந்தது.
அன்று, அவருடைய நாடகத்தை பார்க்க அதே கலெக்டர் வருவதாக இருந்தார்.
இந்த நாடகத்தில், சித்ரகுப்தனாக நடித்தார், சாரங்கபாணி.
நாடகத்தில், உடனடியாக கலெக்டர் வேடம் ஒன்று இணைக்கப்பட்டது. கதைப்படி, குற்றவாளி கூண்டில் நின்றார், கலெக்டர் வேடத்தில் நடித்தவர். ஒருவருக்கு புளிய மர விளாரினால் ஏற்பட்ட காயம் போல், கோடுகளை போட்டு அவரையும் நிறுத்தியிருந்தார்.
சித்ரகுப்தன் வேடத்தில், கலெக்டரை சாட தயாரானார், சாரங்கபாணி.
நாடகத்திற்கு வந்தார், கலெக்டர். சில நிமிடங்களில், 'செட்-அப்' காட்சி வந்தது.
கூண்டில் குற்றவாளியாக நின்ற கலெக்டரை பார்த்து, பல்லை நறநறவென்று கடித்து, கண்களில் அனல் கக்க வசனம் பேசினார், சாரங்கபாணி.
'தான் பிறந்த தாய் நாட்டிற்காக அமைதியாக போராடிய தொண்டர்களை, புளிய விளாரினால் அடித்து புண்படுத்திய கொடும்பாவி. மாபாதகம் செய்த இந்த பாவியை கொடிய நரகத்தில் தள்ளி தண்டனை வழங்க வேண்டும். மற்றவர்கள் உடலையும், மனதையும் துன்புறுத்தி இன்பம் கண்ட இந்த கொடுமைக்காரன், தான் விதைத்த விதையை அறுவடை செய்ய வேண்டும்...' எனக் கூறினார்.
இந்த வசனத்தை கேட்டு ரசித்து கைதட்டினர், மக்கள்.
ஆடிப்போனார், கலெக்டர்.
'இங்கு இருந்தால் மேலும் அவமானப்பட வேண்டிவரும்...' என நினைத்து, வெளியேறினார், கலெக்டர்.
கடந்த, 1934ல், சென்னைக்கு வந்திருந்த காந்திஜி, நடிகர், சாரங்கபாணியின் சுதந்திர போராட்ட ஆர்வம் பற்றி அறிந்து, அவர் நடித்த நாடகத்தை பார்க்க வந்தார்.
நாடகத்தை பார்த்ததும், சாரங்கபாணியை பாராட்டி, தன் கையால், தமிழிலேயே கடிதம் எழுதி தந்தார், காந்திஜி.
*****
அயர்லாந்து நாட்டை சேர்ந்த நாடக ஆசிரியரான பெர்னாட்ஷாவிடம், 'நீங்கள் ஏன் குடியை வெறுக்கிறீர்கள்?' என்று கேட்டார், ஒருவர்.
'என் குடும்பத்தில் இருந்த முன்னோர், என்னுடைய பங்குகளையும் சேர்த்து தாங்களே குடித்து விட்டனர். ஆகையால், எனக்கு அதில் பங்கு கிடைக்காமல் போய் விட்டது...' என்றார்.
***
ஒரு வீரனிடம், 'உன் அருகில், சோவியத் நாட்டின் மீது குண்டு விழும்போது, உன் இறுதி விருப்பம் என்னவாக இருக்கும்...' என்று கேட்டார், ஜெர்மன் நாட்டு சர்வாதிகாரியான, ஹிட்லர்.
உடனே, 'என் அருகில் நீங்களும் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பமாக இருக்கும்...' என்றான், அந்த வீரன்.
அதைக்கேட்டு கோபப்படுவதற்கு பதில் சிரித்து விட்டார், ஹிட்லர்.
*****
இத்தாலி நாட்டை ஆண்ட சர்வாதிகாரியான முசோலினி வேலை செய்யும் அறைக்கு வெளியில், ஒரு பலகை தொங்கும். அதில், 'உள்ளே வருகிறவர்கள் என்னை கவுரவிக்கின்றனர்; வராமலிருப்பவர்கள் எனக்கு மகிழ்ச்சியை தருகின்றனர்!' என்று எழுதி வைத்திருந்தார், முசோலினி.
- நடுத்தெரு நாராயணன்

