
சின்ன அண்ணாமலை பற்றி தெரியுமா?
இன்றைய தலைமுறையினர், பெரும்பாலானோர், இவரை அறிந்திருக்க மாட்டார்கள். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்றவர். இவர் ஒரு சிறந்த காங்கிரஸ் தொண்டர்.
இந்த, சின்ன அண்ணாமலை பற்றி, பிரபலமான மூவர் பேசியதை, படித்து பாருங்களேன்...
காந்திஜி:
'ஹரிஜன்' பத்திரிகையை தமிழில் நடத்துவதற்கு ஒரு இளைஞரை, சென்னை ஹிந்தி பிரசார சபையில் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார், ராஜாஜி.
அந்த இளைஞர் பெயர், ஸ்ரீசின்ன அண்ணாமலை. அவரைப் பற்றி, பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். சுதந்திர போராட்டத்தில் பலமுறை சிறை சென்றவரென்றும், குறிப்பாக, ஆகஸ்ட், 1942ல் நடந்த போராட்டத்தில் இவர் சிறை வைக்கப்பட்டிருந்த, திருவாடனை சிறையை உடைத்து மக்கள் இவரை விடுதலை செய்தனர் என்றும் அறிந்து ஆச்சரியமடைந்தேன்.
அந்தப் போராட்டத்தில், பல பேர் உயிர் இழந்தனர் என்றும், ஸ்ரீ சின்ன அண்ணாமலை கையில் குண்டு பாய்ந்து, உயிர் தப்பியவர் என்றும் கேள்விப்பட்டேன். இப்படிப்பட்ட இளைஞர்களை நினைத்து பெருமை அடைகிறேன்.
ராஜாஜி:
பெரிய விஷயங்களை எளிய முறையில் நகைச்சுவையாக சொல்லும் திறன் படைத்தவர், சின்ன அண்ணாமலை. சிறைச்சாலையில் கூட இவர் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். சுதந்திர போராட்ட காலத்தில் இவர் மிகவும் ஆவேசமாக பேசுவார். அதனால், இவரை நான், 'உற்சாக எரிமலை' என, பாராட்டுவேன்.
காமராஜர்:
சின்ன அண்ணாமலையின் தலைக்கு விலை வைத்தது, ஆங்கிலேய அரசாங்கம். ஒரு மாதம் வெள்ளைக்கார அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைத்தவர். இவரை கைது செய்ய முடியாமல், இவரது பெற்றோரையும், உறவினரையும் கொடுமைகள் செய்தது, ஆங்கிலேயே அரசு.
போலீசாரின் துப்பாக்கிக்கு அஞ்சாது, மார்பைக் காட்டி நின்று, 'வந்தே மாதரம்' என்று முழங்கியவர், சின்ன அண்ணாமலை.
தனிநபர் சத்யாகிரகத்தின் போது, தேவகோட்டையில், யுத்த எதிர்ப்பு பிரசாரம் செய்தவர்.
அங்கிருந்து, சென்னை வரை நடந்தே வந்து, வழியில் உள்ள ஊர்களில் எல்லாம் யுத்த எதிர்ப்பு பிரசாரம் செய்தபடி வந்தார். சென்னையில் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டார்.
இன்று இவரைப் பற்றி பேசவோ, நினைவுக்கூரவோ, யாருமில்லை. இவ்வளவு பெருமைக்கும் ஆளானவர் தான், சின்ன அண்ணாமலை.
******
ஒரு முறை, நடிகர், என்.எஸ்.கிருஷ்ணன் வீ ட்டிற்கு சென்றார், முன்னாள் முதல்வர், கருணாநிதி. அவரை, மாடிக்கு அழைத்து சென்றார், என்.எஸ்.கே.,
பகல் நேரமாக இருந்தும், ஜன்னல் எல்லாம் இழுத்து மூடப்பட்டிருந்தன. ஆனால், விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.
'பகல் நேரம் தானே. ஜன்னல்களை மூடிவிட்டு, வெளிச்சத்திற்காக விளக்கு போட்டிருக்கிறீர்களே... ஏன்?' என்றார், கருணாநிதி.
'காமெடியன் வீடு அல்லவா? எல்லாம் காமெடியாக தான் இருக்கும்...' என்றார், என்.எஸ்.கே., அச்சமயம், துறவி வேடத்தில் ஒருவர் அங்கு வந்தார்.
அவரை காண்பித்து, 'இவர் யார் தெரிகிறதா?' என, கருணாநிதியிடம் கேட்டார், என்.எஸ்.கே.,
'தெரியவில்லை...' என்றார், கருணாநிதி.
'அரசை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டு, அதனால், அரசால் தேடப்பட்டு வரும், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர், ஜீவா...' என்றார், என்.எஸ்.கே.,
மொட்டை தலை, இடையில் காவி வேஷ்டி, கழுத்தில் ருத்ராட்ச மாலை, தோளில் காவி நிறத்துண்டு, நெற்றியில் விபூதி என காட்சியளித்தார், ஜீவா. அசந்து போனார், கருணாநிதி.
- நடுத்தெரு நாராயணன்

