
பிரபல ஆங்கில எழுத்தாளர், மார்க் டுவைன். ஒருநாள் தன் நண்பனின் வீட்டில் விருந்து சாப்பிட்ட சென்றார். அங்கே, அவர் தங்கையை சந்தித்தார். அங்கிருந்து கிளம்பிப் போக அவருக்கு மனசே வரவில்லை. காரணம், நண்பனின் தங்கை மீது காதல். 'கோச்' வண்டிக்காரரிடம் சென்று, ரகசியமாக பேசினார். கார் கண்டுபிடிக்கப்படாத காலகட்டம். குதிரைகளை பயன்படுத்தும் 'கோச்' வண்டிகள் மட்டும் தான் அப்போது இருந்தது. வண்டிக்காரரிடம் தான் கிளம்பும் போது, 'டாட்டா' சொல்லிவிட்டு, பெட்டிப்படுக்கையுடன் வண்டி ஏறியவுடன், பின் சீட்டில், அப்படியே கீழே விழுகிற மாதிரி ஏற்பாடு செய்திருந்தார்.
'பிளான்' படி, மார்க் டுவைன் கீழே விழுந்து கண்ணை மூடினார். பதறிப்போன நண்பனும், அவன் தங்கையும், வீட்டிற்குள் கொண்டு வந்து கட்டிலில் அவரை படுக்க வைத்தனர். இரண்டு வாரங்கள் அவள் கைகளால் உபசாரம். பிறகு தான் அவளுக்கு புரிந்தது, அவர் தன்னிடம் காதலை சொல்லவே, இந்த தந்திரம் என்று. பிறகென்ன, இருவரும் திருமண மோதிரம் மாற்றிக் கொண்டனர்.
*****
பத்திரிகையாளர், கே.முத்தையா, 'ஜனசக்தி' நாளிதழில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றி எழுதியது: ஆ றடி உயரமுள்ள ஒரு வாலிபர். கழுத்தைச் சுற்றி முன் இருபுறமும் தொங்கும் வெள்ளைத் துண்டு; கையில் காகிதச் சுருள். 'ஜனசக்தி' நாளிதழ் அலுவலகத்திற்குள் நுழைந்தார். ஆசிரியர் இருக்கும் இடம் பற்றி விசாரித்து, அடுத்த நிமிடம், அவர் முன்னால் சிரித்தபடி நின்றார்.
'என்னை உங்களுக்கு தெரிகிறதா? செங்கப்படுத்தான்காடு தேர்தல் அலுவலகத்தில் நாம் சந்தித்ததை மறந்து விட்டீர்களா? நான் தான் கல்யாணசுந்தரம்!'
தேர்தல் சமயத்தில் சந்தித்ததை ஞாபகப்படுத்திக்கொண்டு, 'ஆமா, ஞாபகமிருக்கு... உட்காருங்கள். என்ன சமாசாரம்?' என்று வினவினார், ஆசிரியர்.
'நான் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். அதை நீங்கள் அப்படியே ஒரு வரி விடாமல், 'ஜனசக்தி'யில் வெளியிட வேண்டும்...' என்றார், கல்யாணசுந்தரம்.
'படிக்காமல் எப்படி வெளியிட முடியும்?' என்றார், ஆசிரியர்.
வந்தவர் சிரித்தபடி, தன் கையிலிருந்த காகிதச் சுருளை மேஜை மீது வைத்தார்.
'நண்டு செய்த தொண்டு!' என்பது, அவரது கவிதையின் தலைப்பு. இரண்டு, மூன்று முறை திரும்ப திரும்ப படித்த பின், அந்தக் கவிதையை பற்றி ஒருவரி கூட விடாமல் வெளியிட வேண்டும் என்ற, கவிஞரின் மதிப்பீட்டை ஆசிரியர் ஒப்புக்கொண்டார்.
கவிதையின் முடிவில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று இருந்தது. சிரித்து கொண்டே ஆசிரியர் வினவினார்...
'கல்யாணசுந்தரம் என்பதே நீண்ட பெயர். அதோடு, பட்டுக்கோட்டை என்று அடை மொழியும் தந்திருக்கிறீர்களே... கம்பன், வள்ளுவன், இளங்கோ போன்ற கவிஞர்களின் பெயர்கள் சுருக்கமாக இருப்பது போல் உங்கள் பெயரையும் சுருக்கிக் கொள்ளலாமே...' என்றார்.
'அவர்கள் பெரிய மேதைகள், பெரிய கவிஞர்கள். அதனால் தான் சின்ன பெயர்களாக வைத்துக் கொண்டனர். நான் சின்ன ஆள். பெயராவது பெரிய பெயராக இருக்கட்டுமே...' என்று பதில் கூறினார், கல்யாணசுந்தரம்.
*****
'எம்.ஜி.ஆர்., நிஜமும், நிழலும்!' நுாலில், எம்.ஜி.ஆரின் ஆளுமை பற்றி, முன்னாள் போலீஸ் டி.ஜி.பி., மோகன் தாஸ் கூறியது: எம். ஜி.ஆரிடம் பேசிகொண்டிருந்த போது, தான் காபி, தேநீர் குடிப்பதில்லை. புகைப்பதில்லை, மது அருந்துவதில்லை. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதாக, என்னிடம் சொன்னார்.
அன்று, மாட்டுக்கார வேலன் படப்பிடிப்பு, சூட்டும், கோட்டுமா நின்றிருந்தார், எம்.ஜி.ஆர்., அப்போது, நான், 'படத்தில் மாட்டுக்காரனாக நடிக்கிறீங்க, ஆனா, உங்க உடை, சூட்டும், கோட்டுமா?' என்று வியந்தபடி கேட்டேன்.
கண்ணைச் சிமிட்டியபடி, 'அதுதான் சினிமா. நிழலையும் நிஜமாக நம்ப வைக்கும். அரசியலிலும் அதுவே. புரிந்ததா?' என்றார், எம்.ஜி.ஆர்.,
நடுத்தெரு நாராயணன்

