
முன்னாள் இங்கிலாந்து பிரதமர் சர்ச்சிலின் அந்தரங்க ஊழியராக பணியாற்றிய, நார்மன் என்பவர், 'மை இயர்ஸ் வித் சர்ச்சில்!' என்ற புத்தகத்தில் எழுதியது: 'பூ ட்ஸ்' ரகத்தைச் சேர்ந்த வளர்ப்பு நாயான ரூபஸிடம் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் மிகுந்த அன்பு பாராட்டுவார். முதலில் அதன் பசி அடங்கிய பிறகு தான் அவர் உண்ணத் துவங்குவார், என் எஜமானர்.
உணவு மேஜையச் சுற்றி விருந்தினர்கள் எல்லாரும் அமர்ந்த பின், ஒரு பணிப் பெண் வருவாள். நாயுணவு அடங்கிய கிண்ணம் ஒரு கையிலும், ஒரு சிறிய பாய் மறு கையிலுமாக எடுத்து வந்து, எஜமானரின் நாற்காலிக்கு பக்கத்தில் பாய் விரிப்பாள். ரூபஸை அழைத்து வரச் சொல்லி, கிண்ணத்தை அதன் முன் வைப்பார், எஜமானர். நாய் சாப்பிட்டு முடிக்கும் முன் யாருக்கும் உணவு பரிமாறப்பட மாட்டது.
எஜமானர் வெளியூர் சென்று திரும்பும்போது ரூபஸ், ரயிலடிக்கு அழைத்து வரப்படுவது வழக்கம். அவர் ரயிலை விட்டு இறங்கியதும், அதை அவிழ்த்து விடுவர். அவரை ஆவலுடன் வரவேற்கும் முதல் ஜீவன் அதுவாகவே இருக்கும்.
ஒருநாள் ரயிலை விட்டு எஜமானர் இறங்கியதும், நானும் இறங்கி அவருக்குப் பக்கத்தில் நின்றேன். எஜமானரை அலட்சியம் செய்து விட்டு, என் மீது தாவி நக்கிக் கொடுத்தது, ரூபஸ். நாயை கோபித்துக் கொள்ள, அவர் அன்பு இடம் கொடுக்கவில்லை. ஆனால், அவருக்கு உள்ளுக்குள் வருத்தம். 'இனிமேல் நாங்கள் இருவரும் சந்திப்பதற்கு முன், நீ ரயிலை விட்டு இறங்கக் கூடாது...' என்று என்னை எச்சரித்தார்.
பொதுவாக, சர்ச்சில் குடும்பத்தினர் அனைவருக்குமே, விலங்குகளிடம் ஈடுபாடு உண்டு. என் எஜமானர், தன் மூத்த மகளை, குரங்கு மேரி என்றும், இளையவளான சாராவை, கோவேறு கழுதை என்றும் அழைப்பது வழக்கம். ஒருநாள் தம்பதி சமேதராக உணவருந்திக் கொண்டிருக்கும் போது, மிஸ்டர் சர்ச்சில், தன் மனைவியின் கையைப் பிடித்து அழுத்தி, 'என் அருமைப் பூனைக்குட்டி!' என்று உற்சாகத்துடன் அழைப்பதை என் காதாரக் கேட்டேன். பதிலுக்கு, 'என் சிட்டுப் பன்றிக் குட்டி!' என்று கொஞ்சினார், என் எஜமானி.
என் எஜமானருக்கு, அவரது பெற்றோரிடம் அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் உண்டு. ஆனால், அவர் அப்பா, ஒரு பெரிய அரசியல்வாதியாகவும், தாய் ஒரு சமூகப் பட்டாம்பூச்சியாகவும் இருந்ததால், அவர்களுக்கு, சர்ச்சிலிடம் நெருங்கிப் பழக நேரமில்லாமல், போய்விட்டது. அந்த ஏக்கத்தை தீர்த்து வைத்தவர், அவரது மனைவி தான்.
மனைவியின் ஆலோசனையை கேட்டு, அதன்படியே செயல்படுவார், சர்ச்சில். கட்டுரை எழுதினால், அதை முதலில் மனைவியிடம் படித்துக் காட்டிவிட்டு தான், பிரசுரத்துக்கு அனுப்புவார். அதிர்ச்சி தரும் எந்த சம்பவம் நேர்ந்தாலும், எஜமான் தன் மனைவியிடம் ஓடுவார். திரும்பி வரும் போது, அவர் முகத்தில் கவலையின் ரேகையே இருக்காது. இவ்வாறு தன் நுாலில் குறிப்பிட்டுள்ளார், உதவியாளர், நார்மன்.
**********
நுாறு பேருக்கு கேட்கக் கூடியதை, பல்லாயிரம் பேருக்கு பறைசாற்றும் ஒலி பெருக்கி, மேடையில் அடுத்தவர் காதில் முணுமுணுப்பதை கூட ஊரறிய அம்பலப்படுத்தி விடும்.
ஒரு முறை, சென்னை தீவுத் திடல் மைதானத்தில், பெரிய பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார், நேரு. பொறுப்புள்ள பிரமுகர் ஒருவர், நேருவிடம் சோடாவை நீட்டினார். அவ்வளவு தான், பேச்சு ஓட்டம் தடைபட்ட எரிச்சலில், 'முட்டாள்' என்று, நேரு கடிந்து கொண்டது, ஒலி பெருக்கியால் கூட்டத்திலிருந்த எல்லாருக்கும் கேட்டு விட்டது.
இந்த அளவுக்கு வெளிப்படையாக இல்லாவிட்டாலும், ஒரு முறை, திருவல்லிக்கேணி கூட்டத்தில், ராஜாஜி பேசிக் கொண்டிருந்தபோது, மேடையில் ஏதோ சலசலப்பு கேட்டு திரும்பி பார்த்தார். அங்கு அமர்வதற்கு இடம் தேடிக் கொண்டிருந்தார், காஸா சுப்பாராவ் என்ற காங்கிரஸ்காரர்.
'என்ன சிரமப் படறே?' என்றார், ராஜாஜி.
'கீழே உட்கார்ந்தா. காது கேட்கலை; அதனாலே, இங்கு வந்தேன்!' என்று சமாதானம் சொன்னார், சுப்பாராவ்.
'இங்கேயும் உங்களுக்கு கேட்காது...' என்று காரமாக, ராஜாஜி கண்டித்தது, லட்சம் காதுகளுக்கு எட்டி விட்டது.
நடுத்தெரு நாராயணன்

