
பாரதியாரின் மகள் சகுந்தலா, 'என் தந்தை' என்ற நுாலில் எழுதியது: பொ ய் சொல்பவர்களை காணவும் சகிக்க மாட்டார், என் தந்தை. எல்லா குற்றங்களையும் விட அது பெரியது என்பார். ஒரு நாள் மாலை பத்திரிகைக்கு எழுதிய முக்கியமான கட்டுரை ஒன்றை தபாலில் சேர்க்கும்படி எங்களிடம் கொடுத்தார். அன்று எங்கள் சினேகிதர்களும், சில குழந்தைகளும் வீட்டுக்கு வந்தனர். அவர்களுடன் சேர்ந்து எல்லாருமாக கடற்கரைக்கு போனோம்.
அன்று மவுன விரதமாகையால், என் தந்தை, எங்களுடன் வரவில்லை. கடற்கரை அருகில் தான் தபால் ஆபீஸ். இரவு, 8:00 மணிக்கு வீடு திரும்பும் போது தான் எங்களுக்கு கட்டுரை ஞாபகம் வந்தது. அதை கொண்டு வர மறந்து விட்டோம்.
தந்தையின் மனம் வருந்தாதிருக்கும்படி அவர்தம் கோபத்துக்கு அஞ்சி, (அவருக்கு முன் கோபம் அதிகம். பின்னால் தாமே மிக்க வருத்தப்படுவார்) 'கடிதத்தை தபாலில் சேர்த்தாய்விட்டது...' என்று பொய் சொல்லி, மறுநாள் காலையில் தபாலில் சேர்த்து விடலாம் என்று நானும், என் தமக்கையும் தீர்மானம் செய்து, வீட்டுக்கு வந்தோம்.
வாசற்கதவை திறப்பதற்காக கீழே வந்தார், தந்தை. அவரது கம்பீரமான முகத்தைப் பார்த்தவுடனேயே, எங்களுக்கு அவரிடம் அந்தச் சிறு பொய் கூட சொல்ல மனம் வரவில்லை. அவரது மாசற்ற விழிகள் எங்களை உண்மை கூறும்படி வற்புறுத்தின.
'நாங்கள் தபால் ஆபீசுக்கு போக மறந்து விட்டோம். நாளை காலையில் தவறாமல், 6:00 மணிக்கு நானே போய் போட்டு விடுகிறேன். மன்னிக்க வேண்டும்...' என்று தந்தையிடம் சொன்னேன், நான்.
எங்கள் வீட்டில் பெரியவர்களாயினும், சிறுவர்களாயினும் யாராயிருந்தாலும் தப்பு செய்தால், உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். அது, எத்தகைய குற்றமானாலும் மன்னிப்பு கேட்டால், கட்டாயம் வழங்கப்படும்.
என் தந்தை, 'நானே, உங்களிடம் சொல்ல மறந்து போனேன். அதில், ஒரு திருத்தம் செய்ய வேண்டியிருந்தது. நாளை அனுப்பினால் போதும்...' என்று, ஒரு காகிதத்தில் எழுதிக் காண்பித்தார். அவரிடம் நாங்கள் பொய் சொல்ல நினைத்ததை இன்று நினைத்தாலும் மனம் பதறும்.
தெரியாமல் செய்த குற்றத்திற்கு, அது எத்தனை பெரிய தவறாக இருந்தாலும், மன்னிப்பு உண்டு. பொய் சொல்லுதல் மற்றும் ஏமாற்றுதலை, என் தந்தை ஒரு நாளும் மன்னிக்க மாட்டார்.
'பொய் சொல்லக் கூடாது பாப்பா...' என்று அவர் எழுதிய பாடல், என் மனதை விட்டு அகலுவதேயில்லை.
- இப்படி எழுதியுள்ளார் பாரதியாரின் மகள்.
க டந்த, 1949ல், மருதகாசியும், கண்ணதாசனும் ஒரே சமயத்தில் தான் தமிழ் திரையுலகில் பாடலாசிரியர்களாக அறிமுகமாயினர். 1958ல், வெளிவந்த, 52 படங்களில், 48 படங்களுக்கு முழுக்க முழுக்க, மருதகாசி எழுதிய பாடல்கள் தான் இடம் பெற்றது.
கடந்த, 1945ல், நல்ல திரைக்கதை, அதற்கு பொருத்தமான வசனங்கள் உள்ள படங்கள் தான் வெற்றி பெற்றன. இந்த இரண்டிலும் அந்த கால கட்டத்தில் பெரும்புகழ் பெற்றவர், வசனகர்த்தா இளங்கோவன். இவர், முதலில் பத்திரிகை துறையில் இருந்தவர்.
கடந்த, 1952ல், வெளிவந்த, பராசக்தி படம் பெரும் வெற்றி பெற்றது. இதற்கு காரணம், நல்ல திரைக்கதை தான். இதை எழுதியவர், பாவலர் பாலசுந்தரம். இந்த படத்தை, இரட்டை இயக்குனர்களான, கிருஷ்ணன்-பஞ்சு இயக்கினர். இவை வெற்றிக்கு காரணம் என்றாலும், பேசப்பட்டவர், படத்துக்கு வசனம் எழுதிய, கருணாநிதி தான்.
- நடுத்தெரு நாராயணன்

