PUBLISHED ON : மே 17, 2026

திரைப்பட வசனகர்த்தாவான, ஆரூர் தாஸ் எழுதிய, 'சினிமாவின் மறுபக்கம் - பாகம் 2!' என்ற நுாலிலிருந்து: மா ர்டன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த, மகேஸ்வரி படத்திற்காக ஒரு பாடலை எழுதிக் கொடுத்தார், பாரதிதாசன்.
பாடலில் திருத்தம் வேண்டும் என, அவரிடம் கேட்டனர்.படத்திற்கான பாடலை எழுதிய பின், திருத்தம் செய்யச் சொன்னால், ஏற்கமாட்டார், பாரதிதாசன்; அப்படி ஒரு பிடிவாதம்.
உடனே, கோபமடைந்த, பாரதிதாசன், தன்னுடன் அழைத்து சென்றிருந்த, பையனை காட்டி, 'இந்த பாட்டை நான் எழுத மாட்டேன். என் கூட வந்திருக்கானே இவன், எழுதுவான்...' என்று கூற, வெலவெலுத்துப் போனான், அந்த பையன்.
'பயப்படாதே, தைரியமாக எழுது. எல்லாம் நல்லா வரும். எழுது...' என்று, பையனை தட்டிக் கொடுத்தார், பாரதிதாசன்.
உடனே, அவன் எழுதிய வரிகள், 'அம்பிகையே முத்துமாரியம்மா - உன்னை
நம்பி வந்தேன் ஒரு காரியமா,
ஆளை விழுங்குற காலமம்மா - இங்கு
ஏழை நிலைமையைக் கேளுமம்மா...' என்று எழுதினான்.
இந்த பாடல் இசையமைப்பாளருக்கு பிடித்து போனது. இது, மார்டன் தியேட்டர்ஸ் நிறுவன முதலாளி டி.ஆர்.சுந்தரத்தின் கவனத்துக்கும் சென்றது.
'பாடல் நல்லா இருக்கே, இனிமே இந்த பையனை வச்சே, மத்த எல்லா படங்களுக்கும் வேண்டிய பாடல்களை எழுதி வாங்கிக்குங்க...' எனக் கூறி விட்டார்.
பின், பாரதிதாசனின் ஆசியுடன், பல படங்களுக்கு தனித்து பாடல் எழுத ஆரம்பித்த அந்த பையனின் பெயர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
த மிழ்நாடு, அன்று சென்னை மாகாணம் என, அழைக்கப்பட்ட காலம். சென்னை மூர்மார்க்கெட்டை ஒட்டிய விக்டோரியா பப்ளிக் ஹாலில், ஒரு மாலை வேளை, ஏராளமானோர் ஒரு அதிசயத்தை காணப்போகும் ஆவலில் கூடியிருந்தனர். ஹாலில் ஆங்கிலேயர் ஒருவர், ஒரு புதிய கருவியை வைத்துக் கொண்டு, 'சினிமாஸ்கோப்' என்று விளம்பரப்படுத்தப்பட்ட காட்சியைக்காட்ட தயாராகி கொண்டிருந்தார்.
அன்று விக்டோரியா ஹாலில் காட்டப்பட்டவை, சில நிமிடங்களே ஓடும் மவுன படங்கள். ரயில் வருவது, தொழிற்சாலையிலிருந்து வீடு திரும்புவோர் போன்ற துண்டு படங்களாகவே அவை இருந்தன.
இதன் பிறகு, ஆங்கிலேயர்கள், சென்னையில் ஆங்காங்கே திறந்தவெளிகளில் இதுபோன்ற துண்டு படங்களை காட்ட, டிக்கெட் போட்டு வசூல் செய்தனர். எழும்பூர், சென்ட்ரல், ஜார்ஜ் டவுன் பகுதிகள் தான், அப்போதைய சென்னை. அங்கே திறந்தவெளி மைதானங்கள் நிறைய இருந்தன. மின்சார தேவையும் அப்போது அவசியம் இல்லை. காரணம், ஆரம்பகாலப் புரொஜக்டர்களில், மக்னீசியம் உலோகத்தை (ரிப்பன் அல்லது துாள் வடிவில்) எரிக்கும்போது, அது மிக அதிக பிரகாசமான, வெள்ளை ஒளியை வெளிபடுத்ததும். இந்த ஒளியே புரொஜக்டர்களில், பயன்படுத்தப்பட்டன.
இரண்டு நாட்கள் காட்சி நடத்தப்படும். பிறகு, கூடாரம் பிரித்து, சுருட்டி எடுத்துக் கொண்டு, வேறிடம் கிளம்பும் அந்தக்குழு. கொஞ்சநாள் இதை, வினோதக் கலையாக நினைத்த மக்கள், விரைவில் சினிமாவை ஒரு பொழுதுபோக்கு கலையாக ஏற்றுக் கொண்டனர். மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதைப் புரிந்து கொண்ட, மேஜர் வார்விக் என்பவர், சென்னை, மவுண்ட் ரோட்டில் ஒரு புதிய நிரந்தர சினிமா கொட்டகையை கட்டினார்.
இதன் பெயர், எலக்ட்ரிக் தியேட்டர். ஏன், இந்தப் பெயர்? மக்னீசிய விளக்குகளை விட்டு, மின்சார ஒளியின் மூலம் திரையிடும் புரொஜக்டர் என்று விளம்பரப்படுத்த தான்.
சென்னை அண்ணாசாலை தபால் நிலையத்திற்கும், 'தன்' பில்டிங்கிற்கும் இடையே உள்ள பழைய கட்டடம் தான் இது. இதுவே, தென்னகத்தின் முதல் திரையரங்கும் கூட. வர்த்தக ரீதியான சினிமாவை தினசரி காட்டத் துவங்கியது இங்கே தான்.
- நடுத்தெரு நாராயணன்
