sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : மே 24, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 24, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக முன்னாள் முதல்வர், அண்ணாதுரை, 1969ல் மறைந்த பிறகு, அடுத்து யார் முதல்வர் என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது தி.மு.க., கட்சியிலிருந்த, கருணாநிதி, நெடுஞ்செழியன், மதியழகன் மூவருமே முதலமைச்சர் பதவிக்கு முயன்றனர். கருணாநிதி, முதலமைச்சராவதற்கு, அக்கட்சியிலிருந்த, எம்.ஜி.ஆர்., ஆதரவு திரட்டினார். 1971 தேர்தலிலும் பங்கேற்று, தி.மு.க.,வுக்கு வெற்றியை தேடித் தந்தார்.

அச்சமயத்தில், தி.மு.க.வின், ஆறு லட்சம் உறுப்பினர்களில் மூன்று லட்சம் பேர், எம்.ஜி.ஆர்., ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1971ம் ஆண்டு தேர்தலுக்கு பின், எம்.ஜி.ஆர்., தனக்கு அமைச்சரவையில் ஒரு இடம் கேட்டதாகவும், அப்போது, முதல்வராக இருந்த கருணாநிதி மறுத்து விட்டதாகவும், அதேபோல், 1970களின் தொடக்கத்தில் எம்.ஜி.ஆர்., வெளிநாடுகளின் படப்பிடிப்புக்கு செல்ல, போதுமான நிதி வசதி இல்லாமல் இருந்தபோது, உதவி செய்ய கருணாநிதி மறுத்து விட்டதாகவும் ஒரு தகவல்.

மேலும், எம்.ஜி.ஆருக்கு வருமான வரி பாக்கியாக, 18 லட்சம் ரூபாய் இருந்தது. இதற்கு வருமான வரித்துறையினர் அவரது சொத்துகளை முடக்க முயன்ற போது, உயர் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்க முயன்றார், எம்.ஜி.ஆர்., பிறகு, அவர் தம் மனுவை விலக்கிக் கொண்டார்.

இப்போக்கை, கருணாநிதி விமர்சிக்கத் தயங்கவில்லை. அதாவது, எம்.ஜி.ஆருக்கும், காங்கிரசுக்கும் உடன்பாடு ஏற்பட்டதாக கூறினார்.

முன்னாள் பிரதமர், இந்திரா, முன்னாள் மத்திய அமைச்சர், சி.சுப்ரமணியம் மற்றும் முன்னாள் மக்களவை உறுப்பினர், மோகன் குமாரமங்கலம் ஆகியோரை, எம்.ஜி.ஆர்., சந்தித்தது தன்னை வீழ்த்தவே என்று கூறினார், கருணாநிதி. இவ்வகை மோதல்கள் நடந்தபோது, தி.மு.க.,வின் பொருளாளராக இருந்தார், எம்.ஜி.ஆர்.,

மதுரையில் நடந்த, கட்சி மாநாட்டு நிதி வசூலில் சரியான கணக்கு கொண்டுவரப்படவில்லை; வரவு செலவும் முறையாக வெளிப்படுத்தப்படவில்லை. இவற்றை, எம்.ஜி.ஆர்., வெளிப்படையாக கேள்வியாக முன் வைத்தது, பல தி.மு.க., தலைவர்களுக்கு, இடர்பாட்டை ஏற்படுத்தியது. மேலும், எல்லா மாவட்டச் செயலாளர்கள், சட்டசபை உறுப்பினர்கள், அமைச்சர்களும் தங்களது சொத்து மதிப்புகளை வெளிப்படுத்த வேண்டும் என்று, எம்.ஜி.ஆர்., அறிவித்தவுடன், பிரச்னை உச்சத்துக்கு போனது.

அப்போதைய தி.மு.க., பொதுச் செயலாளர், நெடுஞ்செழியன், பொருளாளர் பதவியிலிருந்தும், அக்கட்சியின் உறுப்பினர் நிலையிலிருந்தும், எம்.ஜி.ஆரை, தற்காலிகமாக நீக்க தீர்மானம் கொண்டு வந்தார். எம்.ஜி.ஆர்., நீக்கப்பட்டதை எதிர்த்து, கலவரம் மூண்டது; மன்னிப்பு கேட்க மறுப்பு தெரிவித்தார், எம்.ஜி.ஆர்.,

தி.மு.க., பொதுக்குழுவும், எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து, நீக்க உறுதி செய்தது. 300 உறுப்பினர்கள் கொண்ட பொதுக்குழுவில், 277 உறுப்பினர்கள் இதை ஆமோதித்தனர். இதன் விளைவாக, அனைத்து எம்.ஜி.ஆர்., ரசிகர் மன்றங்களையும் இணைத்து, அக்டோபர் 18, 1972ல், அண்ணா தி.மு.க., என்ற புதுக் கட்சியை துவக்கினார், எம்.ஜி.ஆர்.,

******

நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் நடிக்கும் படங்களில், அவர் பாடும் பாடல்களை, பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி தான் எழுதுவார். முதல் தடவையாக, கடந்த 1956ல், ராஜாராணி படத்தில், 'சிரிப்பு இதன் சிறப்பைச் சீர்துாக்கி பார்ப்பது நமது சிறப்பு...' என்ற பாடலை, பாடலாசிரியர், மருதகாசி எழுதினார்.

அந்த பாடலில், பல வகையான சிரிப்புகள் பற்றி எழுதிய, மருதகாசி, 'இது சங்கீத சிரிப்பு...' என்று பாடலை முடித்திருப்பார்.

இந்த பாடலை, என்.எஸ்.கிருஷ்ணன் எப்படி பாடப்போகிறார் என, பாடல் பதிவு செய்யும் இடத்தில் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். அவர் பாடலை பாடிய போது, அந்தந்த வரிகளுக்கு ஏற்ப, விதவிதமான சிரிப்புகளை சிரித்து அசத்தினார், என்.எஸ்.கிருஷ்ணன். இறுதியில், 'இது சங்கீத சிரிப்பு...' என, பாடி சங்கீதச் ஸ்வரங்களில் சிரிக்க ஆரம்பித்தார்.

இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத, அவர் மனைவி, மதுரம், இசைக்கலைஞர்கள், என்ஜினியர், பாடலாசிரியர், மருதகாசி மற்றும் அங்கிருந்த அனைவருமே, விழுந்து விழுந்து சிரித்தனர். இன்றும், இப்பாடலை கேட்டால், ரசிக்கும்படி இருக்கும்.

மொத்தம், 95 திரைப்படங்களில் நடித்துள்ளார், என்.எஸ்.கிருஷ்ணன்.

- நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us