PUBLISHED ON : ஆக 23, 2026

கடந்த, 1940ல் இங்கிலாந்து நாட்டின் பிரதமராய் இருந்தவர், வின்ஸ்டன் சர்ச்சில். இலக்கியத்திற்கான, நோபல் பரிசு பெற்ற முதல் பிரிட்டிஷ் பிரதமர் இவர்.
சர்ச்சில் மிகச் சிறந்த ஓவியரும் கூட. இயற்கை காட்சிகளை மிகவும் தத்ரூபமாக வரைவது இவருக்கு மிகவும் பிடிக்கும்.
ஒருநாள், ஓய்வு நேரத்தில், அழகான இயற்கை காட்சியை வரைந்து கொண்டிருந்தார், சர்ச்சில்.
அப்போது அங்கே வந்த, அவரது நண்பர், அந்த ஓவியத்தை பார்த்து, 'நீங்கள் ஏன் இயற்கை காட்சிகளை மட்டுமே வரைகிறீர்கள்?' என்று கேட்டார்.
அதைக்கேட்டு சிரித்த சர்ச்சில், 'அதற்கு காரணம் இருக்கிறது நண்பரே... தன்னை அழகாக வரையவில்லை என்று, எந்த ஒரு இயற்கை காட்சியும் என்னிடம் புகார் சொல்லாது அல்லவா!' என்றார்.
வாயடைத்து போனார், நண்பர்.
********
தமிழ் மொழி மீது கொண்ட அதீத பற்றால், தன் பெயரை, பரிதிமாற்கலைஞர் என்று மாற்றிக் கொண்டவர், சூரிய நாராயண சாஸ்திரி. தனித்தமிழ் இயக்கத்திற்கு வித்திட்ட இவர், தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி கோரிய முதல் அறிஞர் ஆவார்.
ஒருநாள் அவர் மரபு பாடல்களில் வரவேண்டிய இலக்கண அமைப்பு பற்றிய பாடத்தை வகுப்பில் நடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது, ஒரு மாணவன் எழுந்து, 'ஐயா, நீங்கள் நடத்தும் பாடத்தில் சீர், தளை புரிகிறது. தொடை தெரிகிறது. அதற்குமேல் எதுவும் புரியவில்லை. சற்று விளக்கமாகக் கூறுங்கள்...' என்றான், கிண்டலாக.
அவன், தன்னைக் கிண்டல் செய்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட, சாஸ்திரி, 'பிறகு என் அறைக்குத் தனியே வா. விளக்குமாற்றால் விளக்குகிறேன்...' என்றார்.
விளக்குமாற்றால் என்பது இரு பொருள் உடையது. துடைப்பத்தால் என்பது ஒரு பொருள். விளக்கும் வழியில் என்பது இன்னொரு பொருள்.
அதைக்கேட்டு வகுப்பு மாணவர்கள் அனைவரும் சிரிக்க, கிண்டல் செய்த மாணவன் வெட்கி தலைகுனிந்தான்.
********
காமராஜர், தமிழக முதல்வராக பதவி வகித்திருந்த சமயம். ஊரிலிருந்து அவரது தங்கை, நாகம்மையிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது.
அதில், 'அண்ணே! எனக்கு உடல்நலம் சரியில்லை. மருத்துவம் பார்க்க பெரிய டாக்டரிடம் போக வேண்டும். அதற்கு நிறைய பணம் வேண்டும். அனுப்பி வையுங்கள்...' என்று எழுதப் பட்டிருந்தது.
இதைப் படித்த, காமராஜருக்கு கோபம் வந்து விட்டது. உடனே, அவர், 20 ரூபாய் பணத்தை மட்டும் மணியார்டரில் அனுப்பி விட்டு, ஒரு கடிதத்தையும் எழுதி அனுப்பினார்.
அதில், 'அன்பு நாகம்மை, நீ பெரிய டாக்டரிடம் எல்லாம் போக வேண்டாம். மதுரையிலே அரசாங்க ஆஸ்பத்திரி இருக்கு. அங்கே போனால், இலவச வைத்தியம் கிடைக்கும். உன் செலவுக்கு, 20 ரூபாய் மட்டும் அனுப்பியிருக்கிறேன். இதற்கு மேல் என்னிடம் எதையும் எதிர்பார்க்காதே...' என்று எழுதியிருந்தார்.
'காமராஜர் ஆட்சி... காமராஜர் ஆட்சி...' என்று பலரும் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறோம். அது இது தான்.
