PUBLISHED ON : செப் 13, 2026

எழுத்தாளர், எஸ்.வி.எஸ்., தொகுத்து, வானதி பதிப்பகம் வெளியீடான, 'அறிவின் குரல் - ராஜாஜியின் மணிமொழிகள்!' என்ற நுாலிலிருந்து: ரா ஜாஜியை முன்னுக்கு பின் முரணாக பேசுபவர் என, சிலர் குறிப்பிடுவர். அவர் மட்டுமல்ல, பொதுவாழ்வில் கலந்துகொள்ளும் பிரபலங்கள், பேசும் போது இப்படி குற்றச்சாட்டுக்கு ஆளாவதுண்டு.
ராஜாஜி சென்னை மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லுாரியில் பேசியது:
சமஸ்கிருத வளர்ச்சி தான் நின்று விட்டதே... அதையே ஓயாமல் மீண்டும் மீண்டும் படித்து ஏன் காலவிரயம் செய்கிறீர்கள்? நல்ல இலக்கிய வளம் செறிந்த மொழியும், நன்கு வளர்ந்து வரும் மொழிதான், தமிழ். அதில் கவனம் செலுத்துங்கள்...' என்றார்.
பின்னர், 10 நாட்கள் கழித்து, ராஜாஜி சமஸ்கிருத கல்லுாரியில் பேசிய போது...
'உங்களில் எத்தனை பேர், சமஸ்கிருதம் படித்திருக்கிறீர்கள். கையைத் துாக்குங்கள்...' என்றார்.
கணிசமானோர், தாங்கள் சமஸ்கிருதம் படித்திருப்பதாக தங்கள் கைகளை துாக்கினர்.
அதைப்பார்த்து, 'நீங்கள் இத்தனை பேர் சமஸ்கிருதம் படித்திருப்பதை கண்டு மகிழ்கிறேன். உங்கள் எதிர்கால வாழ்க்கையின் வேகம், உங்களை எங்கெல்லாம் இழுத்துச் சென்றாலும், சமஸ்கிருதத்தை மறந்து விடாதீர்கள்; படித்து வாருங்கள். அதில், நம் பாரத நாட்டு அரும் செல்வம் பொதிந்து கிடக்கிறது...' என்றார்.
இதை வைத்து, முன்னுக்கு பின் முரண் என, சுலபமாக கூறிவிடலாம். ஆனால், உண்மை என்ன தெரியுமா?
'சமஸ்கிருத கல்லுாரியில் குழுமியிருந்த பெரியவர்கள் ஆங்கிலமும், சமஸ்கிருதமும் மட்டும் அறிந்தவர்களாகவும், தமிழைப் பற்றி அவ்வளவு அக்கறை இல்லாதவர்களாகவும் இருந்தனர். ஆக, தமிழை உயர்த்தி பேசினார், ராஜாஜி.
அதே சமயம், சமஸ்கிருத கல்லுாரியில், 'படித்த சமஸ்கிருதத்தை பிற்காலத்தில் மறந்து விடக்கூடும். எனவே, மறந்து விடாதீர்கள். அருஞ்செல்வமுள்ள மொழி...' என, நினைவுபடுத்தினார், ராஜாஜி. அவ்வளவுதான்.
*****
கடந்த 1930களில், புகழ்பெற்ற டாக்டர் ரங்காச்சாரி, எம்.ஆர்.ராதா நடித்த, நாடகத்தை அடிக்கடி பார்ப்பார். அவரோடு, ராதாவுக்கு பழக்கம் உண்டு. ரங்காச்சாரி பற்றி ராதாவே கூறியது...
'அந்தக் காலத்தில், வெவ்வேறு நோய்களுக்கு தனித்தனி டாக்டர் கிடையாது. எல்லா நோய்க்கும் ஒரே டாக்டர் தான். அந்த, டாக்டர் ரங்காச்சாரி தான். அவரிடம் எப்பவும், இரண்டு கார் இருக்கும். ஒண்ணு 'ரோல்ஸ் ராய்ஸ்' கார். இன்னொன்று, 'போர்டு' கார். பணக்காரங்க வீட்டுக்கு, 'ரோல்ஸ் ராய்ஸில்' போவார். ஏழைகள் வீட்டிற்கு, 'போர்டு' காரில் செல்வார். எங்கே போனாலும் பெ ட்ரோல் செலவுக்காவது அவருக்கு, 'விசிட்டிங் பீஸாக' ஒரு ரூபாய் கொடுக்க வேண்டும். கொடுக்கலைன்னா, இன்னொரு முறை கூப்பிட்டா வரமாட்டார். அந்த காலத்து, ஒரு ரூபாயின் மதிப்பு, இன்று, 500 ரூபாய்க்கு சமம்.
'காலையில் பழைய சோறு தான் சாப்பிடுவார், ரங்காச்சாரி. நாம் சாப்பிடும் பழைய சோற்றுக்கும், ரங்காச்சாரி சாப்பிடும் பழைய சோற்றுக்கும் கொஞ்சம் வித்தியாசம் உண்டு. அது என்ன வித்தியாசம் என்றால்...
'இரவு வடிச்ச சோற்றிலே தண்ணியை ஊற்றுவதற்கு பதிலாக, அவர் பாலை காய்ச்சி ஊற்றி, அந்த பாலிலே ஒருதுளி தயிரை உறைக் குத்தி, வெச்சுடுவார். விடிஞ்சதும் பார்த்தா, அந்த சோற்றோடு தயிரும் தோய்ஞ்சிருக்கும். அதைத்தான் அவர் சாப்பிடுவார்.
'அந்த மாதிரி, பழைய சோறைத்தான் நானும் சாப்பிடுவேன்.
'அதுமட்டுமல்ல, டாக்டர் முதல் நாள் இரவே தண்ணீரை காய்ச்சி ஆற வெச்சு, மறுநாள் பொழுது விடிஞ்சதும் அதில் குளிப்பார். அதே மாதிரி நானும் குளிப்பேன்...' என்றார், ராதா.
நடுத்தெரு நாராயணன்
