PUBLISHED ON : அக் 19, 2025

மும்பையிலிருந்து, 220 கி.மீ., துாரத்தில் உள்ளது, புருஷ்வாடி என்ற கிராமம்.
இங்கு தீபாவளியை வித்தியாசமாய் கொண்டாடுகின்றனர், அக்கிராம மக்கள்.
காரணம்...
இங்கு மின்மினிப் பூச்சிகள் ஏராளம். இதனால், அவற்றை தொல்லைப்படுத்தாத வகையில் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.
தீபாவளியன்று மாலையில் பெண்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டு விட்டு, பொது இடத்திற்கு வருவர். உள்ளூர் குழந்தைகள் கும்பல் கும்பலாக சென்று, ஒவ்வொரு வீட்டு முன் நின்று நாட்டுப்புற பாடல்களை பாட, அவர்களுக்கு வீட்டில் உள்ளோர் பணம் மற்றும் பண்டங்களை தருவர். அவற்றை பொது இடத்தில் உள்ள கமிட்டியினரிடம் தருவர், அக்குழந்தைகள்.
பொது இடத்தில், விறகுகள், கம்புகள் அடுக்கப்பட்டு சொக்கப்பானை கொளுத்தும் விழா நடக்கும். அச்சமயம், உள்ளூர் தெய்வத்தை, சப்பரத்தில் எழுந்தருள செய்வர். அதற்கு பூஜை செய்வர். அதே சமயம், பெண்கள் தீமூட்டிய இடத்தில், குழந்தைகள் கொண்டு வந்த பொருட்கள் மற்றும் சிலவற்றை வாங்கி சமைப்பர்.
பூஜையின் முடிவில், அவற்றை இறைவனுக்கு படைத்து, பொது விருந்து நடத்தி கிராமமே சாப்பிடும். ஊரில் பட்டாசு வெடிப்பது கிடையாது.
— ராஜிராதா