/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: காட்டு ஷ்யாம் திருவிழா!
/
விசேஷம் இது வித்தியாசம்: காட்டு ஷ்யாம் திருவிழா!
PUBLISHED ON : பிப் 22, 2026

பொதுவாக , திருவிழாக்களின் பெயர்கள், தீபாவளி, பொங்கல் என்றுதான் இருக்கும். ஆனால், காட்டு ஷ்யாம் என்றொரு திருவிழா, ராஜஸ்தான் மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது.
காட்டு ஷ்யாம் திருவிழா பற்றி தெரிந்து கொள்வோமா?
மகாபாரதத்தில், தர்மத்தைக் காக்க கடுமையாகப் போராடினார், கிருஷ்ணர். இந்த சமயத்தில், பீமனின் பேரன், பார்பரிகன், சிவனிடம், மூன்று அம்புகளைப் பெற்றிருந்தான். அதில் ஒரு அம்பு, எதிரி எங்கே ஒளிந்து இருந்தாலும், தேடிச்சென்று கொல்லும் மகிமை கொண்டது. அதே நேரம் ஒரு நிபந்தனையை விதித்திருந்தார், சிவன். வலிமை குறைந்த அணியை சேர்ந்தவர்களுக்கு நீ உதவ வேண்டும் என்பதே அது.
துரியோதனன் பக்கம் சேர்ந்தால், அந்த அணி வலிமை பெற்று விடும். பாண்டவர்கள் பக்கம் சேர்ந்தால், அவர்கள் பக்கம் வலிமை கூடும். இந்த இக்கட்டான நிலையில், பார்பரிகனிடம் உதவி கேட்டார், கிருஷ்ணர்.
'நீ யார் பக்கம் சேர்ந்தாலும் அநியாயம் செய்தவன் ஆகி விடுவாய். எனவே, போரில் நீ கலந்து கொள்ளக்கூடாது. அவ்வாறு பங்கேற்காமல் இருக்க வேண்டுமானால், நீ இறந்தாக வேண்டும்; உன் தலையை எனக்கு தருவாயா?' என்றார்.
'கண்ணா! நீ கேட்டு நான் இல்லை என்பேனா! இதோ பிடி என் காணிக்கையை...' என்றபடி, தன் தலையை அறுத்துக் கொடுத்து விட்டான், பார்பரிகன். எவ்வளவு பெரிய தியாகசீலன் பாருங்கள்.
மகாபாரத போர் முடிந்ததும், பார்பரிகனின் தலை புதைக்கப்பட்டது.
கடந்த 10ம் நூற்றாண்டில் , ஒரு இடத்தில் பசு ஒன்று, தினமும் பால் சுரந்து வந்துள்ளது. அதை பார்த்த ஊர் மக்கள், அந்த இடத்தை தோண்டிய போது, ஒரு தலை கிடைத்தது. அது, பார்பரிகனின் தலையாக இருக்கும் என, ஊரார் நம்பி, அங்கு ஒரு கோவிலை கட்டி, தலையை பிரதிஷ்டை செய்து, 'காட்டு ஷ்யாம்' என, அழைத்தனர். அந்த கோவில் ராஜஸ்தான் மாநிலம் ஷிகர் மாவட்டத்திலுள்ள, காட்டு என்ற சிறு நகரில் அைமந்துள்ளது.
'ஷ்யாம்' என்றால், மேகம் போன்ற கருமை என, பொருள். மேகம் போல் அருள் மழை பொழிபவர் என்பதால், பார்பரிகனை மக்கள், 'ஷ்யாம்' என, அழைத்தனர்.
கடந்த, 1027ல் இந்தக் கோவில் கட்டப்பட்டதாகவும், 1720ல் புதுப்பிக்கப்பட்டதாகவும் தகவல் உள்ளது. கோவில் அருகில், 'ஷ்யாம் குண்ட்' என்ற அழகான குளம் இருக்கிறது. இதில், ஏகாதசி தினங்களின் போது நீராடுவது புண்ணியம். பிப்ரவரி 27ல் இருந்து மார்ச் 11 வரை இங்கு, காட்டு ஷ்யாம் மேளா விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. விழாவில், 'ஹாரே கே சஹாரா' என்று கோஷம் எழுப்பி, ஷ்யாமை வழிபடுவர். 'ஏழைகளின் கடவுளே... எங்களுக்கு அருள்புரியுங்கள்...' என்பது இதன் பொருள்.
சென்னை மற்றும் கோவை நகரங்களிலிருந்து, ஜெய்ப்பூருக்கு ரயில் மற்றும் விமானத்தில் செல்லலாம்.
அங்கிருந்து, ஷிகர் மாவட்டத்தில் உள்ள காட்டு நகருக்கு 90 கி.மீ., துாரம் உள்ளது. பஸ் மற்றும் டாக்சியில் கோவிலுக்கு செல்ல வசதி உண்டு.
தி. செல்லப்பா

