PUBLISHED ON : அக் 29, 2025

தொடர் மழை, மண்ணில் அதிக ஈரப்பதம், காற்றில் மிதமான ஈரப்பதம் போன்ற காரணிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயிருக்கு சத்துக்கள் கிடைப்பதை தடை செய்வதோடு நோய் தாக்குதலை ஊக்குவிக்கிறது. தழைச்சத்து, மெக்னீசியம், இரும்புச்சத்து பற்றாக்குறையும் வேர், கிழங்கு, தண்டு அழுகல் நோய், இலைப்புள்ளி நோய், இலைக்கருகல் நோய் உருவாகிறது.
மேலாண்மை செய்யும் விதம்
மண்ணில் அதிக ஈரப்பதம் காரணமாக வேர்களுக்கு போதுமான காற்றோட்டம் கிடைக்காமல் ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்வதில் தொய்வு ஏற்படுகிறது. அதிக மழையால் மண்ணில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் கரைந்து பயிர்களுக்கு கிடைக்காதவாறு மண்ணுக்கு அடியிலோ அல்லது வயலை விட்டு வெளியேறியோ பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது.
வடிகால் வசதியை முறைப்படுத்திய பின் இலை வழியாக ஊட்டச்சத்துக்களை கொடுப்பது நல்லது. மழைக்காலம் முடியும் தருணத்தில் மண்ணில் உரம் இடுவது சிறந்தது. போதிய ஊட்டச் சத்து கொடுக்காவிட்டால் மகசூலில் பாதிப்பு ஏற்படும்.
வேர், கிழங்கு தண்டு அழுகல் நோய்
மண்ணில் தொடர் ஈரப்பதம் காரணமாக கிழங்கு, வேர் மற்றும் தண்டு பகுதியில் அழுகல் நோயை ஏற்படுத்தக்கூடிய பூஸாரியம், பைட்டோபோத்ரா போன்ற பூஞ்சைகள் உருவாகும். நோய் தாக்குதலால் பாதிப்படைந்த பயிரின் அடிப்பகுதி இலைகள் மஞ்சள் நிறமாகி பின் கருகி இறந்து விடும்.
தீவிர நோய் தாக்குதலின் போது மஞ்சள் கிழங்கு முழுவதும் அழுகிவிடும் அபாயம் உள்ளது. வயலில் தண்ணீர் தேங்காமல் வடிகால் வசதி செய்வது அவசியம்.
மஞ்சள் இயற்கை சாகுபடியில் அழுகிய பகுதியில் புழுக்கள் இருந்தால் மட்டும் பத்து லிட்டர் தண்ணீரில் தலா 100 மில்லி டிரைக்கோடெர்மா, பேசில்லஸ், மெட்டாரைசியம், மீன் அமிலம் மற்றும் ஹீயூமிக் அமிலம் கலந்து வேர்ப்பகுதியில் ஊற்றவேண்டும்.
ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் 10 லிட்டர் தண்ணீரில் 25 கிராம் என்ற அளவில் கார்பன்டசிம், மேங்கோசெப் அல்லது மெட்டாலக்சிஸ், மேங்கோசெப் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு ஏதேனும் ஒன்றை கலந்து வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும்.
இலைப்புள்ளி, கருகல் நோய்
இலைப்புள்ளி, கருகல் நோய்கள் கொலக்டோடிரைக்கம், டாப்ரினா போன்ற நோய்க்காரணிகளால் ஏற்படுகிறது. வடிகால் வசதியோடு வயலை சுத்தமாக பராமரிக்க வேண்டும். தீவிரமாக பாதிப்படைந்த இலைகளை சேகரித்து அகற்ற வேண்டும். இயற்கை சாகுபடி செய் பவர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை இலை வழியாக சூடோமோனஸ் தெளிக்க வேண்டும்.
இதனுடன் மீன் அமிலம் அல்லது இ.எம். கரைசல் அல்லது பஞ்சகாவ்யா அல்லது கடல்பாசி கலக்க வேண்டும். ரசாயன சாகுபடிக்கு 25 கிராம் மேங்கோசெப் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடை பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
-அருள்மணி உதவி இயக்குநர்தோட்டக்கலைத்துறைகொட்டாம்பட்டி, மதுரை

