PUBLISHED ON : ஜூலை 12, 2026

இதுவும் போதிமரமே
நேர்மறை உணர்வுக்கு முன்னுரிமை அளித்து கல்வி போதிக்கும் இது, கோவை, ஷாஜகான் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ; இங்கு, மாணவ மாணவியர் தங்கள் அன்றாடத்தை மூச்சுப்பயிற்சியுடன் துவக்குகின்றனர். தனியார் தொண்டு நிறுவன பங்களிப்பில் இங்கு 'மனநல ஆலோசகர்' நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளி: சமீபத்திய 'தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை' திட்ட தேர்வில், மாவட்ட அளவில் அதிகபட்சமாக 11 பேர் இங்கிருந்து தேர்வாகி இருக்கின்றனர். மாணவ மாணவியரின் கலை படைப்புகளை ஆண்டு இறுதியில் சிறப்பு புத்தகத்தில் இடம்பெறச் செய்து கவுரவிக்கும் இப்பள்ளி, முதல் மதிப்பெண் பெறுவோரை சுற்றுலா அழைத்துச் சென்று ஊக்கப்படுத்துகிறது!
பெருமை: 'என் அறிவியல் தேடலுக்கு மிகச்சிறந்த வழிகாட்டுதலை இப்பள்ளி வழங்குகிறது. இதனால்தான், பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தில் 'குப்பை மேலாண்மை' சார்ந்த எனது கண்டுபிடிப்பு அடுத்த கட்டத்திற்கு தேர்வாகி உள்ளது. இங்குள்ள 'ஸ்டெம்' ஆய்வகம் என் திறனை சிறப்பாய் மெருகேற்றுகிறது!'
செ.இளமாறன், 7 ம் வகுப்பு
கோரிக்கை: 'சிறந்த கல்விக்கு தனியார் பள்ளிதான்' எனும் எண்ணம் கொண்ட
பெற்றோரே... இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களின் சார்பில் மாதந்தோறும்
பள்ளிக்கு 'வளர்ச்சி நிதி' கிடைக்கிறது. இந்தவகையில், 'மிகச்சிறந்த கல்வி
அனைவருக்கும் கிடைக்கும்' எனும் உத்தரவாதத்தை என்னால் தர இயலும். பிள்ளைகளை
நம்பி அனுப்புங்கள்!'
ரா.தமிழ்செல்வன், தலைமை ஆசிரியர்
