PUBLISHED ON : ஜூலை 05, 2026

தன் முகம் காட்டாத காதல்
வாரணாசியில் அதிகாலை 4:45 மணிக்கு வந்திறங்கும் தஞ்சாவூர் லீலா, தனது குழுவினரை தவற விடுகிறார். அவர் தன் குழுவோடு சேர மலையாளியான மாதவன் உதவுகிறார். இடைப் பட்ட சூழலில் இருவரும் நடக்கின்றனர்; உரையாடுகின்றனர்; பசியாறுகின்றனர். இரவு வருகிறது; விடியல் அவர்களுக்கு என்ன தருகிறது?
'காதல் என்று அடையாளப்படுத்தினால் மட்டுமே லீலா - மாதவன் உறவுக்கு அர்த்தம் சேர்க்க முடியும்' என்கிற கட்டாயமின்றி உணர்வுப்பூர் வமாய் இயக்கி இருக்கிறார் வர்ஷா வாசுதேவ். 'அகத்தை சொல்ல முகம் இருக்கையில் எதற்காக கூடுதல் வசனம், எதற்காக கூடுதல் காட்சி' என சிந்தித்ததன் விளைவாய் எதிலும் மிகையில்லை!
தனது 52 ஆண்டு கால வாழ்வின் ஏக்கத்தை ஒரே நாளில் தீர்த்துக் கொள்ளும் லீலாவாக மது; கங்கையில் மிதந்து நகரும் தீபம் போல திரைக்கதை நீரோட்டத்துடன் பின்னி பிணைந்து செல்கிறது அவரது நடிப்பு. மனதில் உதிக்கும் உணர்வு மூளையை எட்டும் முன்னர் அதை தன் நடிப்பில் வடித்து விடும் ஆச்சரியங்களை நிறைய காணத் தருகிறார் இந்திரன்ஸ்!
'புல்லாங்குழல், தபேலா, வயலின், கிடார் கருவிகளை எந்தெந்த சூழ்நிலைகளில் கோவிந்த் வஸந்தா பேச வைத்திருக்கிறார்' என்பதை ஆழமாய் உணர்வதற்காக, 'மீண்டும் இப்படத்தை பார்க்க வேண்டும்' எனத் தோன்றுகிறது!
'உங்க மனைவியும், என் கணவரும் வானத்துல இருந்து நம்மளை பார்த்து சிரிச்சுக்கிட்டு இருப்பாங்க' என்று மாதவனிடம் லீலா சொல்லும் காட்சியில், அந்த ஜோடிக்கு தன் கேமரா வழி ஆரத்தி எடுத்திருக்கிறார் பைஸ் சித்திக்!
மொட்டு பூவாக மலரும் ரகசிய தருணம் போல், 'இந்த 'காதல்' உணர்வு இவர் களுக்குள் எப்போது வந்தது' என்பதை சொல்லாத திரைக்கதை, கங்கை, தீபம், படித்துறையை சாட்சிகளாக்கி, வயது முதிர்ந்த ஆண் - பெண் இடையிலான உணர்வுமிக்க தருணங்களை மலர்ச்சரமாக கோர்த்திருக்கிறது.
ஒவ்வொரு பூவிலும் 'லீலா - மாதவன்' ஜோடியின் 'கமகம' மனம்.
ஆக..
நம்முடைய சின்ன சின்ன ஆசை பட்டியலில் இணைத்து ரசித்து கொண்டாட வேண்டிய படைப்பு
