
அழகிய மலரும் அன்புள்ள வண்டும்
பிறர் வாழ்வில் தன் இருப்பை உணர வைக்கத் தெரியாத தினேஷ்; தன் புன்னகையால் பட்டென பிறர் மனதில் பதியக்கூடிய மீரா; ஒரு விபத்தால், 'அடுத்த 24 மணி நேரத்தில் நிகழும் எதுவும் மீராவின் மனதில் தங்காது' எனும் நிலையில் அவள் மனம் கவரும் தினேஷ், குறிப்பிட்ட அந்நேரத்திற்குப் பின் மீராவுக்கு யாராகிப் போகிறான்?
நாயகன் ஜுனைத் கானின் வெள்ளந்தி குணம் வெல்ல வேண்டிய முக்கிய காட்சிகளில் கூட, சாய் பல்லவியின் நடிப்பு கொடி நாட்டுகிறது. அகத்தில் ததும்பும் காதலை முகத்தில் கொண்டுவர ஜுனைத் கான் தவறும் காட்சி ஏற்படுத்தும் வெற்றிடத்தை, சாய் பல்லவியின் பேசும் கண்கள் அழகாக நிரப்புகின்றன. காட்சிக்கு காட்சி இப்படி நடிப்பால் 'ஸ்கோர்' செய்வதால் மொத்த படமுமே சாய் பல்லவியின் தோளில் பவனி வருகிறது!
ஜப்பானில் நிகழும் கதைக்கு அங்கு நிகழும் பனி திருவிழாவை திரைக்கதையோடு இணைத்திருக்கின்றனர். ஜப்பானின் இயற்கை பின்னணியில் பெரும்பாலான காட்சிகள் இருப்பது கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது; கதையும் இதமாகி இருக்கிறது; ரம்மியமான பனிப்பொழிவைப் போலவே கதையும் காதலைப் பொழிகிறது.
சாய் பல்லவியின் போனில் இருந்து வீடியோவை ஜுனைத் கான் அழிப்பது உள்ளிட்ட ஒருசில நகர்வுகளை எளிதில் கணிக்க முடிந்தாலும், 'ஈசலின் ஆயுள் கொண்ட காதலின் எதிர்காலம் என்னவாகும்' என்கிற எதிர்பார்ப்பை கடைசி காட்சி வரை நீட்டித்திருக்கிறார் இயக்குனர் சுனில் பாண்டே.
அதீத ரத்தம், 'காதல்' பெயரில் கோமாளித்தனங்கள் என சமீபத்திய சினிமாக்கள் நம் ரசனையில் அஜீரண கோளாறு ஏற்படுத்தி வரும் நிலையில், இப் படைப்பு நல்விருந்து பரிமாறி சாமரம் வீசுகிறது. 'எல்லா ஊரிலும் காதல் ஒன்றே' என்பதைச் சொன்ன தாய்லாந்து வெற்றிப்படமான ஒன் டே வை சிறப்பாக 'ரீமேக்' செய்திருக்கின்றனர்.
ஆக..
பூவே உனக்காக என உருக வைத்து காதலுக்கு மரியாதை செய்து கில்லி யாக ஜெயித்திருக்கிறது படம்

