PUBLISHED ON : ஜூலை 12, 2026

பணம் பாசம் பயம் ஓட்டம்
சந்தர்ப்ப சூழலால் 17 கோடி ரூபாய் வங்கி கொள்ளைக்கு சாட்சியாகிறார் அரசு ஊழியரான ராஜீவன். கொள்ளையர்கள் விபத்தில் இறந்துவிட, திருட்டு பழி ராஜீவன் மீது விழுகிறது. காவல்துறையும், பொதுமக்களும் சேர்ந்து அவர் குடும்பத்தை துரத்த, தப்பிப் பிழைத்ததா ராஜீவனின் கூடு?
வங்கி கொள்ளையர்களின் பணயக்கைதியாக ராஜீவன் இழுத்துச் செல்லப்படும் முதல் காட்சியில் தொற்றிக்கொள்ளும் சுவாரஸ்யம், இடைவேளை வரை நீள்கிறது. ஆமை வேகத்தில் திரைக்கதை நகர்ந்தாலும் கூட கேமரா கோணங்களும், எளிமையான சண்டை காட்சிகளும், பின்னணி இசையும் நம் இருக்கையில் நம்மை சிலையாக்கி விடுகின்றன!
சோகமும் குழப்பமும் நிறைந்த ராஜீவனாக பிருத்விராஜ்; படம் முழுக்க ஒரே முகபாவம் எனினும், அவரது பாத்திர வார்ப்பின் நேர்த்தி அதை மறக்கச் செய்கிறது. நாயகி மீராவாக பார்வதி திருவோத்து; பொறுப்பான குடும்பத்தலைவியாக வழக்கம்போல் 'சிக்ஸர்' சாத்தியிருக்கிறார்!
'சின்னதொரு பிரச்னையை பூதாகரமாக்கும் செய்தி ஊடகங்களும், சமூக வலைதளங்களும், அதில் சம்பந்தப்பட்டவர்களை எப்படி குற்றவாளி ஆக்குகின்றன' என்று முதல்பாதியிலும், அதிகாரவர்க்கம் தன் தவறை மறைத்து மக்களை திசைதிருப்ப செய்திகளை எப்படி உருவாக்குகிறது என்பதை இரண்டாம் பாதியிலும் தோலுரித்து காட்டியிருக்கிறது சமீர் அப்துலின் எழுத்து!
தன்னுடன் கண்ணாமூச்சி ஆடும் போலீசுக்கு தண்ணி காட்டிவிட்டு கொள்ளையர்கள் பதுக்கிய பணத்தை ராஜீவன் தேடி எடுப்பது, அப்பணத்தை தன் பொம்மைகளுக்கு கொடுத்து அவரது இளைய மகள் விளையாடுவது உள்ளிட்ட காட்சிகளில் சமீரின் கதையுடன், 'நீயா... நானா...' நடத்தி ஜெயித்திருக்கிறது நிசாம் பஷீரின் இயக்கம்!
முதல்பாதியில், 'இது 'த்ரில்லர்' போல' என எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் இயக்குனர், இரண்டாம் பாதி இறுதியில் 'ஆக் ஷன், சென்டிமென்ட்' என இப்படி அப்படியுமாய் அலைபாய்ந்திருக்கிறார்; ஆனாலும், 168 நிமி ட படைப்பில் எங்குமே சறுக்கவில்லை.
ஆக..
அடிவாங்கி பிய்க்கப்பட்டு 'கமகம' சால்னாவில் ஊறும் 'பரோட்டா'வாய் ஈர்க்கிறான் இந்த சாமானியன்
