PUBLISHED ON : மே 17, 2026

'டேய் தம்பி... ஓடிருடா...' - கருப்பன்
திருடு போய் திரும்ப கிடைத்த 60 பவுன் நகைகளை நீதிமன்றத்தில் பெற வரும் தந்தையையும் மகளையும் நீதிமன்ற நடைமுறைகள் பந்தாட, வெறுத்துப் போகும் தந்தை, காவல் தெய்வமான கருப்பசாமியிடம் முறையிடுகிறார்; களமிறங்கி ஆடுகிறான் கருப்பன்.
நாம் உணர்ந்து சிலிர்க்கும் ஆவேசக் கருப்பனை, அடியாட் களுடன் சண்டை போட விட்டதிலேயே சறுக்கி விட்டார் இயக்குனர். அதிலும், கத்தி, அரிவாளுடன் எதிர்ப்பவர்களை ஜெயிக்கும் கருப்பனின் மாயசக்திகள், பாட்டி காலத்து 'பெட்டைம் ஸ்டோரிஸ்' ரகம்!
'கங்குவா, ரெட்ரோ புண்களில் கருப்பன் மருந் திடுவான்' எனும் சூர்யாவின் பெரும் நம்பிக்கை, 'தி.மு.க.,வின் 2026 கனவு' போல் நொறுங்கி இருக்கிறது; கருப்பனின் கோணக் கொண்டை கம்பீரத்திற்கும், வசீகரத்திற்கும் சூர்யா சற்றும் பொருந்தவில்லை; 'வழக்கறிஞர் சரவணன்' பாத்திரத்தில், 'நான் மனிதனா, கடவுளா' எனும் குழப்பம் சூர்யாவின் முகமெங்கும்!
சாமானியனின் கடைசி புகலிடமான நீதிமன்றத்தின் தில்லுமுல்லுகளை களமாக்கி, அதன்மீது தன் காமெடி தர்பாரை நிகழ்த்த முயன்று இருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. எழுத்துப்பூர்வமாக தரும் வாதத்தில் நீதிபதிகளுக்கு 'பாயின்ட்ஸ்' வைத்து கொடுப்பது, வழக்கு போட வந்தவர் வழக்கறிஞர் பட்டாளத்துக்கு பிரியாணி வாங்கித் தந்த செலவை கணக்கு பார்ப்பது உள்ளிட்ட காட்சிகள் ரசிக்க வைக்கின்றன; என்றாலும்...
வழக்கறிஞரின் சொல்லுக்கு தலைமை நீதிபதி கட்டுப்படுவதும், தண்டிக்க வந்த கடவுள் குற்றம் செய்தவனுக்கு திரும்பத் திரும்ப வாய்ப்புகள் தருவதும் சட்டசபையை மிஞ்சிய 'குக்கர்' கூத்து!
மனித அவதார கருப்பனுக்கு 'ஹைப்' ஏத்தும் வேலை மட்டுமே த்ரிஷாவுக்கு! வில்லனாக ஆர்.ஜே.பாலாஜி... ஆம்... நாட்டார் தெய்வமான கருப்பசாமி பற்றிய முழு புரிதலி ன்றி திரைக்கதை அமைத்த ஆர்.ஜே.பாலாஜி வில்லன்தான்... சூர்யாவுக்கும்... நம்பி நம்பி போய் முரட்டடி வாங்கும் நமக்கும்.
ஆக...
'இது கங்குவா 2.0 ' என எவனாலும் சொல்ல முடியாது; ரத்தம் கக்கி சுருண்டவன் எப்படி சொல்வான்?
