PUBLISHED ON : ஜூன் 21, 2026

'சசி' செடியில் வாசமாய் இன்னொரு 'பூ'
பூவின் பெயர் செல்வி. அவள் சிரித்தால் அவளோடு சிரிக்கத் தோன்றுகிறது. அவள் அழுதால் கண்ணீர் துடைக்கத் தோன்றுகிறது. அவளது தனிமையை அவள் மனம் கவர்ந்த துணை கொண்டு நிரப்ப அவளது மூத்த மகனுக்கு திடீர் ஆசை. அண்ணனுக்கு தம்பி தோள் தர அம்மாவின் 'மறுமணம்' நோக்கி கதை!
'கணவனை இழந்த பெண்ணை இனி 'வாழ்விழந்த பெண்' என்று சொல்லக் கூடாது' எனும் 'வைராக்கிய' தாம்பூலம் தந்து நம்மை வழியனுப்புகிறது திரைக்கதை. 'கணவன் மட்டுமே அல்ல பெண்ணின் வாழ்வு... கணவன் என்பவன் துணை; அவ்வளவே' என்கிறது கள்ளக் குறிச்சியில் நிகழ்ந்த உண்மை சம்பவம்.
இந்த உண்மையை தன் கலைத் திறமையால் கதையாய் வளைத்திருக் கிறார் இயக்குனர் சசி. நாணலாய் வளைந்து கொடுத்திருக்கும் கதை, தான் சொல்லும் ' கரு' பற்றி இதுவரை சிந்திக்காத மனங்களை நாணிக் குறுக வைக்கிறது! 'ஆண் ஒரு வார்த்தையில சொல்றதை நீங்க இவ்வளவு நீளமா விளக்க வேண்டியிருக்குதே' என, 'மறுமணம்' தொடர் பான பேச்சில் ஆசிரியர் பாத்திரம் வருந்துகையில், அரங்கம் முழுக்க ஆண் இதயங்கள் கிழிபடும் ஓசை!
இடைவேளைக்கு பின் நெடுநேரம் கழித்தே விஜய் ஆன்டனியின் அறிமுகம்; இருபுறமும் அடர்ந்திருக்கும் உயர செடிகளுக்கு நடுவே ஒரு சாலை; இருசக்கர வாகனத்தை தள்ளியபடி அவரும், 'செல்வி'யான ஸ்வாசிகாவும்; நரை கூடிய இருவரும் பரஸ்பரம் பேசி புரிந்து கொள்ள வேண்டும்; அப்புரி தல், 'காதல்' எனும் 'மேலாடை' தரித்திருக்க வேண்டும்; ஸ்டார்ட் கேமரா... ஆக் ஷன்...
இக்காட்சியில் ஒளிப்பதிவும், இசையும், படத்தொகுப்பும், இயக்கமும், செல்வியின் அடர் மவுனமும் கைகோர்த்திருக்கும் அழகு... சசி சார்... உங்களை ஒரு தரம் கட்டிப் பிடிச்சுக்கலாமா?
செல்விம்மா... அந்த பாடல் காட்சியில், முன் செல்லும் விஜய் ஆன்டனியின் தோளை பெரும் காதலோடு தொட முனைந்து, நுரையாய் பொங்கிய நாணத்தால் ஆசைக்கு விலங்கிட்டு உள்ளுக்குள் பூட்டிக் கொண்டாயே... ம்ம்ம்... மனதிற்குள் இன்னும் (சு)வாசமாய் மணக்கிறாய் பூவே.
ஆக...
படம் பார்த்து ஸ்வாசிகா காலில் விழுந்த மிஷ்கினை பெருமூச்சோடு நினைத்து பூரிக்கிறது நம் ரசனை
