PUBLISHED ON : ஜூன் 07, 2026

கோமாளி கூத்தை மிஞ்சும் பரிமளா அண்ட் கோ
'அத்தனை பாத்திரங்களும் பைத்தியமாய் அலைய வேண்டும்; இதனை பார்க்க வருபவனும் பைத்தியம் பிடித்து தலைதெறிக்க ஓட வேண்டும்' எனும் இயக்குனர் பாண்டிராஜின் விபரீத ஆசை 100 சதவீதம் ஜெயித்திருக்கிறது!
பரிமளா எனும் ஜெயராம் குடும்பத்திற்கு ரவுடி வர்கீஸால் ஒரு பிரச்னை. திடீரென அவன் சடலமாக, 'அவன் கழுத்தறுத்தது பரிமளாவா, அவரது மனைவியா அல்லது இரு மகள்களா' எனும் கேள்வித்தாள் நீட்டும் திரைக் கதை... இறுதியில், 'அதுல ஒண்ணும் இல்ல... கீழே போட்டிரு' என்று இளிக்கிறது.
'வர்கீஸை கொன்றது யார் என்பதற்கு விடை தேடும் திரைக்கதையா அல்லது சந்தேகத்தில் இருந்து தப்பிக்க நடுத்தர குடும்பம் செய்யும் முட்டாள் தனங்களைச் சொல்லும் திரைக்கதையா' என்கிற குழப்பம், படத்தின் முதல் பாதியிலேயே துவங்கி விடுகிறது. இதனால், படத்தில் ஊர்வசி பயன் படுத்தும் 'கோடாரி தைலம்' நமக்கும் தேவைப்படுகிறது.
விசாரணை அதிகாரியாக மிஷ்கின்; கதையில் அவர் விசாரிக்கும் வழக்கின் முடிவைக் காட்டிலும் இப்படத்திற்கான ரசிகர்களின் தீர்ப்பை சரியாக யூகித்தே, படத்தின் 'புரமோஷன்' மேடை இருக்கையில் அன்று சரிந்து கிடந்தார் போல!
'ஜெயராம், ஊர்வசிக்கு காமெடி நன்றாக வரும்' என்பது நாமறிந்த உண்மை; ஆனால், இயக்குனர் பாண்டிராஜின் எழுத்தில் நகைச்சுவை இருந்தால் தானே அது அவர்களின் நடிப்பில் வெளிப்படும்! ஜெயராம் அக்கா பாத்திரத்தின் இறப்பை வைத்து 'காமெடி' என்று அவர் எழுதியிருக்கும் யாவும் துளி கலப்படமற்ற துாய விஷம்!
'ஜெயராம் - ஊர்வசி தம்பதியின் இளைய மகள் கனவில் வந்து பூச்சாண்டி காட்டும் சாண்டி குறித்த காட்சிகள் எதற்கு; நொண்டி நடக்கும் சென்ட்ராயன் திடீரென நிமிர்ந்து நடப்பது எதனால்; தனித்து விசாரணை செய்யும் சப் - இன்ஸ்பெக்டர் பாத் திரம் திரைக்கதையில் நிகழ்த்தும் மாற்றங்கள் என்ன' - இப்படியான ஏனோ தானோ விஷயங்கள் 'ஏசி' அரங்கிலும் மண்டையை ஏகத்துக்கும் சூடேற்று வதால்... மண்ட பத்திரம் மக்களே!
ஆக...
பசங்க, கடைக்குட்டி சிங்கம் ரசிகர்களே... உங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
