PUBLISHED ON : செப் 06, 2026

விதைநெல் தந்த வாழ்க்கை
'விதைநெல் உற்பத்திங்கிறது புள்ளதாச்சியை பார்த்துக்கிறது மாதிரி; கவனிப்பு நல்லா இருந்தா விளைச்சல் வீரியமா இருக்கும்!' - தன் 15 ஆண்டு கால விவசாய அனுபவத்தை பளிச்சென்று பகிர்கிறார் 52 வயது விவசாயி ரமேஷ்; கடலுார், ஸ்ரீமுஷ் ணம் அருகிலுள்ள குணமங்கலத்தில் இருக்கிறது இவரது நிலம்.
முதல் பரிட்சை
'அது 1997, ஜூன் மாதம். 'நான் விவசாயம் பார்க்கலாம்னு இருக்கேன்'னு என் 22 வயசுல அப்பாகிட்டே போய் நின்னப்போ, ஏற இறங்க ரெண்டு நிமிஷம் என்னைப் பார்த்தவர், 'உன் பெரிய ண்ணன் பார்த்துக்க முடியாம குத்தகையில இருக்கிற வயல்ல விவசாயம் பண்ணிக் காட்டுடா பார்ப்போம்'னார். அதுதான் விவசாயத்துல நான் எழுதின முதல் பரிட்சை!
நிலத்துல தைரியமா இறங் கிட்டேன். தெரிஞ்ச உரக்கடைக் காரர் விதையும் உரங்களும் தர, அப்பாகிட்டே வேலை பார்த்தவர் நீர் பாய்ச்ச வந்தார். ஆள்கூலி செலவுகளை சமாளிக்க சின்ன அண்ணி நகைகளைக் கொடுத்தாங்க!
நடவுக்கும், களையெடுக்கவும் தான் கூலி ஆட்கள்; வரப்பு வெட்டு, உரம் போடுறது, மருந்தடிப்புன்னு எல்லாத்தையும் நானே செஞ்சேன். உழைப்புக்கு பலன்... அடுத்த ரெண்டு அறுவடையில குத்தகை நிலத்தை மீட்டு, 'அப்பா நான் பாஸ் ஆயிட்டேன்'னு நின்னேன்.
விவசாயம் தந்த உற்சாகத்தில் சக விவசாயிகளை இணைத்து, 'குணமங்கலம் உழவர் மன்றம்' துவக்கி, 2006 முதல் அதன் தலைவராகவும் இருந்துவரும் ரமேஷ், மன்றம் தந்த 'விதை நெல் உற்பத்தி' பயிற்சியால், குறுவை, சம்பா பருவ விதை நெல்களை உற்பத்தி செய்துவருகிறார்.
விதைநெல் உற்பத்தி
விதை நெல்லுக்கு தேவையான 'ப்ரீடர் சீடு'னு சொல்லப்படுற 'கரு விதை'களை வேளாண் பல்கலைக்கழகத்துல வாங்கி, நாத்து விட்டு, நடவு முடிச்சு, களையெடுத்து, பயிர் பிடிச்சு பூக்கிறப்போ அரசு வேளாண் அதிகாரிகளுக்கு தகவல் சொல்லி, 'வேற்றுரக நெல் கலப்பு இல்லை'ன்னும், 'சான்று பெற்ற விதை நெல் உற்பத்தியாளர்'னும் சான்றிதழ் வாங்கினாத்தான் 'விதைநெல்' விற்பனையாகும்.
இப்படியான பலகட்ட சோதனைகளை தாண்டுறதுக்கு, என் ஆறு ஏக்கர் நிலத்தை நான் பக்குவமா தயார் பண்றேன். தை, மாசியில வயல்கள்ல கிடை கட்டாயம்; ஆடியில தக்க புல்லு விதைச்சு, பூக்குறப்போ மடக்கி உழுது, நடவு சமயத்துல 'அசோஸ்பைரில்லம்' மாதிரியான இயற்கை உரங்கள், பயிர் பூத்து வர்றப்போ வேப்பம் புண்ணாக்கு வைச்சு பராமரிக்கிறேன்.
இப்படி நான் கவனிச்சுக் கிறதால என் வயல்ல விளையுற விதைங்க வீரியமானதாகவும், தரமானதாகவும் இருக்கு. இதனாலதான், என் விதை நெல்லுக்கு தாராபுரம் வரைக்கும் செம வரவேற்பு; எனக்கும் சிறந்த அடையாளம் கிடைச்சிருக்கு!
குத்தகை விவசாயியா இருந்த என்னை, உழவர் மன்ற தலைவரா, விதைநெல் உற்பத்தியாளரா உருவாக்கி வைச்சிருக்கு என் நிலம். இந்த அடிப்படையில ஒரு விஷயத்தை என்னால ரொம்ப உறுதியா சொல்ல முடியும்...
தன்னை முழுசா நம்பினவங்களை நிலம் ஒருநாளும் கைவிடாது.
