PUBLISHED ON : ஏப் 19, 2026

பல மனம் கழுவும் ஒரு கொலை
ஒரு தம்பதியின் 10ம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டத்திற்கு, குளுகுளு மலையின் விடுதிக்கு வருகிறது நண்பர்கள் குழு. ஒவ்வொருவர் மனதிலும் நம் மனதில் உள்ளது போல் உறைந்து நிற்கிறது அழுக்கு. அந்த அழுக்கை சுட்டிக்காட்டியே பேசும் பாத்திரத்தில் அவர்களுக்குள் ஒருவர். வாங்கி வந்த கேக் காலியாவதற்குள் அந்நபர் காலியாக, காவல் உதவி ஆய்வாளர் துணையுடன் குற்றவாளியை தேடுகிறது திரைக்கதை!
நண்பர்கள் ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொள்ளும்படியான காரணங்களாய், சடலமானவரின் காரசார பேச்சுகளை அடித்தளமாக்கும் காட்சிகள் சட்டென ஈர்க்கும்படி இல்லை எனினும், நண்பன் எதிரியாகக் காரணமான நமது கடந்த கால விவாதத்தை நினைவுக்கு கொண்டு வருவதில் ஜெயித்திருக்கிறது திரைக்கதை!
'கணநேரத்தில் அன்பு எப்படி வெறுப்பாய் மாறுகிறது' என்பதை திகுதிகுவென பற்றத் துவங்கும் நெருப்பு போல் தன் பின்னணி இசையால் அட்டகாசமாய் உணர்த்தி இருக்கிறார் சாகர் தேசாய்.
'தனக்கு வெளியே உலகம் பார்க்கும் மனிதர்களின் பார்வையில், தனக்குள் ஓர் உலகம் உருவாக்கி வாழ்பவன் என்னவாகத் தெரிவான்' என்பதன் அடையாளமாய் உலவுகிறார் சோஹ்ரப் ஹண்டா. 'நாம் விரும்பாத ஒன்று அடுத்தவனின் விருப்பத்திற்குரியதாக இருக்கும்' என்பதைச் சொல்லும் க்ளைமாக்ஸ், தனக்குள் உலகம் பார்க்காதவர்களால் நிச்சயமாய் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
'இயற்கையை அழகாக படைத்த இறைவன் மனிதர்களை ஏன் இப்படி படைத்து விட்டான்' என கைதாகி செல்பவனை கேட்க வைத்து நிறைவுறுகிறது படைப்பு. 'இக்கேள்வி நமக்கானது அல்ல' என்று கடந்து போகும் யாருக்கும், அந்த டாக்டர் பாத்திரம் சொல்லும் எந்த கருத்தும் ஆச்சரியப்பட வைக்காது. மற்றவர்களுக்கு இப்படி சொல்லத் தோன்றும்...
'டாக்டர் சார்... நீங்கள் மனம் படித்த விதமும், குற்றவாளியை பிடித்தவிதமும் நன்றாக இருந்தது!'
ஆக...
தற்போது காதில் விழுவதை 'பிரசாரம்' என நம்புவோருக்கு இது மிகச்சிறந்த 'த்ரில்லர்'

