PUBLISHED ON : மார் 15, 2026

தீர்ப்பெழுதும் முன் நான் சொல்வதை தயவுசெய்து கேளுங்கள்...
இம்மண்ணிலே பிறந்த பெண்களுக்கு வாழ்வதற்கு பாதுகாப்பில்லை! இதை மறுப்பவர்களில் எத்தனை பேருக்கு கிருஷ்ணகிரி ஊத்தங்கரை மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தி தெரியும்; இது விதியின் குற்றமா அல்லது விதியைச் சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா; பணம் பறிக்கும் கொள்ளை கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்?
குமரி கடலில் 38 அடி உயர பீடத்தில், 95 அடி உயரத்துடன், தான் எழுதிய 133 அதிகாரங்களின் பிரதிபலிப்பாய், 133 அடி உயரத்தில் வானளாவி நிற்கும் வள்ளுவர் சிலை பார்த்து, 'ஏன் வளைந்தபடி நிற்கிறார்' என்று தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கேட்டாராம்; 'அது கனிவின் அடையாளம்' என்றாராம் கணபதி ஸ்தபதி.
இன்று... என் பார்வைக்கு வள்ளுவனின் வளைவுக்கு வேறொரு காரணம் தோன்றுகிறது. ஆம்... இன்று பச்சிளம் குழந்தைகளுக்கும், மாணவிகளுக்கும், பாட்டிகளுக்கும் நிகழும் பாலியல் கொடுமைகளைப் பார்க்கையில்...
வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதுாஉங் கோடா தெனின்
என அய்யன் சொன்ன குறளும், 'ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழ வைக்கும் வளையாத செங்கோல்தான் ' என்று நம் முதல்வரின் தந்தை மு.கருணாநிதி இக்குறளுக்கு சொன்ன பொருளுமே என் நினைவிற்கு வருகின்றன.
இப்போது நீதிமன்றத்திற்கு புரிந்திருக்கும்... என் பார்வையில் அந்த வளைவு இன்று என்னவாகத் தெரிகிறது என்பது! இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார்; எது?
'என் ஒரே தலைவர் ஈ.வெ.ரா.,தான்; என் கட்சியின் 'தலைவர் நாற்காலி' எப்போதும் காலியாகவே இருக்கும்; நான் பொதுச் செயலராகவே பணியாற்றுவேன்' என்று அண்ணாதுரை அன்று சொன்னதை மறந்து, 'அண்ணாதுரை வழியில் நான்' என்று குரல் கேட்டதும் கைதட்டுகிற மக்கள் முக்கிய காரணம்; இம்மக்களின் 'மறதி' மிகமுக்கிய காரணம்!
இம்மறதி களையப்படும் வரை இங்கு எதுவும் ஓயப்போவதில்லை . இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டின் எந்த பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம். வாழ்க... திராவிட மாடல்.

