PUBLISHED ON : மார் 08, 2026

செய்தி: அரியவகை நோய் பாதித்த மனைவியின் உயிர்காக்க அரசிடம் உதவி கேட்கும் கணவர்!
அநீதி: 'குணப்படுத்த இயலாத நோய்' பாதித்த பெண்ணின் மீது கருணை காட்டாத அரசு!
முதல்வரே... கொடும் நோயான 'மோட்டார் நியூரான் டிசீஸ்' பாதிப்புற்றவர் என் 51 வயது மனைவி சீதாலட்சுமி. அவரது சிகிச்சை மற்றும் பராமரிப்பிற்காக லட்சக்கணக்கில் செலவழித்து, கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் நான் திருவேங்கடம்; என் வயது 60.
என் சொந்த ஊர் சிதம்பரம். திருமணத்திற்குப் பின் காஞ்சிபுரம், மாங்காடு வந்தோம். சந்தோஷமாக சென்று கொண்டிருந்த எங்கள் வாழ்வை, 2018ம் ஆண்டு உருக்குலைத்து போட்டது இந்நோய். பிப்ரவரி, 2022ல் படுத்த படுக்கையானாள் என் மனைவி.
'இந்நோய் தசை பலவீனத்தை ஏற்படுத்தி, படுக்கையில் சாய்த்து, சுவாசிக்கும் திறன் பறித்து, இறுதியில் பக்கவாதத்திற்கு வழிவகுத்து ஆயுள் முடிக்கும்' என்கின்றனர் மருத்துவர்கள்; 'இந்நோயை குணப்படுத்த சிகிச்சையில்லை' என்கிறது மருத்துவ உலகம்.
'மருந்து மாத்திரைகளால் அவள் ஆயுளை அதிகரித்து விடலாம்' எனும் நப்பாசையில், அவள் மீதான அன்பில், சம்பாதித்த அனைத்தையும் இழந்து விட்டேன். மாற்றுத்திறனாளி உதவித் தொகையாக அரசு தரும் 2,000 ரூபாய் மட்டுமே தற்போது வருமான ஆதாரம்.
'என் மனைவியின் ஆரோக்கியத்தை மீட்க மருந்தில்லாத சூழலில், எஞ்சிய காலம் நாங்கள் வாழ அரசிடம் உதவி கேட்டு அனுப்பிய மனுக்களுக்கு அளவில்லை; ஆனாலும், பயனில்லை. முதல்வரே... நீங்கள் மனது வைத்தால் மிச்ச மிருக்கும் எங்களின் வாழ்நாள் ஓரளவு நிம்மதியாய் கழியும்; மனமிரங்கி உதவுவீர்களா?
98405 25988

