PUBLISHED ON : மே 31, 2026

என் நம்பிக்கை வேண்டுகிறேன்
செய்தி: கோவில் தேர் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பலி
அநீதி: அரசிடம் இருந்து எந்த நிவாரண உதவியுமின்றி புத்திர சோகத்தில் தவிக்கும் தாய்
முதல்வரே... தேர் சக்கரத்தில் சிக்கிய கன்றுக்கு நீதி கேட்ட பசுவின் அதே உணர்வோடு, இம்மியும் மாற்றமில்லாத அதே வேதனையோடு நிற்கும் நான் 61 வயது சாந்தி. கடந்த மார்ச் 29 அன்று, என் கன்றும் தேர் சக்கரத்தில் சிக்கி இறந்து விட்டது.
இந்துசமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட சென்னை, மண்ணடி, மல்லிகேஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா தேரோட்டத்தில், 25 வயது நிரம்பிய என் மகன் குபேந்திரன் தன்னார்வலராக தேர் சக்கரத்திற்கு கட்டை வைக்கும் திருப்பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த துர்சம்பவம். அப்போதைய அறநிலையத்துறை அமைச்சரும், துறைமுகம் தொகுதியின் உங்கள் வேட்பாளரும் நேரில் வந்து ஆறுதல் தந்தனர்.
நிகழ்ந்தது எதிர்பாராத விபத்துதான்; ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், கணவரை இழந்த நான் தற்போது இழந்திருப்பது என் இரு நம்பிக்கையில் ஒன்றை; இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 'அதான் அரசுப்பணிக்கு படித்து வரும் மூத்த மகன் இருக்கிறானே' என்று கடந்து போகாது, என் வயோதிகத்தை கருத்தில் கொண்டு எனக்கு உதவும்படி வேண்டுகிறேன்.
நான் கேட்பது என் மகனது உயிருக்கு விலையல்ல; அவன் இருந்திருந்தால் ஒரு மகனாக அவன் தாய்க்கு தரும் நம்பிக்கை. தமிழக முதியோர்களின் மகனாக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட எங்கள் முதல்வரே... எனக்கு உதவுவீர்களா?
