PUBLISHED ON : ஏப் 19, 2026

ருசிக்கத் துாண்டி புளிக்கும் ஸ்ட்ராபெர்ரி
கம்யூனிஸ்ட் கட்சி கேரளத்தில் முதன்முறையாக ஆட்சிக்கு வந்த 1957ம் ஆண்டு கதைக்களம். நில பிரபுத்துவ ஒழிப்பு, நில சீர்திருத்தம் உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரான கலவரம் வழியே விரிகிறது கதை.
காணியார் மலை கிராமத்தின் தேவாலயம், தனக்கு சொந்தமான நிலத்தை கம்யூனிஸ்ட் ஆட்சியில் இழக்க நேரிடும் என்பதால், தனக்காக சண்டை செய்ய கிருஷ்ண பிள்ளையை நியமிக்கிறது. திரை மறைவில் இருக்கும் சதியை கிருஷ்ணபிள்ளை உணர்ந்தபின் நடப்பது என்ன?
உண்மை சம்பவத்திற்குள் கற்பனை பாத்திரங்களைப் புகுத்தி, மக்களின் தெய்வ நம்பிக்கை மற்றும் ஜாதி பிரிவினை கொண்டு திரைக் கதையை நகர்த்த முயற்சித்திருக்கிறார் இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆன்டனி. கிருஷ்ணபிள்ளையின் குழந்தைப் பருவம் பற்றிய தகவல்களை கதை நெடுகிலும் ஆங்காங்கே துாவி இருக்கிறது படத்தொகுப்பு!
துாவப்பட்ட இக்காட்சிகளுக்கும், க்ளைமாக்ஸில் குஞ்ஜாம்பு நம்பியார் மீது கிருஷ்ண பிள்ளை ஈட்டி எறிவதற்குமான கடந்தகால தொடர்பை இணைத்த விதம், நம் நரம்புகளை புடைக்க வைக்கிறது. கயாடு லோஹரின் 'ரெபேக்கா' பாத்திரம் மனம் கவர்ந்தாலும், 'காதல்' உள்ளிட்ட உணர்ச்சிகளுக்கான முகபாவங்கள் 1950களுக்கு ஏற்ப இல்லை!
டொவினோ தாமஸ் சம்பந்தப்பட்ட பல காட்சிகள் இக்காலத்து மசாலா பட பாணியில் இருப்பது கதைக்களத்திற்கு அந்நியப்பட்டு நிற்கிறது. '131 நிமிடங்களில் பாடல்கள் மற்றும் சண்டைகள் தலையீடு குறைவு' என்றாலும், இவ்வாய்ப்பில் சுவாரஸ்யம் கூட்டத் தவறி விட்டனர்.
'கேரளத்தில் இன்று பெரும்பான்மை நடுத்தர மக்கள் அனுபவிக்கும் நிலம், எத்தகைய சதிகளை கடந்து அவர்கள் வசம் வந்தது' என்கிற உணர்ச்சிகரமான வரலாற்றை இந்த அளவிற்கு சுமாராக புனைவில் சொல்லி இருக்க கூடாது.
ஆக...
'இந்த நிலம் எனக்கு சிக்குச்சு... நீ செத்தே' என்று கர்ஜிப்பவரின் அரசியல் பரிதாபம் போலுள்ளது படம்

