PUBLISHED ON : ஏப் 19, 2026

'பூ பேசுகிறதோ' என எண்ணத் துாண்டுகிறாள் ஜெயராமச்சந்திர மூர்த்தி - மகாலட்சுமியின் மகளான 11 வயது ஜியா ஸ்ரீ. திண்டுக்கல், கோட்டூர் கிராமத்து அரசு துவக்கப் பள்ளியின் 5ம் வகுப்பு மாணவியான இவர், அக்கிராமத்தில் நிகழும் வித்தியாசமான திருவிழாவின் நிலா பெண்.
அது என்னடாம்மா நிலா பெண்?
அது... திருவிழா நாள்ல, 'நிலா பெண்'தான் சாமி; அவ முன்னாடி எல்லா பெரியவங்களும் மா விளக்கு வைச்சு கும்பிடுவாங்க; இந்த வருஷம் நான்தான் சாமி!
திண்டுக்கல் வேடச்சந்துாரில் இருந்து 16 கி.மீ., தொலைவில் இருக்கிறது கோட்டூர். இங்கே, பவுர்ணமிக்கு முந்தைய ஏழு நாள் இரவுகளில் மாசடச்சி அம்மன் கோவிலில் அதிக நேரம் விழித்திருக்கும் சிறுமி, 'நிலா பெண்' ஆக தேர்வாகிறார்.
'தை பவுர்ணமி' நாளில் திருவிழா அரங்கேறுகிறது. அடுத்த மூன்றாண்டுகளுக்கு அச்சிறுமியே நிலா பெண்; அதற்குள் அவர் பூப்பெய்தி விட்டால் வேறு சிறுமி தேர்வாகிறார்.
ஜியா ஸ்ரீக்கு என்னென்ன அலங்காரம் பண்ணினாங்க...
அன்னைக்கா... ம்ம்ம்... ராத்திரி மாசடச்சி அம்மன் கோவில்ல எல்லாரும் கூடி, மேள தாளத்தோட சரளிமேட்டுக்குப் போனோம். அங்கே மஞ்சள் கலர் ஆவாரம் பூ கிரீடம், மாலை, காப்பு எல்லாம் போட்டு அலங்காரம் பண்ணி என்னை 'நிலா பெண்'ணா மாத்தினாங்க!
தலையில பூக்கூடை, விளக்கு சுமந்து நான் நடக்க, மறுபடியும் மாசடச்சி அம்மன் கோவிலுக்கு வந்து, என் முன்னாடி மாவிளக்கு எடுத்து எல்லாரும் கும்மி பாட்டு பாடுனாங்க.
அடுத்து பிள்ளையார் கோவில், மாரியம்மன் கோவில்னு வரிசையா கூட்டிட்டுப் போய் கும்மி பாட்டு பாடிட்டே... இந்தா... இந்த ஜெயக்குமார் தாத்தாதான் அன்னைக்கு என்னை பயம் காட்டிட்டாரு!
அடடா... பிள்ளையை என்னய்யா சொன்னீங்க?
'மாவிளக்கு மொத்தத்தையும் சாப்பிட்டுதான் எந்திரிக்கணும்னு சொன்னேன்; அதைத்தான் சொல்றா' சிரித்துக் கொண்ட 52 வயது ஜெயக்குமார், 'நிலா பெண்' விழா உருவான கதை சொன்னார்...
எங்க பூர்வீகம் கொங்கு மண்டலம். பத்து தலைமுறைக்கு முன்னாடி இங்கே பஞ்சம் பொழைக்க எங்க முன்னோருங்க வந்திருக்காங்க. அப்போ, வயது கடந்தும் 'பெரிய மனுஷி' ஆகாத பெண் குழந்தைகளுக்கு விரும்புனதை செஞ்சுக் கொடுக்க ஊர் நடத்தின சடங்கு, இன்னைக்கு ஊர் செழிக்க இப்படி தொடருது.
ராத்திரி 9:00 மணிக்கு துவங்குற இந்த கொண்டாட்டம், விடியுறப்போ ஊர் பொதுக் கிணத்துல, தான் சுமந்துட்டு வர்ற பூக்களை 'நிலா பெண்' கொட்டி, அது மேல விளக்கை மிதக்க விட்டதும் முடிஞ்சிரும்.
ஜெயக்குமார் பேசியதை கேட்டு...
தான் பிப்ரவரி 1, 2026ல் செய்ததை நினைவூட்டி புன்னகைத்த ஜியா ஸ்ரீயின் முகத்தில் பிரகாசமாய்... நிலா.

