PUBLISHED ON : மே 31, 2026

குருவருள் பெற்றவன் நான் - ' நாதஸ்வர கலைஞர்' காந்தி
'நீ ஒன்றுதானா என் சங்கீதம்; 'பிலஹரி' நீ ஒன்றுதானா என் சங்கீதம்' எனும் உன்னால் முடியும் தம்பி படத்திற்கான பாடல் வரிகளுக்கு இசையமைத்த இளையராஜா, சாதாரண நாதஸ்வர வித்வானான இந்த திருவண்ணாமலை காந்தியை பாராட்டி பரிசளித்தபோது என் காலுக்கு கீழே நழுவியது என் பூமி.
அன்று மனம் முழுக்க, என் குருநாதர் ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளையின் நினைவுகள்!
ஊனிலும் உயிரிலும் நடராஜர்
மத்திய அரசின் 'அம்ரித்' விருதை 2022ம் ஆண்டில் பெற்ற என் குருநாதரைப் பொறுத்த வரை, கலையும் நடராஜரும் ஒன்று; 50 ஆண்டுகளாக அவரது நாதஸ்வர இசை இல்லாது சிதம்பரம் நடரா ஜர் கோவிலின் விழாக்கால பூஜைகள் இல்லை! அதுவும், மார்கழி, ஆனி மாதங் களில் நிகழும் 11 நாள் தேர் திருவி ழாவில், 'தீர்த்த மல்லாரி'யில் துவங்கி அவர் வாசிக்கும் மல்லாரி ராகங்கள்... அடடா... 'கறுப்பு' கல்லும் கரைந்து விடும்!
'நடராஜருக்கு நாதஸ்வரம் வாசிப்பதன் மூலம் இப்பிறவிக்கு அர்த்தம் சேர்ப்பதாய் நம்பு கிறேன்' என அவர் யாரிடம் சொல்லும்போதும், 'அன்பும் சிவமும்...' எனும் திருமூலரின் திருமந்திரம் எனக்குள் ஒலிக்கத் துவங்கிவிடும்.
கற்றுக்கொண்டே இருப்பவன் மிகச்சிறந்த கலைஞன்
ஆமாம்... என் குரு மிகச் சிறந்த கலைஞர். அவரிடம் இருந்து நான் தனியாக வந்த பின் ஒரு கச்சேரியில் என் வாசிப்பைக் கேட்டவர், 'நீ வாசித்தது சுத்த பங்காள ராகம்; ஆனால், என்ன கீர்த்தனை' என்று கேட்டார். பணிவோடு நான், 'ராமபக்தி சாம்ராஜ்யம் கீர்த்தனைங்க அய்யா' என்றேன்.
ரசித்தார்... புன்னகைத்தார்... எதுவும் சொல்லாது என் முதுகில் தட்டிக் கொடுத்தபடி நகர்ந்தார். நிச்சயமாக நான் சொல்கிறேன்... அந்த கீர்த்தனை என்ன வென்று அன்று என் குருநாதர் அறியாமல் இல்லை; எனது ஞானம் உணர்ந்து பூரிக்க ஒரு தந்தையாய் அவருக்கு அன்று பெரு விருப்பம்; அவ்வளவுதான்!
இடி இறங்கிய நாள்
அக்டோ பர் 5, 2025 அன்று புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி; திருவண்ணாமலை கோவில் நடராஜருக்கு அபிஷேகங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன; நான் அங்கு நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருக்க, என் அலை பேசி இடைவிடாது அலறிக் கொண்டிருந்தது. பூஜை முடித்து வந்து அந்த எண்ணில் அழைத்தேன்.
'அய்யா தவறிட்டாருங்க' என்றது ஒரு குரல்; என்னுள் இடி இறங்கியது; நடராஜர் பக்கம் திரும்பினேன்; 95 வயது குருநாதர் தெரிந்தார்; கண்ணீர் பெருக கையெடுத்து வணங்கினேன். அன்றைக்குப் பிறகு அதே உணர்வில் என் குருநாதரை வணங்கியது...
'நீங்கள் வாசித்த 'பிலஹரி' ராகம் நன்றாக இருந்தது' என்று என்னை இசைஞானி இளையராஜா பாராட்டிய இந்த ஜனவரி யில் தான்.
காந்தி: 94428 09796
