PUBLISHED ON : ஜூலை 12, 2026

கந்தகத்தில் கலந்த காதல்
'மூச்சு விட்டுட்டு இருக்கும் போதே ஒரு ஆம்பளை தன்னை நடைபிணமா உணரணும்னா
அவன் தன் மனைவியை இழந்திருக்கணும்!' - கடைசி வார்த்தை வெளி வருவதற்குள்
கருப்பண்ணன் கண்களில் பொங்குகிறது கண்ணீர்!
விருதுநகர், சேர்வைக்காரன் பட்டியைச் சேர்ந்த 50 வயது கருப்பண் ணன் மறக்க முயலும் கறுப்பு ஞாயிறு ஏப்ரல் 19, 2026; அன்று பிற்பகல் கட்டனார் பட்டி வனஜா பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 25 பேரில் கருப்பண்ணன் மனைவி காளியம்மாளும் ஒருவர்!
என்னை ஆளாக்கியவள்
எங்களுக்கு கல்யாணமான புதுசுல ஒருநாள், என் பேச்சுக்கு எதிர்பேச்சு பேசிட்டு இருந்தான்னு ஒரு வேகத்துல அவளை அடிச்சிட்டேன். அவ்வளவு தான்... கோவிச்சுட்டு அம்மா வீட்டுக்கு போயிட்டா. 'போடி...'ன்னு நானும் மூணு மாசம் வீம்புல இருந்துட்டேன்!
பசி... என் காளியம்மா அன்பை எனக்குப் புரிய வைச்சது. அன்னைக்கு சரணடைஞ்ச என்னை ஆளாக் கினது அவதான். குடும்பத்துக்காக நான் படுற கஷ்டத்தைப் பார்த்து அவளும் என்கூட 'பட்டாசு கம்பெனி' வேலைக்கு வர ஆரம்பிச்சா!
முப்பது வருஷம் ஜோடி பறவையா நாங்க திரிஞ்சோம். கம்பெனியில கூட, என் எச்சில் தட்டை நான் எடுத்தது இல்லை; அவ என்னை எடுக்க விடவே மாட்டா. பார்க்கிறவங்களுக்கு நான் அவளை வேலைக்காரியா நடத்துறதா தோணும்; ஆனா, அது என் மேல அவ வைச்சிருந்த 'அன்பு'ன்னு எனக்கும் அவளுக்கும் மட்டும்தான் தெரியும்!
அவள் என் சாமி
அந்த பட்டாசு கம்பெனிக்கு வேலைக்கு போனாலும், எங்க ரெண்டு ஏக்கர் மானா வாரி நிலத்துல விவசாயத்தை நாங்க விடலை. வருஷத்துக்கு ஒரு தடவை பருத்தி போடுவோம். 'கடன் வாங்கி இந்த காட்டை இப்படி கட்டி இழுக்குறது அவசியமா' ன்னு கேட்டா...
'லாபமில்லைன்னாலும் கையில நிற்கிற நாலு காசுல பிள்ளைகளுக்கு நகை நட்டு சேர்க்கலாமே'ன்னு மகராசி சிரிச்சுக்கிட்டே சொல்லுவா! அவளுக்குன்னு எதையும் வைச்சுக்கத் தெரியாது; அவளுக்கு தெரிஞ்சதெல்லாம் ரெண்டு மகள், மகனோட சந்தோஷம் மட்டும் தான். இந்த வீட்டுக்கே அவதான் சாமி; நிஜமாவே இப்போ 'சாமி' ஆயிட்டா!
அந்த கறுப்பு நாளில்...
புதுவீடு கட்டின கடனுக்கு அன்னைக்கு கடைசி தவணை; நான் பணம் கட்ட போயிட்டேன். 'எல்லா நாளும் நல்லபடியா வீடு திரும்ப முடியாது'ன்னு பட்டாசு கம்பெனி வேலைக்கு போற எல்லாருக்கும் தெரியும்; அன்னைக்கு வேலைக்குப் போன என் சாமிக்கும் அது நல்லாவே தெரியும்.
ஆனா, 'நமக்கு ஏதாவது ஒண்ணு ஆயிருச்சுன்னா நம்ம வீட்டு ஆளுங்க நம்ம பற்களை வைச்சுதான் நம்ம உடலை அடையாளம் கண்டுபிடிப் பாங்க'ன்னு... (உடைந்து அழுகிறார்) ஒருநாளும் அவ நினைச்சுப் பார்த்திருக்க மாட்டா!
'ம்ஹும்... என்ன நடந்தாலும் எங்களுக்கு பட்டாசு கம்பெனி தானே கதி; அவகூட இருந்த நாட்களை நினைச்சுக்கிட்டே என் நாட்களை நான் நகர்த்திட்டு இருக்குறேன்.
