PUBLISHED ON : ஆக 16, 2026

சுகவாழ்வு தந்த பனை சொளவு
'சொல் வழக்குல 'சொளவு'ன்னு சொல்லப்படுற 'சுளகு' அல்லது முறம்; இதுல
புடைக்கிறது பெரும் வித்தை; ஒரு காலை நீட்டி, மறுகாலை மடக்கி, கைகட்டை
விரல்களால சொளவு பட்டையை கவ்வி, மத்த விரல்களால அதோட முதுகுல செல்லமா
தட்டி, அப்படி வீசி புடைக்குறப்போ துாசி பறந்து, கல்லும், குருணையும்
பிரிஞ்சு அரிசி தனியா ஒதுங்கிரும்!'
அரிசி புடைப்பதை கலை நேர்த்தியோடு சொல்லும் வள்ளியூரைச் சேர்ந்த 64 வயது பாலகிருஷ்ணனுக்கு, சொளவு முடைவதில் அரை நுாற்றாண்டு அனுபவம்!
சொளவு பிரசவம்
ஒருகாலத்துல ஊரைச்சுத்தி பனை மரமா நின்னுச்சு. பதநீர் இறக்குறப்போ, நல்லா விளைஞ்ச பனையில இருந்து, வெள்ளையும் மஞ்சளுமா இருக்குற குருத்தோலையை வெட்டி எடுத்து பக்குவப்படுத்தி வைச்சுப்போம். மார்கழி, தையிலதான் மட்டை கிடைக்கும்ங்கிறதால, பனையில ஓலை கழிக்கிறப்போ மொத்தமா பச்சை மட்டைகளையும் வாங்கி காயப் போட்டிருவோம்.
'அடிப்பாகத்துக்கு ஓலை ஈர்க்கு, கொம்பு இல்லாத மாட்டோட முகம் மாதிரியான வடிவத்துக்கு பனை மட்டை, இரண்டையும் இணைக்க குருத் தோலை'ன்னு ஒரு சொளவு செய்ய பனையோலையோட எல்லா பாகமும் தேவைப்படும்.
சந்தையும் சங்கடமும்
பத்திருபது வருஷங்களுக்கு முன்னால ஒரு அறு வடை சீசனப்போ, ஒரே நாள்ல 200 சொளவு வரைக்கும் நான் வித்திருக்கேன். நம்ம வியாபாரம் வள்ளியூர் வெள்ளிக்கிழமை சந்தையிலதான்!
அந்த சந் தை எம்புட்டு ரம்மியமா இருக்கும் தெரியுமா; ஸ்பெஷல் சேமியா பாயாசம், காணம் பயிறு சுண்டல்னு அங்கே விதவிதமா சாப்பிடலாம்; இது ஒருபக்கம் சந்தோஷமான ஞாபகம்னா, இன்னொரு பக்கம்... ப்ப்ச்ச்ச்!
அங்கே, களக்காடு பக்கத்துல இருந்து ரொம்ப வயசான பாய் ஒருத்தரும் சொளவு கொண்டு வருவார்; அவரு எங்களை மாதிரி ஆளுககிட்டே மொத்தமா வாங்கி விற்கிற வியாபாரி. என்னோடது சொந்த சரக்குங் கிறதால கூட்டி குறைச்சு வித்திருவேன். அந்த பெரியவர் விற்காத தன் சொளவுகளோட என்னை திட்டிட்டு போவாரு.
யார் வியாபாரத்தையும் தட்டிப்பறிக்க நான் கடை போடலைன்னாலும் அந்த வசவு மட்டும் அப்படியே மனசுல தங்கிருச்சு. இன்னைக்கும் நான் நாகர்கோவில் சந்தைக்கு சொளவு கொண்டு போறப்போ, அவரோட அந்த வருத்தம் மனசை அறுத்துக் கிட்டுதான் இருக்கு!
மவுசு போன சொளவு
கதிரறுத்து களத்துல நெல் அடிச்ச வரைக்கும் சொளவுக்கும் மவுசு இருந்துச்சு. அறுப்பு சீசன் ஆரம்பிச்சதுன்னா, நெல்லு துாத்த, விசிறி விடன்னு ஒரு களத்துக்கு நாலஞ்சு சொளவு தேவைப் படும்.
சாஸ்தா வழிபா டு, கோவில் கொடைன்னு வரிசை கட்டி வர்ற கொண்டாட்டங்களுக்கும் தேவைப் படும்; ம்ஹும்... என்னைக்கு வயக் காட்டுக்குள்ளே 'அறுப்பு மிஷின்' வந்திறங்கிச்சோ அன்னைக்கே சொளவோட மவுசு போயிருச்சு.
ஒருகாலத்துல பொண்ணு லட்சணத்தை பார்க்கிறதைவிட, பொண்ணுக்கு புடைக்கத் தெரியுமான்னு பார்த்ததா எங்க அம்மா சொல்வாங்க! ஆனா, இந்த தலைமுறைக்கே இது ஆச்சரியப் பொருள் ஆயிருச்சு; நாளைக்கு கண்டிப்பா இது அருங்காட்சியகத்துல மட்டும்தான் இருக்கும்.
