PUBLISHED ON : ஜன 11, 2026

விஜயநகர நாயக்க சிற்பிகளது தனித்த பாணிகளில் ஒன்று, 'மோகினிகள்' என்று அழைக்கப்படும் கொடிப்பெண்கள்.
இறைவனை காணவரும் பக்தர்களை வரவேற்பது பேரழகிகளாகத் திகழும் இக்கொடிப்பெண்களின் பணி. இவ்வழகு மோகினிகளில் ஒருத்தி... திருவண்ணாமலை, தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோவில் கொடிப்பெண்!
ராஜகோபுர இரண்டாவது நிலைக்காலின் தென்புறத்தில், வலக்கரத்தை தொடை மீது வைத்து, இடக்கர விரல்களால் கொடியைப் பற்றி ஒயிலாக நிற்கும் இப்பேரழகியின் முகத்தில் ஒளிர்கிறது மந்தகாசப் புன்னகை!
அழகியின் வலப்புறம் மேலெழும் கொடியில் ஏறியபடி இரண்டு குரங்குகள்; இதற்கு கொஞ்சம் மேலே மூன்று கிளிகள்; அதிலொன்று தலைகீழாக மற்றொன்றுடன் அழகுற கொஞ்சுகிறது. மோகினியின் தலைக்கு மேல் வளைந்திருக்கும் கொடி மீது படமெடுத்த நிலையில் பாம்பு; தொங்கும் கொடியில் இலைகள், காய், கனிகள்; கனி கொத்திலிருந்து ஒரு பாம்பின் தலைமட்டும் வெளிப்படுகிறது!
'தலையில் 'குந்தளம்' எனும் கொண்டை, நெற்றியில் 'தொய்யகம்' எனும் சுட்டி, காதுகளில் 'கடிப்பு' எனும் ரத்தின காதணி, கழுத்திற்கு மணி / கண்டிகை / சவடி / சரப்பளி நகைகள், தோள்களில் வாகு மாலைகள், கணுக்கால் வரையில் பட்டாடை உள்ளிட்ட சர்வ அலங்காரங்களுடன், பெண்மையின் நளினம் திறம்பட செதுக்கப்பட்டிருக்கிறது' என்று சிற்பியை பாராட்டுகிறார் திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவ செயலர் ச.பாலமுருகன்.

