PUBLISHED ON : மே 24, 2026

மலைக்குன்றுகளுக்கு மத்தியில் வற்றாத சுனை அருகில் ஒரு வேப்ப மரத்தடியில், காட்டுப்பன்றியுடன் மோதிக் கொண்டிருக்கிறான் இவ்வீரன்.
இவனை தொல்லியலாளர்களும் அரசு ஆவணங்களும் 'பன்றிக்குத்தி பட்டான்' எனச் சொல்ல, உள்ளூர் மக்களோ தாங்கள் கேட்டதை தரும் 'பச்சி மூப்பன்' என்கின்றனர். பன்றியுடனான மோதலில் உயிர்நீத்து தெய்வமான இந்த முப்பாட்டனை தரிசிக்க, திண்டுக்கல் மாவட்டம் நரசிங்கம்பட்டியின் 'கோம்பை காடு ' பகுதிக்கு வர வேண்டும்.
ஊர் நன்மைக்காக போராடி உயிர் நீத்தவர்களுக்கு 'நடுகல்' வைக்கும் மரபுப்படி, காட்டுப் பன்றியுடன் போராடி உயிர் நீத்த இவ் வீரனுக்கு வைக்கப் பட்டிருக்கும் இந் நடுகல், நான்கடி உயரம், இரண்டரை அடி அகலத்தில், கையில் துப்பாக்கியுடன் இருக்கிறது!
துப்பாக்கி இருந்தும் தோட்டா பாய்ச்சுவதை தவிர்த்து பன்றியுடன் ஆக்ரோஷமாய் மோதும் வீர ன ் , பன்றியின் முதுகில் தன் குறுவாளை பாய்ச்ச, அவனுக்கு உதவும் வகையில் பன்றியின் முதுகில் ஏறி அதனை கடித்தபடி அவனது நாய்!
வீரனின் வளைந்த கொண்டை, குண்டலம், வீரக்கழல்கள், முறுக்கிய மீசை, கால் மூட்டு வரையிலான வேட்டியின் மடிப்புகள், கலை நயமிக்க இடுப்பு கச்சை, குறுவாள்/ துப்பாக்கியின் கவின்மிகு வேலைப்பாடுகள், பன்றியின் கீழ் தாடையில் துருத்தி நிற்கும் தந்தம் உள்ளிட்ட நுணுக்கங்கள் சிற்பியின் கலைத்திறனை காவியமாக்கி இருக்கின்றன.
'இது, 17ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது' எனச் சொல்லி பிரமிக்க வைக்கிறார் நெல்லுார் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியர் கருப்பையா.
